லாரியில் இருந்து ராயல் என்பீல்டு பைக்கை கீழே இறக்கும்போது இளைஞருக்கு நடந்த சம்பவம்... வைரல் வீடியோ
லாரியில் இருந்து ராயல் என்பீல்டு பைக்கை கீழே இறக்கும்போது நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

உலகில் சாலை விபத்துக்கள் காரணமாக அதிக உயிர்களை பறிகொடுத்து வரும் நாடுகளில் ஒன்றாக நமது இந்தியா உள்ளது. இங்கு ஒரு ஆண்டுக்கு மட்டும் சாலை விபத்துக்களால் சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற தவறுவதே இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான நபர்கள், டூவீலர்களில் பயணிக்கும்போது ஹெல்மெட் அணிவதில்லை. மேலும் கார்களில் பயணம் செய்யும்போது சீட் பெல்ட் அணிவதில்லை. கார்களிலாவது ஏர்பேக் உள்பட பல்வேறு பாதுகாப்பு வசதிகள் இருக்கின்றன. ஆனால் டூவீலர்களில் பயணம் செய்பவர்களுக்கு இருக்கும் மிக முக்கியமான பாதுகாப்பு ஆயுதமே ஹெல்மெட்தான்.

இருந்தபோதும் அதையும் அணிவதற்கு பலர் விரும்புவதில்லை. உண்மையில் இருப்பதிலேயே இரு சக்கர வாகனங்கள்தான் மிகவும் அபாயகரமானவை. இந்தியாவில் சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள்தான். உலகின் பெரும்பாலான நாடுகளிலும் கிட்டத்தட்ட இதே நிலைமைதான் காணப்படுகிறது.

இருந்தாலும் நாம் அனைவரும் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி கொண்டுதான் உள்ளோம். ஏனெனில் நம் அனைவராலும் சொந்தமாக கார் வாங்க முடியாது. இரு சக்கர வாகனங்கள்தான் விலை குறைவானவை. அவற்றின் பராமரிப்பு செலவும் குறைவு. எனவே ஒரு இடத்திற்கு குறைவான செலவில் சென்று வருவதற்கு, டூவீலர்கள் உகந்தவையாக உள்ளன.

அத்துடன் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் ஓட்டுவதற்கும் டூவீலர்கள்தான் ஏற்றவை. அதிக அளவு அபாயம் இருந்தாலும் கூட, இது போன்ற காரணங்களால் நாம் அனைவரும் டூவீலர்களை பயன்படுத்தி கொண்டுதான் உள்ளோம். ஆனால் ஹெல்மெட் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களை நம்மில் பெரும்பாலானோர் பயன்படுத்துவது கிடையாது.

இந்தியாவை பொறுத்தவரை இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் இரண்டு பேரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது. ஆனால் பெரும்பாலானோர் இதனை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்வதில்லை. காவல் துறையினர் என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அபராதம் விதித்தாலும் இன்னும் மிகப்பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை.

இப்படிப்பட்ட சூழலில், இரு சக்கர வாகனங்களை கையாளும் சமயத்தில், ஹெல்மெட் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களை அணிவது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதிர்ச்சிகரமான அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
ராயல் என்பீல்டு பைக் ஒன்று லாரியில் இருந்து கீழே இறக்கப்படும்போது அதன் பாதையில் இருந்து தவறி திடீரென கீழே விழுந்து விடுவதை இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. லாரியில் இருந்து பைக்கை கீழே இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்த இளைஞர் எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களையும் அணிந்திருந்ததாக தெரியவில்லை.

மிகவும் முக்கியமான ஹெல்மெட்டை கூட அவர் அணியவில்லை. இதுபோன்ற சரிவுகளில் பைக்குகளை கீழே இறக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அனேகமாக விபத்தில் சிக்கிய இந்த இளைஞருக்கு இந்த பணியில் அதிக அனுபவம் இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்துக்கள் அரங்கேறி விடும்.

எனவே என்னதான் அனுபவம் இருந்தாலும், பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து, முன்னெச்சரிக்கையாக வாகனங்களை கையாள்வது மிகவும் அவசியம். திடீரென கட்டுப்பாட்டை இழந்த காரணத்தால், இந்த இளைஞர் கீழே விழுந்து விட்டார். கீழே விழுந்தவுடன் அவர் அசைவின்றி கிடக்கிறார். அதன்பின் சக பணியாளர்கள் உடனடியாக ஓடி வந்து அவரை தூக்குகின்றனர்.

ஆனால் அதற்கு பிறகு என்ன நடந்தது? என்பது தெரியவில்லை. இந்த வீடியோ மிக குறுகிய நேரமே ஓடுகிறது. டூவீலர்கள் எவ்வளவு அபாயகரமானவை என்பதை இந்த வீடியோவின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம். எனினும் ஒரு சில நடவடிக்கைகளின் மூலம், இரு சக்கர வாகனங்களால் சாலை விபத்துக்களில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பை நாம் குறைக்கலாம்.

இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொள்ளுங்கள். முக்கியமாக ஹெல்மெட் அணிந்து பயணம் செய்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதேபோல் போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் முறையாக பின்பற்றுங்கள்.


Click it and Unblock the Notifications








