ஜோம்பி மாதிரி எங்கிருந்து வராங்கனே தெரியல... ராயல் என்பீல்டு பைக் மீது தனது மொத்த கோபத்தையும் காட்டிய போலீசார்
இந்திய சாலைகளில் வாகனம் ஓட்டுவதுதான் இருப்பதிலேயே சிரமம் என வெளிநாட்டினர் பலர் கூற கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஏனெனில், அந்த அளவிற்கு நம்ம ஊர் சாலைகளில் தான் போக்குவரத்துக்கு நிறைய இடையூறுகள் ஏற்படுகின்றன. சாலைகளில் குண்டும், குழிகளில் இருந்து, ஆடு, மாடு, நாய் என எது எப்போது குறுக்கே வரும் என்றே தெரியாது. 5 அறிவு ஜீவன்கள் மட்டுமின்றி, சில நேரங்களில் 6 அறிவுள்ள மனிதர்களாலும் சாலை போக்குவரத்து தடைப்படுவதையும், தாமதமாகுவதையும் பார்த்திருப்பீர்கள். இதில் கவலையளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், சாலை போக்குவரத்தை சீர்குழைப்பது தவறு என்பதே பலருக்கு தெரியவில்லை.
குறிப்பாக, வட இந்தியாவில் ரீல்ஸ் (Reels) உள்ளிட்ட இணைய மோகத்தினால் சாலையில் இறங்கி வாகனங்களில் சாகசங்களை காட்டுவதை சமீப காலமாக அதிகமாக பார்க்க முடிகிறது. ஏற்கனவே கூறியதுபோல், சாலையில் மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்வது தவறு என்பதே அத்தகைய செயல்களில் ஈடுப்படும் பலருக்கு தெரியாதது தான் இவ்வாறான நிகழ்வுகள் அவ்வப்போது ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாகும்.

அதுமட்டுமின்றி, சாலை போக்குவரத்து குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததினாலேயே சாலையில் சாகசம் காட்டுபவர்களை தண்டித்தாலும் ஜோம்பி மாதிரி புதியது புதியதாக வந்துக் கொண்டே இருக்கின்றனர். அந்த வரிசையில் கடந்த சில மாதங்களாக தலைநகர் டெல்லியில் தீதா சவுத்ரி என பெயர் கொண்ட இளைஞர் ஒருவர் போலீசாருக்கு பெரிதும் தலைவலியை கொடுத்து வருகிறார்.
இரவு நேரங்களில் சாலையில் சுற்றி திரியும் தெருநாய்கள் குறிப்பிட்ட சில வாகன ஓட்டிகளை மட்டும் குறிவைத்து துரத்துவதுபோல், டெல்லியில் வசிக்கும் இந்த இளைஞர் குறிப்பாக மாநகர பேருந்துகளை டார்க்கெட் செய்து, அவற்றின் வழியை மறித்து இடையூறு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனை இப்போது நேற்று அல்ல... கடந்த பல மாதங்களாகவே தொடர்ச்சியாக செய்து வருகிறார்.

இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை கொஞ்சம் அலசி பார்த்தால், கடந்த 2024ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து லாரிகளையும், பேருந்துகளையும் வழிமறித்தவாறு பைக் ஓட்டுவதை தீதா சவுத்ரி தொடர்கதையாக கொண்டுள்ளார் என்பதை அறிய முடிகிறது. அந்த வகையில் சமீபத்தில், பரபரப்பான டெல்லி சாலையில் மாநகர பேருந்தை வழிமறித்தப்படி பைக் ஓட்டி தீதா சவுத்ரி வெளியிட்ட வீடியோ தான் கடைசியில் அவருக்கு ஆபத்தாக முடிந்துள்ளது.
ஏனெனில், இத்தகைய செயல்களுக்காக பலமுறை அபராதங்கள் உடன் தீதா சவுத்ரியை விட்ட போலீசார், தொடர்ச்சியாக இவ்வாறே அவர் செய்துக் கொண்டிருப்பதை அடுத்து, அவரது ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) பைக்கை அழித்தொழிக்க முடிவெடுத்துள்ளனர். ஆரம்பத்தில், இவ்வாறான செயல்களுக்கு யமஹா ஆர்15 (Yamaha R15) பைக்கை பயன்படுத்திய தீதா சவுத்ரி, கடந்த 1 வருடமாக ராயல் என்ஃபீல்டு பைக்கை பயன்படுத்தி வருகிறார்.
தீதா சவுத்ரியை பிடிக்க அவரது வீட்டிற்கு சென்ற போலீசார், அவர் வைத்திருப்பது 15 வருடங்கள் பழமையான செகண்ட்-ஹேண்ட் ராயல் என்ஃபீல்டு பைக் என்பதை கண்டறிந்தனர். இந்த பைக்கை 13 வருடங்களுக்கு முன்பே தீதா சவுத்ரி வாங்கிவிட்டார். ஆனால், இந்நாள் வரையில் பைக்கின் உரிமத்தை தனது பெயரில் அவர் மாற்றிக் கொள்ளவில்லை. ஷோரூமில் இருந்து டெலிவிரி பெற்ற முதல் ஓனரின் பெயரில்தான் இன்னமும் அந்த ராயல் என்ஃபீல்டு பைக் உள்ளது.
போலீசார் இந்த ராயல் என்ஃபீல்டு பைக்கை பறிமுதல் செய்தது தீதா சவுத்ரியின் போக்குவரத்து விதிமீறல்களுக்காக அல்ல. டெல்லி அரசாங்கத்தின் மாசுக்கு எதிரான திட்டத்தினால் ஆகும். அதாவது, காற்று மாசடைவதை தடுக்கும் விதமாக டெல்லியில் 15 வருடங்கள் பழமையான கார் மற்றும் பைக்குகளை பயன்படுத்த கூடாது என்கிற சட்டம் உள்ளது. அந்த விதிமுறையின்படியே, தீதா சவுத்ரியின் பைக் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முறையாக சாலையில் பைக் ஓட்டி இருந்தால், இன்னும் சில வருடங்களுக்கு இந்த ராயல் என்ஃபீல்டு பைக்கை தீதா சவுத்ரி பயன்படுத்தி இருக்கலாம். எப்படியிருந்தாலும், 15 வருட பழைய பைக்கை இன்னும் நீண்ட நாட்களுக்கு ஓட்ட முடியாது என தெரிந்துக் கொண்டதினாலேயே இவ்வாறான போக்குவரத்து விதிமீறல் செயல்களில் தீதா சவுத்ரி ஈடுப்பட்டு இருப்பாரோ என்கிற சந்தேகமும் எழுகிறது.


Click it and Unblock the Notifications








