ஸ்கூட்டர் விலையே 80 ஆயிரம்தான்! அபராதத்தை பாத்ததும் ஆடிப்போன நபர்! இருந்தாலும் ஒரே செட்டில்மெண்ட்ல கட்டிட்டாரே
இந்தியாவின் பெரும்பாலான மெட்ரோ நகரங்களில், காவல் துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்கள் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுகிறார்களா? என்பதை கண்டறிந்து, அபராதம் விதிக்கும் அளவிற்கு அதிநவீனமானதாக உள்ளது. உதாரணத்திற்கு ஒரு வாகன ஓட்டி ஹெல்மெட் அணியாமல் சென்றால், சம்பந்தப்பட்ட டூவீலரின் பதிவு எண் அடிப்படையில் கண்காணிப்பு கேமரா அபராதம் விதித்து விடும். ஆனால் மெட்ரோ நகரங்களில் பின்பற்றப்படும் இந்த நடைமுறை இன்னும் சிலருக்கு தெரியவில்லை என்பது உண்மையிலேயே வேதனையான விஷயம்.
ஏனெனில் தங்கள் வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது என்பதே அவர்களுக்கு தெரிவதில்லை. இதன் காரணமாக அவர்கள் தொடர்ச்சியாக பொது சாலைகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி கொண்டே இருக்கின்றனர். இறுதியில் வாகனத்தின் மதிப்பை விட, அபராதமாக செலுத்த வேண்டிய தொகை அதிகமாகி விடுகிறது.

இதன் காரணமாக கடைசியில் அவர்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாக நேரிடுகிறது. பெங்களூர் (Bangalore) நகரை சேர்ந்த ஒருவருக்கு இப்படியான பிரச்னை தற்போது ஏற்பட்டுள்ளது. அவரது பெயர் பெரியசாமி என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரும், அவரது உறவினரான சுதீப் என்பவரும் ஸ்கூட்டர் ஒன்றை நீண்ட காலமாக பயன்படுத்தி வருகின்றனர்.
அது யமஹா ஃபஸினோ (Yamaha Fascino) ஸ்கூட்டர் என கூறப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் அவர்கள் பலமுறை போக்குவரத்து விதிமுறைகளை மீறியுள்ளனர். இதன் காரணமாக தற்போது அபராத தொகை ஒட்டுமொத்தமாக 1.61 லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த விஷயம் தற்போதுதான் அவர்களுக்கு தெரியவந்துள்ளது.

இதை கேட்டதும் இருவரும் அதிர்ச்சியடைந்து விட்டனர். ஏனெனில் அந்த ஸ்கூட்டரின் தற்போதைய சந்தை மதிப்பே சுமார் 80 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருக்கும். அபராத தொகை கடுமையாக உயர்ந்ததையடுத்து, அந்த ஸ்கூட்டரை பெங்களூர் காவல் துறை அதிகாரிகள் தற்போது அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.
இது மிகவும் அதிகமான தொகை என்றாலும் கூட, அதை செலுத்துவதற்கு தயாராக இருப்பதாக இருவரும் கூறினர். ஆனால் கால அவகாசம் வேண்டும் என அவர்கள் கேட்டனர். எனினும் காவல் துறை அதிகாரிகள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே இறுதியில் அபராத தொகை முழுவதையும் செலுத்தி, பெரியசாமி மற்றும் சுதீப் ஆகியோர் ஸ்கூட்டரை மீட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றியிருந்தால், இந்த பிரச்னையே ஏற்பட்டிருக்காது. அல்லது குறைந்தபட்சம் தாங்கள் பயன்படுத்தி கொண்டுள்ள வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது என்பதையாவது அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் ஒரு கட்டத்திலாவது சுதாரித்து, தவறுகளை சரி செய்திருக்கலாம்.
ஆனால் பெரியசாமி மற்றும் சுதீப் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவதே தெரியவில்லை. இது அவர்களின் அறியாமையா? அல்லது அபராத ரசீதுகளை பெறுவதில் ஏதேனும் பிரச்னையா? என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் இந்த நடைமுறைகள் தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் இன்னும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது என்பதை இந்த சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
இது போன்ற சூழல்களில், அதாவது வாகனத்தின் மதிப்பை விட அபராத தொகை அதிகமாகும்போது, ஒரு சிலர் வாகனத்தை போலீஸ் ஸ்டேஷனிலேயே விட்டு விட்டு சென்று விடுகின்றனர். இது முற்றிலும் தவறானது. ஏனெனில் இது வேறு வகையில் பிரச்னைகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஏனெனில் அபராதம் செலுத்தவில்லை என்பதற்கு தனியாக காவல் துறை அதிகாரிகள் வேறு ஒரு வழக்கை பதிவு செய்யலாம். இது நிலைமையை இன்னும் மோசமாக்கும். எனவே இது போன்ற பிரச்னைகளை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால், அனைத்து போக்குவரத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றுங்கள். இது அபராதங்களில் இருந்து மட்டுமல்லாது, சாலை விபத்துக்களில் இருந்தும் உங்களை பாதுகாக்கும்.


Click it and Unblock the Notifications








