‘கர்மா’ என்றால் இதுதான் போல!! நடு ரோட்டில் அசிங்கப்பட்ட இளைஞர் - வீடியோவை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கல!
'புலியை பார்த்து, பூனை சூடு போட்டு கொண்டது' என்ற பழமொழியை கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த பழமொழிக்கு ஏற்ப, கவாஸாகி சூப்பர்பைக்கை பார்த்து ராயல் என்பீல்டு புல்லட் பைக் உரிமையாளர் நட்ட நடு சாலையில் ஒரு காரியத்தை செய்துள்ளார். அதன் விளைவாக நடந்தது என்ன? என்பதையும், இந்த சம்பவம் குறித்த முழுமையான விபரங்களையும் இனி பார்க்கலாம்.
ராயல் என்பீல்டு (Royal Enfield), இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் பிரபலமான பைக் நிறுவனம் என்றால் அதில் சந்தேகமே இல்லை. ராயல் என்பீல்டின் பைக்குகளுக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர். இருப்பினும், மற்ற பைக்குகளுடன் ஒப்பிடுகையில், ராயல் என்பீல்டு பைக்குகளிலும் சில குறைப்பாடுகள் இருப்பதை மறுக்க முடியாது.

குறிப்பாக, ராயல் என்பீல்டு பைக்குகளின் எடை சில சமயங்களில் அவற்றிற்கு பின்னடைவாக அமைகிறது. எடை சற்று அதிகமாக இருப்பதால், ராயல் என்பீல்டு பைக்குகள் சரிந்து கீழே விழுந்தால் அவற்றை மீண்டும் நிற்க வைப்பது சற்று சிரமம். அதேபோல், ராயல் என்பீல்டு பைக்குகளில் வீலிங் செய்வதும் முற்றிலுமாக முடியாத காரியம் என்று கூட சொல்லலாம்.
இவை எல்லாவற்றையும் விட, சூப்பர் பைக்குகளை போன்று ராயல் என்பீல்டு பைக்குகளை ஆக்ரோஷமாக ஓட்டுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதிவேகமாக பைக்கை ஓட்டும்போது நமக்கு முற்றிலுமாக கண்ட்ரோல் கிடைக்காமல் போவதற்கும் கூட வாய்ப்புள்ளது. ஆனால், நம்ம இந்திய இளைஞர்கள் ராயல் என்பீல்டு பைக்குகளிலும் வீலிங் செய்து கீழே விழுவது, பொது சாலையில் ஆக்ரோஷமாக ஓட்டுவது என தொடர்ந்து விபரீத செயல்களை செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.
இதற்கு மிக சரியான உதாரணமாக, கவாஸாகி சூப்பர் பைக் உரிமையாளருடன் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கில் போட்டிப் போட்ட வாலிபர்களுள் ஒருவர் நடு சாலையில் கீழே விழுந்து அசிங்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை செய்தியின் இறுதியில் காணலாம். இந்த வீடியோ ஆனது இசட்900 ரைடர் ஷார்ட்ஸ் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த வீடியோவை காட்சிப்படுத்தியவர், கவாஸாகி இசட்.எக்ஸ்10ஆர் என்ற 1000சிசி கவாஸாகி பைக் ஓட்டுனர் ஆவார். தனது ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டு இருந்த கேமரா மூலமாக இந்த காட்சிகளை அவர் படமாக்கி உள்ளார். வெறும் 29 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடியதாக உள்ள இந்த வீடியோவின் ஆரம்பத்தில், வீடியோவை பதிவு செய்தவரின் கவாஸாகி இசட்.எக்ஸ்10ஆர் பைக்கிற்கு முன்னால் ராயல் என்பீல்டு புல்லட் பைக்கில் இரு இளைஞர்கள் ஆக்ரோஷமாக செல்கின்றனர்.
பைக்கை சாய்த்து, சாய்த்து அவர்கள் ஓட்டுவதை வீடியோவில் பார்க்கும் நமக்கே ஒரு விதமான பயம் ஏற்படுகிறது. அப்படியிருக்கையில், அந்த சாலையில் வாகன ஓட்டிகளின் மனநிலையை நினைத்து பாருங்கள். பின்னர் மற்றொரு காட்சியில், இந்த கவாஸாகி சூப்பர்பைக் ரைடர் சாலையின் ஓரத்தில் நின்று கொண்டு இருக்கிறார். அப்போது இவரிடம் அந்த புல்லட் பைக் இளைஞர்கள் வருகின்றனர். இவர்களுடன் கேடிஎம் ட்யூக் பைக்கில் மேலும் இரு இளைஞர்களும் உடன் வருகின்றனர்.

அப்போது, கவாஸாகி சூப்பர்பைக் ரைடர் முன்பு கெத்து காட்ட நினைத்த புல்லட் பைக் ஓட்டுனர் திடீரென ஆக்ஸலரேட்டரை முறுக்கி உள்ளார். இதனை புல்லட் பைக்கின் பின்னால் அமர்ந்தவர் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை போல. ஏனெனில், ஆக்ஸலரேட்டரை முறுக்கி கொண்டு புல்லட் பைக் ரைடர் பைக்கை முன்னோக்கி நகர்ந்தி செல்ல, பின்னால் அமர்ந்திருந்தவர் பைக்கில் இருந்து வழுக்கிக் கொண்டு கீழே விழுந்துள்ளார். இந்த காட்சியை சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் சிரித்தப்படி பார்த்து சென்றனர்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்த சம்பவம் மும்பையில் நடந்தது போன்று உள்ளது. மும்பையாக இருந்தாலும் சரி, நமது சென்னையாக இருந்தாலும் சரி ஏரியாவுக்கு சில இளைஞர்கள் இவ்வாறு இருக்க தான் செய்கின்றனர். சாலையில் மற்ற வாகன ஓட்டிகளை பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஆக்ரோஷமாக வாகன ஓட்டும் இத்தகைய இளைஞர்கள், சில சமயங்களில் இவ்வாறு அசிங்கப்படுவதையும் செய்திகளில் பார்த்துள்ளோம்.


Click it and Unblock the Notifications









