உலகின் அதிவேக மின்சார விமானத்தை உருவாக்கும் ரோல்ஸ்ராய்ஸ்!
பேட்டரியில் இயங்கும் உலகின் அதிவேக குட்டி விமானத்தை ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த மின்சார விமானத்தின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

உலகின் மிகவும் பிரபலமான ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ்ராய்ஸ் விமான உதிரிபாகங்கள் துறையிலும் புகழ்பெற்று விளங்குகிறது. பல்வேறு நிறுவனங்களின் விமானங்களிலும் ரோல்ஸ்ராய்ஸ் எஞ்சின்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில், தனது விமான உதிரிபாகங்கள் தயாரிப்பு அனுபவத்தை வைத்து சிறிய ரக மின்சார விமானத்தை உருவாக்கி வருகிறது. இந்த விமானம் குறித்த தகவலை ஒரு மாதிரி படத்துடன் ரோல்ஸ்ராய்ஸ் வெளியிட்டு இருக்கிறது.

இந்த விமானத்தில் ஒருவர் மட்டுமே பயணம் செய்யும் இருக்கை வசதி இருக்கும். அதாவது, தனிநபர் பயன்பாட்டுக்கு ஏற்ற அம்சங்களுடன் இந்த மின்சார விமானத்தை ரோல்ஸ்ராய்ஸ் உருவாக்கி வருகிறது.

இந்த விமானத் தயாரிப்பு திட்டத்தை ACCEL என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு இங்கிலாந்து அரசாங்கம் நிதி உதவி அளித்து வருகிறது.

மின்சார விமானத் தயாரிப்பில் அனுபவம் வாய்ந்த YASA, Electroflight உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த மின்சார விமானத்தை ரோல்ஸ்ராய்ஸ் தயாரித்து வருகிறது.

இந்த மின்சார விமானத்தில் பிரத்யேக தொழில்நுட்பத்திலான அதிக திறன் வாய்ந்த பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்பட இருக்கிறது. முழுமையாக சார்ஜ் செய்தால் 320 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை தருமாம். லண்டன் முதல் பாரிஸ் வரை செல்வதற்கான வாய்ப்பை வழங்குமாம்.

அதேபோன்று, மணிக்கு 482 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கும். மேலும், அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த மின்சார விமானத்தை ரோல்ஸ்ராய்ஸ் உருவாக்கி வருகிறது.

அடுத்த ஆண்டு மார்ச் முதல் மே மாதத்திற்கு இடையில் இந்த புதிய மின்சார விமானத்தை பறக்கவிட்டு சோதனை செய்யும் முனைப்புடன் ரோல்ஸ்ராய்ஸ் எஞ்சினியர்கள் செயலாற்றி வருகின்றனர். ஏர்பஸ், போயிங் உள்ளிட்ட நிறுவனங்களும் மின்சார விமானங்களை தயாரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








