தயங்காம ஹெல்ப் பண்ணுங்க... சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவினால் பணம் பரிசு... எவ்ளோனு தெரியுமா?
சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவினால் பணம் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. இதில், பலர் உயிரிழக்கின்றனர். பலர் படுகாயமடைகின்றனர். உரிய நேரத்தில் போதிய மருத்துவ சிகிச்சைகள் கிடைக்காததுதான், சாலை விபத்துக்களில் சிக்கும் பலர் உயிரிழப்பதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

சாலை விபத்துக்களை கண்டால், உதவி செய்யும் மனப்பான்மை பலருக்கும் வருவதில்லை. காவல் நிலையம், நீதிமன்றம் என வீணாக அலைய நேரிடலாம் என்பதுதான் இதற்கு காரணம். ஆனால் சாலை விபத்துக்களில் சிக்குபவர்களுக்கு பொதுமக்கள் அச்சமில்லாமல் உதவி செய்யலாம் என இந்தியாவின் உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது.

சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்யும் நபர்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்ய கூடாது என காவல் துறையினருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் பொதுமக்கள் மத்தியில் இன்னும் போதுமான அளவிற்கு விழிப்புணர்வு ஏற்படவில்லை. ஒரு வித அச்ச உணர்வு அவர்களுக்கு இருந்து கொண்டேதான் உள்ளது.

இதை போக்கும் வகையில் ஒன்றிய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் தொடர்ந்து தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சாலை விபத்துக்களில் சிக்கியவர்களை கோல்டன் ஹவரில் மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பணமும், பாராட்டு சான்றிதழும் பரிசாக வழங்கப்படும் என ஒன்றிய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.

இதற்கான அறிவிப்பை ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் வெளியிட்டிருந்தது. சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவும் மனப்பான்மை அனைவருக்கும் வர வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. இந்த சூழலில் தமிழக அரசு தரப்பிலும் தற்போது அதிரடியான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

ஒன்றிய அரசின் அறிவிப்பை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு தகுந்த நேரத்தில் உதவி செய்பவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுமக்கள் உதவ வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே வரும் காலங்களில் நிறைய பேர் உதவி செய்ய முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு சராசரியாக 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.

அரசாங்கத்தின் நடவடிக்கை மூலமாக இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர வாகனங்களில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவது, சாலைகளை தரமாக அமைப்பது போன்ற நடவடிக்கைகள் மூலமாகவும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசு முயன்று வருகிறது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








