இளைஞரின் சேட்டை... சூடாக இருக்கும் புல்லட் பைக்கின் சைலென்சரில் பாப்கார்ன் செய்ய முடியுமா? வீடியோ
இளைஞர் ஒருவர் புல்லட் பைக்கின் சைலென்சரை பயன்படுத்தி பாப்கார்ன் செய்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாடுகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் மத்தியிலும் ராயல் என்பீல்டு பைக்குகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. கடந்த காலங்களில் ராயல் என்பீல்டு நிறுவன பைக்குகளை டிராக் ரேஸ்களில் ஈடுபடுத்திய நிகழ்வுகள் பலவற்றை நாம் பார்த்துள்ளோம்.

அத்துடன் ராயல் என்பீல்டு பைக்குகளில் செய்யப்பட்ட வித்தியாசமான மாடிஃபிகேஷன்கள் பற்றியும் நாம் பல முறை கேள்விபட்டுள்ளோம். இது தொடர்பாக டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் ஏராளமான செய்திகளை வெளியிட்டுள்ளது. ஆனால் யூ-டியூபர் ஒருவர் தனது ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளில் மிகவும் வித்தியாசமான காரியம் ஒன்றை தற்போது செய்துள்ளார்.

ராயல் என்பீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350) மோட்டார்சைக்கிளை, பாப்கார்ன் செய்வதற்கு அவர் பயன்படுத்தியுள்ளார். ராயல் என்பீல்டு பைக்கை பயன்படுத்தி ஒருவரால் செய்யப்பட்ட மிகவும் வித்தியாசமான ஆராய்ச்சிகளில் ஒன்றாக இதனை கூறலாம். சோனு பிளாகா என்ற யூ-டியூப் சேனலில் இதுதொடர்பான காணொளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தனது புல்லட் 350 பைக்கின் சைலென்சரை பயன்படுத்தி, பாப்கார்ன் செய்யும் தனது திட்டத்தை இளைஞர் ஒருவர் விவரிப்பதை இந்த காணொளியில் பார்க்க முடிகிறது. இந்த காணொளியில் கூறப்பட்டிருக்கும் தகவல்களின்படி, சோதனை செய்யப்படுவதற்கு முன்பாக, ராயல் என்பீல்டு புல்லட்டை சிறிது தூரம் ஓட்டியுள்ளனர்.

இதன் காரணமாக சைலென்சர் கொஞ்சம் சூடாக இருந்துள்ளது. இதன்பின் காய்ந்த மக்காசோளத்தை சிறிது கொண்டு வந்து, பைக்கின் சைலென்சருக்கு உள்ளே அவர் போடுகிறார். அந்த சமயத்தில் சைலென்சர் கொஞ்சம்தான் சூடாக இருந்துள்ளது. பெரிய அளவில் வெப்பமாக இல்லை. இதையெல்லாம் செய்யும் முன்பாக பைக்கை ஆஃப் செய்து விட்டனர்.

அதாவது பைக்கை ஆஃப் செய்த பிறகே, காய்ந்த மக்காசோளம் சைலென்சருக்குள் போடப்பட்டது. உள்ளே இருக்கும் காற்றின் அழுத்தம் காரணமாக காய்ந்த மக்காசோளம் வெளியே தள்ளப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பைக் ஆஃப் செய்யப்பட்டது. இதன்பின் அங்கிருந்த தனது நண்பரிடம் பைக்கை ஸ்டார்ட் செய்யுமாறு, அந்த இளைஞர் கூறுகிறார்.

பைக் ஸ்டார்ட் செய்யப்பட்ட சமயத்தில், சைலென்சரின் வாய் பகுதியை அந்த இளைஞர் கருப்பு துணியை வைத்து மூடி கொண்டார். அதன்பின்னர் கொஞ்ச நேரத்திற்கு பைக்கின் ஆக்ஸலரேட்டர் மிக வேகமாக முறுக்கப்பட்டது. ஒரு சில நிமிடங்கள் கழித்து, சைலென்சரின் வாய் பகுதியில் அடைக்கப்பட்டிருந்த துணியை அந்த இளைஞர் அகற்றினார்.

அப்போது சைலென்சர் உள்ளே இருந்து பாப்கார்ன் தெறித்து கொண்டு வந்து வெளியே விழுந்தது. காய்ந்த மக்காசோளங்கள், பாப்கார்னாக மாறியிருந்தன. பொதுவாக ராயல் என்பீல்டு பைக்கின் சைலென்சர்கள் மிகவும் சூடாக இருக்கும். கொஞ்ச நேரம் பைக்கை ஓட்டினாலே, சைலென்சர்கள் மிகவும் சூடாகி விடும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.
எனவே மோட்டார்சைக்கிளை பயன்படுத்தி பாப்கார்ன் தயாரிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இருந்தாலும் பைக்கின் சைலென்சரில் தயாரிக்கப்பட்ட பாப்கார்னை சாப்பிடுவது என்பது நல்ல யோசனை கிடையாது. இது உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications