வரலாற்றிலேயே முதல் முறை... சிக்கிய ஒவ்வொருவருக்கும் 2 லட்ச ரூபாய் அபராதம்... சினிமாவை விஞ்சிய போலீஸ்
காவல் துறையினர் திரைப்பட பாணியில், 2 லட்ச ரூபாய் அபராதம் விதிக்க தொடங்கியுள்ளதால், விதிமுறையை மீறும் வாகன ஓட்டிகள் நடுங்கி போயுள்ளனர்.

உலகிலேயே சாலை பாதுகாப்பு மிகவும் மோசமாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இங்கு சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதும், அலட்சியமாக செயல்படுவதும்தான் இதற்கு மிக முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

குறிப்பாக இளம் வயதுடைய வாகன ஓட்டிகள் பலர், பொது சாலைகளில் மிகவும் அபாயகரமான முறையில், பைக் ஸ்டண்ட்களில் ஈடுபடுவதை தற்போது அதிகம் காண முடிகிறது. குறிப்பாக பெங்களூர் போன்ற பெரு நகரங்களில், இளம் வயதினர் மத்தியில், பொது இடங்களில் பைக் ஸ்டண்ட்களில் ஈடுபடும் மோகம் மிக வேகமாக பரவி வருகிறது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இது மிகவும் அபாயகரமானது. ஆனால் அவர்கள் இதனை கொஞ்சமும் உணராமல், சாலையில் தங்களுக்கும், மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றனர். எனவே பைக் ஸ்டண்ட்களில் ஈடுபடும் நபர்கள் மீது இனிமேல் கடும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு பெங்களூர் மாநகர போக்குவரத்து காவல் துறையினர் அதிரடியாக முடிவு செய்துள்ளனர்.

இதன்படி தொடர்ச்சியாக பைக் ஸ்டண்ட்களில் ஈடுபடும் நபர்களுக்கு 2 லட்ச ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது பைக் ஸ்டண்ட்களில் ஈடுபட்டு இரண்டாவது முறையாக சிக்கும் நபர்களுக்கான அபராத தொகையை, பெங்களூர் மாநகர போக்குவரத்து காவல் துறையினர் தற்போது 2 லட்ச ரூபாயாக உயர்த்தியிருப்பதாக கூறப்படுகிறது.

சட்டத்திற்கு புறம்பாகவும், அபாயகரமான முறையிலும் பொது இடங்களில் பைக் ஸ்டண்ட்களில் ஈடுபடும் நபர்களை கட்டுப்படுத்தும் நோக்கில், பெங்களூர் மாநகர போக்குவரத்து காவல் துறையினர் இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது. முன்பு இந்த விதிமுறை மீறலில் ஈடுபடும் நபர்களுக்கு, 2,000 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்படும்.

இந்த அபராத தொகையை அவர்கள் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை இடைநீக்கம் செய்வதற்கு காவல் துறையினர் பரிந்துரைப்பார்கள். அத்துடன் அவர்களுடைய வாகனமும் பறிமுதல் செய்யப்படும். ஆனால் இந்த நடவடிக்கைகளுக்கு போதிய பலன் கிடைக்காத காரணத்தால், தற்போது அபராத தொகையை அதிரடியாக உயர்த்தியிருப்பதாக கூறப்படுகிறது.

பைக் ஸ்டண்ட்களில் ஈடுபடும் நபர்களுக்கு 2 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கும் நடவடிக்கையை பெங்களூர் மாநகர போக்குவரத்து காவல் துறையினர் தற்போது தொடங்கி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி பைக் ஸ்டண்ட்களில் ஈடுபட்ட 48 பேரை காவல் துறையினர் சிறப்பு நடவடிக்கை எடுத்து பிடித்துள்ளதாக தெரிகிறது.

அவர்கள் மீது ஐபிசி பிரிவு 279-ன் கீழ் (கண் மூடித்தனமாகவும், அலட்சியமாகவும் வாகனம் ஓட்டுதல்) வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களில் 28 பேர் மீது, மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளில், ஸ்டண்ட்களை செய்து மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

இந்த 28 பேரும் இரண்டாவது முறையாக ஸ்டண்ட்களில் ஈடுபட்டு சிக்கியவர்கள் என கூறப்படுகிறது. எனவே அவர்கள் 28 பேரையும் தலா 2 லட்ச ரூபாய் பத்திரத்தில் காவல் துறையினர் கையெழுத்திட வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூர் மாநகர வரலாற்றில், இப்படியான ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறை எனவும் தெரிகிறது.

பெங்களூர் மாநகர போக்குவரத்து காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கையால், பைக் ஸ்டண்ட்களில் ஈடுபடும் இளம் வாகன ஓட்டிகள் நடுங்கி போயுள்ளனர். இத்தகைய கடும் நடவடிக்கை மூலம் பைக் ஸ்டண்ட்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும், அதன் விளைவாக சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறையும் என காவல் துறையினர் நம்புகின்றனர்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








