சொந்த காசில் சூனியம் வெச்சிக்கிட்டாங்க... வெளுத்து வாங்கிய உள்ளூர் மக்கள் - என்ன நடந்தது தெரியுமா?
கலாச்சாரத்தை பாதுக்காக்கிறேன் என்கிற பெயரில் ஒரு கும்பல் எல்லா ஊர்களிலும் செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறது. அத்தகையவர்களது எண்ண ஓட்டத்திற்கும், மாடர்ன் உலகை நோக்கி நகர்பவர்களின் எண்ண ஓட்டத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மாடர்ன் உலகை நோக்கி செல்பவர்களே உலகெங்கிலும் அதிகமாக உள்ளதால், இவ்வாறான 'கலாச்சார பாதுகாவலர்கள்'-இன் செயல்கள் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. சில நேரங்களில் அத்தகைய பாதுகாவலர்களின் செயல்கள் மக்களுக்கு சற்று அசவுகரியத்தை ஏற்படுத்தினாலும், சில சமயங்களில் அத்தகையவர்களால் நன்மைகளும் ஏற்படுகின்றன.
அப்படித்தான், மோட்டார்சைக்கிள்களில் வித்தியாசமான சைலன்சரை பொருத்தி சாலையில் அதிக இரைச்சலை ஏற்படுத்தியவாறு சென்ற இளைஞர்களை பிடித்து, எம்.என்.எஸ் பணியாட்கள் அடித்து துவைத்துள்ளனர். சுருக்கமாக எம்.என்.எஸ் எனப்படும் இவர்களது குழுவின் முழு விரிவாக்கம் என்னவென்றால், மஹாராஷ்டிரா நவ்னிர்மன் சேனா ஆகும்.

இந்து மதத்தின் புனிதத்தையும், மராத்தி மொழியையும் பாதுகாப்பது எம்.என்.எஸ் பணியாட்களின் முதன்மையான பணி ஆகும். இதனாலேயே சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் எவரையும் தைரியமாக கண்டிப்பதை எம்.என்.எஸ் ஆட்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். 2006இல் துவங்கப்பட்ட இந்த குழுவை பின்னர் அரசியல் கட்சியாக மாற்றி, மாநில சட்டசபை தேர்தலில் நின்றது எல்லாம் வேறு கதை.
சரி விஷயத்திற்கு வருவோம்... புனேவில் பரபரப்பான சாலையில் இளைஞர்கள் ராயல் என்ஃபீல்டு புல்லட் (Royal Enfield Bullet) பைக்கில் அதிக இரைச்சலை ஏற்படுத்தியப்படி சென்றுள்ளனர். பொதுவாகவே, மற்ற பைக்குகளை காட்டிலும் புல்லட் பைக்குகளில் சைலன்சரில் இருந்து அதிக சத்தம் வரும் என்பது நம் எல்லாருக்குமே தெரிந்ததே.

ஆனால், இந்த இளைஞர்களது புல்லட் பைக்கில் சைலன்சரின் சத்தம் இன்னும் அதிகமாக வந்துள்ளது. பிடித்து விசாரித்து பார்த்ததில், இளைஞர்கள் கூடுதல் சத்தத்திற்காக ஆஃப்டர்-மார்க்கெட் சைலன்சரை பொருத்தி உள்ளனர். எம்.என்.எஸ் ஆட்கள் முதலில் இதுகுறித்து கொஞ்சம் மிரட்டும் பாணியில் பேச்சுவார்த்தையாக தான் கேள்வி கேட்டு கொண்டிருந்தனர்.
பின்னர், கொஞ்ச நேரத்தில் பேச்சுவார்த்தை கைகலப்பாக மாறியது. அருகில் இருந்த எம்.என்.எஸ் ஆட்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து பைக்கில் வந்த இளைஞர்களை அடித்து துவைக்கும் வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் நிற்காமல், சம்பந்தப்பட்ட இளைஞர்களை போலீஸ் நிலையத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்று அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும்படி போலீசாரை கட்டாயப்படுத்தி உள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனங்களினால் ஏற்படும் காற்று மாசு எந்த அளவிற்கு ஆபத்தானதோ அதே அளவிற்கு, இவ்வாறான ஆஃப்டர்-மார்க்கெட் சைலன்சர்களினால் ஏற்படும் ஒலி மாசும் ஆபத்தானது ஆகும். வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் இவ்வாறான ஒலி இரைச்சல்களினால் பாதிக்கப்படுகின்றனர். நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்கள் கூட அதிர வைக்கக்கூடிய அதிக ஒலியை திடீரென கேட்கும்போது மாரடைப்பு ஏற்படுவதற்கு கூட வாய்ப்புள்ளதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் வழங்கப்படும் உறுமும் சத்தம் ஆனது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பல்வேறு விதமான சோதனைகள் மற்றும் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, இதனால் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படாது என்பதை உறுதி செய்த பின்னரே பைக்குகளில் வழங்குகின்றனர். அத்தகைய உறுமும் சத்தம் கூட போதாது என தனியாக வேறொரு சைலன்சரை வாங்கி பொருத்திக் கொண்டுள்ள இவ்வாறான இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications









