ஆளில்லா சரக்கு கப்பல்களை கரையிலிருந்தே கட்டுப்படுத்தும் நுட்பம்: ரோல்ஸ்ராய்ஸ் மும்முரம்!

By Meena

பக்கிங்ஹாம் கால்வாய்.... ஆந்திரம் - விழுப்புரம் இடையே 796 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைந்துள்ள மிகப் பெரிய கால்வாய். 19-ஆம் நூற்றாண்டிலிருந்து 20-ஆம் நூற்றாண்டு முற்பகுதி வரை அந்தக் கால்வாய் வழியாகத்தான் போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டது.

நீர் வழிப் போக்குவரத்து மூலம் வாணிபம் செய்யும் நடைமுறை அந்தக் காலகட்டத்தில் அதிக அளவில் பின்பற்றப்பட்டது.

ஆளில்லா சரக்கு கப்பல்

இன்னும் சொல்லப்போனால், ஆளே இல்லாமல் வெறும் கட்டுமரத்தின் மேல் பொருள்களை வைத்து அனுப்பி விடுவார்களாம். மறுமுனைக்குத் தகவல் சொல்லிவிட்டால், தண்ணீரில் மிதந்து வரும் அந்தப் பொருள்களை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள் என்று செவி வழித் தகவல்கள் கூறுவதுண்டு.

இப்படி ஆளே இல்லாமல் தண்ணீரை நம்பி சரக்குப் போக்குவரத்து நடைபெற்றது அந்தக் காலம். இப்போதும் கடல் வழியே பல்லாயிரம் டன் சரக்குகளை ஏற்றிக் கொண்டு கப்பல்கள் பயணிக்கின்றன.

கட்டுப்பாட்டு மையம்

எவ்வளவுதான் பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினாலும், இயற்கைக்கு முன்னால் அது எம்மாத்திரம்? சுனாமியோ, புயலோ வந்தால் கப்பலில் பயணிப்பவர்களுடன் சேர்த்து வாரிச் சுருட்டிக் கொண்டு போய்விடும்.

இதுபோன்ற விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க ஆளே இல்லாத சரக்குக் கப்பல்களைத்தான் அனுப்ப வேண்டும். ஆனால், அது எப்படி சாத்தியம்? சாத்தியம்தான் என்கிறது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்.

கடலில் பயணிக்கும் ஆளில்லாத கப்பலை தரையிலிருந்தபடி இயக்கும் தொழில்நுட்பத்தை ஆராய்ச்சி செய்து வருகிறது அந்நிறுவனம். அதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் தற்போது இறங்கியுள்ளது ரோல்ஸ் ராய்ஸ்.

கட்டுப்பாட்டு மையம் 1

அடுத்த சில ஆண்டுகளில் அத்தகைய முயற்சி சோதித்துப் பார்க்கப்படும். அது வெற்றியடையும்பட்சத்தில், வருங்காலத்தில் புதிய தொழில்நுட்பத்திலானதொரு போக்குவரத்து இந்த உலகுக்கு அறிமுகமாகும்.

அது சரி.. தரையிலிருந்த படி எப்படி கப்பலை இயக்க முடியும்? விமானம், பாதுகாப்புத் துறை போர் வாகனங்கள் உள்ளிட்டவை வேறொரு இடத்திலிருந்து இயக்கப்படுகின்றன அல்லவா, அதைப் போன்றதொரு தொழில்நுட்பம்தான் இதிலும் பின்பற்றப்படுகிறது.

கட்டுப்பாட்டு மையம் 2

7-இலிருந்து 15 பேர் கொண்ட மாலுமிகள் குழு, தரையிலிருந்தபடியே நவீன தொழில்நுட்ப சாதனங்கள் மூலமாக கப்பலுக்குள்ளும், அதற்கு வெளியேயும் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

சூழலுக்குத் தகுந்தவாறு கப்பலை இயக்கவும், ஏதாவது பிரச்னைகள் என்றால் கப்பலை வேறு திசையை நோக்கி செலுத்தவும் இயலும்.

ஃபின்லாந்தைச் சேர்ந்த விடிடி டெக்னிகல் ரிசர்ச் சென்டர் மற்றும் யுனிவர்சிடி ஆஃப் டேம்பர் ரிசர்ச் சென்டர் ஆகியவை இணைந்து ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துக்காக இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றன.

கட்டுப்பாட்டு மையம் 3

இந்த ஆராய்ச்சி குறித்த 6 நிமிடக் குறும்படம் அண்மையில் வெளியிடப்பட்டது. ஆளில்லா சரக்குக் கப்பலை இயக்குவது தொடர்பான தொழில்நுட்பம், ஆராய்ச்சியில் ஏற்பட்டு வரும் மேம்பாடு உள்ளிட்டவை அந்தப் படத்தில் விளக்கப்பட்டுள்ளன.

வரும் ஆகஸ்ட் மாதம் மற்றொரு படத்தை வெளியிட ரோல்ஸ் ராய்ஸ் தி்ட்டமிட்டுள்ளது. ஆராய்ச்சியின் வாயிலாகக் கண்டறியப்பட்ட பல உண்மைகள் அதில் வெளியிடப்படவுள்ளன.

புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளால் உலகத்துடன் சேர்ந்து மனிதனின் வாழ்க்கை முறையும் மாறி வருகிறது. அந்த வரிசையில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் இந்த முயற்சி புதிய மைல்கல்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Rolls-Royce reveals future shore control centre.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X