பேய் படங்களே தோற்றுவிடும்!! ஆளில்லாமல் இயங்கி கொண்டுவந்த என்பீல்டு பைக், ஷாக்கில் உறைந்து போன வாகன ஓட்டிகள்
கிட்டத்தட்ட 300 மீட்டர் தொலைவிற்கு ராயல் என்பீல்டு பைக் ஒன்று ரைடர் இல்லாமல் சென்றுள்ளது. பார்ப்போர்க்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும் இது தொடர்பான வீடியோவினை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் தற்போது தான் பேய் படங்களின் வருகை சற்று குறைந்துள்ளது. இந்த நிலையும் நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. ஏனெனில் ஏதேனும் ஒரு பேய் படம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து, வசூலை குவித்தால், தானும் ஹாரர் படத்தை எடுக்கிறேன் என பலர் கிளம்பிவிடுவர்.
பெரும்பாலும் பேய் படங்களில் நிஜ வாழ்க்கையில் தற்செயலாக, காண்போரை மிரள வைக்கும் வகையில் நிகழும் நிகழ்வுகளை தான் காட்சியாக காட்டுகின்றனர். இவ்வாறு பேய் படம் எடுக்கும் இயக்குனர்களே யோசிக்க முடியாத அளவிற்கு சம்பவம் ஒன்று புனே - நாஷிக் நெடுஞ்சாலையில் நடைப்பெற்றுள்ளது.

புனே- நாஷிக் நெடுஞ்சாலையில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் புல்லட் மோட்டார்சைக்கிள் ஒன்று ஓட்டுனர் இன்றி தன்னிச்சையாக சாலையில் சென்று கொண்டிருந்தது. இதுகுறித்த வீடியோவினை தான் கீழே காண்கிறீர்கள்.
ஸ்டைலிஷான மோட்டார்சைக்கிள் ஒன்று சாலையில் எதிர் திசையில், வந்து கொண்டிருப்பதை கண்ட சாலையோரத்தில் இருந்த பொதுமக்கள் ஆச்சிரியமும், சற்று அதிர்ச்சியும் அடைந்தனர். அதேநேரம் தானாக இயங்கி கொண்டு வந்த இந்த ராயல் என்பீல்டு பைக்கிற்கு எதிரே வந்த வாகன ஓட்டிகளையும் அங்கிருந்த மக்கள் எச்சரிப்பதை வீடியோவில் பார்க்கலாம்.

இதனால் கூக்குரல்கள் உடன், அந்த பகுதியே சிறிது நேரத்தில் பரபரப்பானது. ஒரு சிலரோ மோட்டார்சைக்கிளை விரட்டிப்பிடிக்க முயன்றனர். ஆனால் எதிரே மற்ற வாகனங்கள் வேகமாக வந்து கொண்டிருந்ததால் அவர்களால் பைக்கை பிடிக்க முடியவில்லை.
இந்த நிகழ்வில் இந்த ராயல் என்பீல்டு பைக் தன்னிச்சையாக இயங்குவது போன்றே இல்லை. ஏனெனில் நோ-எண்ட்ரீ சாலையாக இருப்பினும், நேராக இயங்கிய பைக் எதிரே வந்த கமர்ஷியல் வாகனம் ஒன்றின் மீது மோதுவது போல் மிக அருகாமையில் சென்று, மோதாமல் சாலையில் இருந்து விலகி ஒரு கட்டட பகுதிக்குள் செல்கிறது.

எதிரே வந்த கமர்ஷியல் வாகன ஓட்டுனர் ஆளில்லாமல் வரும் பைக்கை பார்த்துவிட்டு தனது வாகனத்தை நிறுத்தி கொண்டார். இருப்பினும் பைக்கை யாராலும் நிறுத்த முடியததால் நிச்சயம் இந்த மோட்டார்சைக்கிள் அந்த வாகனத்தின் மீது மோதி கொள்ளும் என்றே உங்களை போன்று இந்த வீடியோவை பார்க்கும்போது நானும் நினைத்தேன்.
ஆனால் சிறு மோதல் கூட இல்லாமல் அழகாக வளைந்து சாலையில் இருந்து பைக் விலகி சென்றுள்ளது. சரியாக 300மீ தொலைவிற்கு தன்னிச்சையாக இயங்கிய இந்த ராயல் என்பீல்டு பைக் பின்னர் தனியார் பகுதியில் விழுந்துவிடுகிறது. இந்த சம்பவத்தில் வழியில் நடந்து சென்று கொண்டிருந்த ஜனார்தன் என்பவருக்கு சற்று கடுமையான காயம் ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெடுஞ்சாலையில் ஆள் இன்றி மோட்டார்சைக்கிள் சென்ற சம்பவம் குறித்து கிடைக்க பெற்ற இந்த சிசிடிவி வீடியோவை வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. எவ்வாறு ராயல் என்பீல்டு பைக் ஒன்று தன்னிச்சையாக சாலையில் இயங்கியது? இந்த விலைமிக்க பைக்கிற்கு உரிமையாளர் யார்? என்பது குறித்த கேள்விகளுக்கு தற்போதைக்கு எங்களிடம் பதில் இல்லை.

ஓட்டுனர் இல்லா கார் இயக்கத்தில் பிரபலமான டெஸ்லாவே தற்போது வரையில் ஆரம்பக்கட்ட நிலையில் தான் உள்ளது. ஓட்டுனர் இல்லா இயங்கும் மோட்டார்சைக்கிளை இதுவரையில் உலகில் யாரும் கண்டுப்பிடிக்கவில்லை என்று தான் நினைக்கிறேன். ஆனால் ராயல் என்பீல்டு நிறுவனம் இவ்வாறான தொழிற்நுட்பங்கள் எதையும் தனது பைக்குகளில் வழங்குவதில்லை என்பதில் மட்டும் உறுதியாக இருக்கின்றோம்.
எங்களுக்கு தெரிந்தவரையில் இயற்பியல் தான் முழுக்க முழுக்க இந்த பைக்கின் தன்னிச்சையான 300மீ பயணத்திற்கு காரணமாக இருக்க வேண்டும். அதாவது இந்த பைக்கை அதன் உரிமையாளர் மேடான பகுதியில் நிறுத்தி இருக்கலாம். பேலன்ஸை இழந்த பைக் பள்ளமான பகுதியை நோக்கி தன்னிச்சையாக இயங்கி கொண்டுவந்திருக்கலாம்.
ஏனெனில் ரைடர் இல்லாமல் இந்த ராயல் என்பீல்டு அதி வேகத்தில் வந்ததாக இந்த நிகழ்வை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். கியரை அதிகரிக்காமல், பைக்கில் டாப் ஸ்பீடை சறுகலான பகுதியில் தான் அடைய முடியும். அது தான் இந்த சம்பவத்திலும் அரங்கேறியுள்ளது.


Click it and Unblock the Notifications








