திவால் ஆகும் நிலைக்கு சென்றதா ரோல்ஸ் ராய்ஸ்? கோடீஸ்வரர்கள் விரும்பும் கார் நிறுவனத்தின் அதிர்ச்சி பின்னணி!
இங்கிலாந்தை சேர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-Royce) நிறுவனத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி. சார்லஸ் ரோல்ஸ் மற்றும் ஹென்ரி ராய்ஸ் ஆகியோரால், கடந்த 1906ம் ஆண்டு, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. இவர்களின் பெயர்களை ஒருங்கிணைத்துதான், ரோல்ஸ் ராய்ஸ் என நிறுவனத்திற்கு பெயர் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
1906ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் என்றாலும் கூட, 1884ம் ஆண்டில் இருந்தே ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் வரலாறு தொடங்கி விடுகிறது. அந்த சமயத்தில், ஹென்ரி ராய்ஸ் எலெக்ட்ரிக் மற்றும் மெக்கானிக் வியாபராத்தை மேற்கொண்டு வந்தார். இவர் கடந்த 1904ம் ஆண்டு தனது முதல் மோட்டார் காரை உருவாக்கினார்.

அதே ஆண்டு மே மாதம் சார்லஸ் ரோல்ஸை அவர் சந்தித்தார். அந்த சமயத்தில் சார்லஸ் ரோய்ஸின் நிறுவனம் லண்டனில் தரமான கார்களை விற்பனை செய்து கொண்டிருந்தது. இதை தொடர்ந்துதான் கடந்த 1906ம் ஆண்டு மார்ச் மாதம் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பிறந்தது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தரமான கார்களை தயாரிப்பதற்கு பெயர் பெற்றது. ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருந்தாலே தனி மரியாதைதான். ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் கார் என்ற பெருமையை ராய்ஸ் 10 பெறுகிறது. இந்த காரில், 1.8 லிட்டர் 2 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. இதனுடன் 3 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருந்தது.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் கார்கள் மட்டுமின்றி, விமானத்திற்கான இன்ஜின்களை தயாரிப்பதற்கும் பெயர் பெற்றது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. முதல் உலகப்போரின் போது, இங்கிலாந்தின் தேவைகளை கருத்தில் கொண்டு, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் விமானத்திற்கான முதல் இன்ஜினை தயார் செய்தது. அதற்கு ஈகிள் என பெயரிடப்பட்டது.
ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் என்றாலே, அதன் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டஸி நம் நினைவிற்கு வரும். இது கடந்த 1911-ம் ஆண்டு சார்லஸ் சைக்ஸ் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின்போது, பிரிட்டீஷ் ராணுவத்தால் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் பயன்படுத்தப்பட்டன. ராணுவ வீரர்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து என பல்வேறு காரியங்களுக்காக அவை பயன்படுத்தப்பட்டன.

அத்துடன் ஆம்புலன்ஸ்களாகவும் கூட ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் பயன்படுத்தப்பட்டன. ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் மிக பிரபலமான மாடல்களில் ஒன்றான சில்வர் ஷேடோ, கடந்த 1965ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. மோனோகோக் பாடி மற்றும் செல்ஃப்-லெவலிங் சஸ்பென்ஷன் உடன் வந்த முதல் ரோல்ஸ் ராய்ஸ் கார் இதுவாகும்.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் என்றாலே ஆடம்பரமும், பகட்டமும்தான் நம் நினைவிற்கு வருகிறது. அப்படிப்பட்ட கார்களை தயாரித்து வரும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் ஒரு காலத்தில் RB211 ஹை-பைபாஸ் டர்போஃபேன் இன்ஜின்கள் காரணமாக திவால் ஆகும் நிலைக்கே சென்றது என்றால், உங்களால் நம்ப முடிகிறா? ஆனால் இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.
ஆனால் இங்கிலாந்து அரசாங்கம் தலையிட்டதால், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் மீட்கப்பட்டது. தற்போதைய நிலையில் பிஎம்டபிள்யூ நிறுவனம்தான் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தை நிர்வகித்து கொண்டுள்ளது. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருந்தாலே உங்களுக்கு நிச்சயமாக தனி மரியாதை கிடைக்கும்.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்கள் வெற்றியின் அடையாளமாக பார்க்கப்படுகின்றன. இந்தியாவை பொறுத்தவரையில், தொழில் அதிபர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani), பாலிவுட் நடிகர் (Ajay Devgn) மற்றும் நடிகர் விஜய் (Vijay) போன்ற பிரபலங்கள் பலரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கதை வளர்ச்சி பாதையில் ஆரம்பித்து, பின்னர் வீழ்ச்சி பாதைக்கு சென்று, மீண்டு எழுகிறது. அப்படிப்பட்ட ஒரு நிறுவனம் இன்று வெற்றியின் அடையாளமாக மாறியிருப்பது ஆச்சரியம் என்பதுடன், இது உண்மையிலேயே உத்வேகம் அளிக்க கூடிய கதைதான்.


Click it and Unblock the Notifications









