இனி உங்க கார்ல வெளி ஆட்களை ஏத்தீராதீங்க! மீறினால் இவ்ளோ அபராதம் கட்டணுமா! திடீர் உத்தரவால் மக்கள் அதிர்ச்சி!
இந்தியாவில் பிரைவேட் வாகனங்கள் (Private Vehicles) எனப்படும் தனியார் வாகனங்களை நிறைய பேர் வர்த்தக ரீதியில் பயன்படுத்தி வருகின்றனர். கார்பூலிங் (Carpooling) செயலிகளை இதற்கு உதாரணமாக கூற முடியும். கார்பூலிங் என்பது அலுவலகம் போன்ற இடங்களுக்கு ஒரே காரில் நிறைய பேர் ஒன்றாக பயணம் செய்வதாகும்.
இதற்கு வர்த்தக பயன்பாட்டிற்கு என பதிவு செய்யப்பட்ட வர்த்தக வாகனங்களை (Commercial Vehicles) மட்டுமே பயன்படுத்த வேண்டும். சொந்த பயன்பாட்டிற்காக வாங்கப்பட்ட தனியார் வாகனங்களை பயன்படுத்த கூடாது. ஆனால் நிறைய பேர் இந்த விதிமுறையை மீறி வருகின்றனர். அவர்களுக்கு தற்போது 'செக்' வைக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் நகர போக்குவரத்து துறை தற்போது முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதில், தனியார் வாகனங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்துவது சட்ட விரோதம் (Illegal) என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறி தனியார் வாகனங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் (Fine) விதிக்கப்படலாம். அல்லது வாகனத்தின் பதிவு ரத்து செய்யப்படலாம். டாக்ஸி உரிமையாளர்கள் சங்கத்தின் தொடர்ச்சியாக அளித்து வந்த புகாரையடுத்து, பெங்களூர் போக்குவரத்து துறை அதிகாரிகள் தற்போது இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

தனியார் வாகனங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்துவதற்கு பதிலாக, அவற்றை டாக்ஸிகளாக, அதாவது வர்த்தக வாகனங்களாக பதிவு செய்து கொண்டு வேண்டுமானால், கார்பூலிங் போன்றவற்றை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியில் பயன்படுத்துவதற்கான அனுமதியை பெற்ற பிறகு மட்டுமே, தனியார் வாகனங்களை டாக்ஸிகளாக பயன்படுத்தி கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பொதுமக்கள் இந்த அறிவிப்பை வரவேற்கவில்லை. கார்பூலிங் செயலிகள் தங்களது பயணத்தை எளிமையாக்குவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் போக்குவரத்து நெரிசல் (Traffic Jam) பிரச்னையில் இருந்து தப்பிப்பதற்கும் இது தங்களுக்கு உதவி செய்கிறது என்பது பெங்களூர் பெரு நகரில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் கருத்தாக இருக்கிறது.
பெங்களூர் பெரு நகரத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னை உலக பிரசித்தி பெற்றது. ஆம், சில சமயங்களில் 2 கிலோ மீட்டர் தொலைவை கடப்பதற்கே 1 மணி நேரத்திற்கு மேல் ஆகும்! அரசின் அதிகாரப்பூர்வமான தரவுகளின்படி, பெங்களூர் நகரில், 1.10 கோடிக்கும் மேலான வாகனங்கள் இருக்கின்றன.
இதில் சுமார் 74 லட்சம் வாகனங்கள் டூவீலர்கள் ஆகும். அதே நேரத்தில் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 24 லட்சமாக இருக்கிறது. எஞ்சியவை மற்ற வாகனங்கள் ஆகும். இவ்வளவு வாகனங்கள் இருக்கும்போது, போக்குவரத்து நெரிசல் பிரச்னை எவ்வளவு கடுமையாக இருக்கும்? என்பதை நீங்கள் யூகித்து பார்த்து கொள்ள முடியும்.
இதன் காரணமாகவே மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் பிரச்னையில் இருந்து தப்பிக்க கார்பூலிங் போன்ற விஷயங்களை பெங்களூர் மக்கள் நாடுகின்றனர். எனவே இந்த பிரச்னையை பெங்களூர் போக்குவரத்து துறை அதிகாரிகள் எப்படி கையாள போகின்றனர்? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், நீங்கள் சொந்தமாக கார் வைத்திருந்தால், அதை வர்த்தக ரீதியில் டாக்ஸியாக பயன்படுத்தி விடாதீர்கள். பெங்களூர் போக்குவரத்து துறையின் உத்தரவு கார்பூலிங் செயலிகளுக்கு எதிரானது மட்டுமல்ல. தனியார் வாகனங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்தும் அனைவருக்கும் எதிரானது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்பூலிங் செயலிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதால், எந்த தரப்பிற்கும் பாதிப்பு இல்லாத வகையில், தெளிவான கொள்கையை அரசு வரையறுக்க வேண்டும் என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தளத்தின் கருத்தாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் போன்ற அம்சங்களை எல்லாம் கவனத்தில் கொண்டு அரசு முடிவு செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications








