நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தினால் ரூ.10,000 அபராதம்... வாகன ஓட்டிகளுக்கான அடுத்த ஆப்பு இதுதான்
நோ பார்க்கிங்கில் உங்களது வாகனம் பிடிப்பட்டால், ரூ.10 ஆயிரம் வசூலிக்கப்படும். வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அடுத்த ஆப்பு குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்வது, மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவது, சீட் பெல்ட் அணியாமல் காரை இயக்குவது, அதிவேகமாக வாகனங்களை இயக்குவது இவையெல்லாம் எப்படி போக்குவரத்து விதிகளில் குற்றமாக கருதப்படுகின்றதோ, அதேபோன்றுதான், நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்திவிட்டு செல்வதும் குற்றமாகப் பார்க்கப்படுகின்றது.

அவ்வாறு, நோ பார்க்கிங் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதன் காரணமாக, அந்த சாலையில் போக்குவரத்து சீரற்று காணப்படுவதுன், போக்குவரத்து நெரிசலையும் உண்டாக்குகின்றது. இதனால், சாலை குறுகலாகுவதுடன் மற்ற வாகனங்கள் அவ்வழியாக செல்வதற்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. ஆகையால், இதுபோன்று போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு தண்டனையளிக்கும் விதமாக, அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது.

மேலும், நோ பார்க்கிங்கில் விட்டுச் செல்லப்படும் வாகனங்களை, டயர் ஜாம்மர் அல்லது டோவ் செய்து வாகனங்கள் சிறைப் பிடிக்கப்படுகின்றது. பின்னர், அதன் உரிமையாளரிடம் அபராதம் பெற்ற பின்னரே, அவர்களின் வாகனம் விடுவிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், அண்மைக் காலங்களாக அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதன் காரணமாக, மும்பை நகரப் பகுதியில் நோ பார்க்கிங்கில் விடப்படும் வாகனங்களுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

மும்பை நகரப் பகுதியில் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், 146 பொது வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன. அவை, 34 ஆயிரத்து 808 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துகின்ற அளவிற்கு இடத்தைப் பெற்றுள்ளன. இருப்பினும், மும்பை நகர வாசிகள் பலர், அவர்களது வாகனங்களை சாலையின் ஓரத்திலேயே நிறுத்திவிட்டு செல்லுவதாக கூறப்படுகின்றது.

இதுவே, அந்த நகரத்தின் முக்கிய சாலைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்க பிரதான காரணமாக இருக்கின்றது. இந்த பிரச்னையானது, அந்நகர போக்குவர்ததுத்துறைக்கு பெரும் தலைவலியாக மாறி வந்தது. ஆகையால், இதில் தீர்வு காணும் விதமாக, அண்மையில் போக்குவரத்துத்துறை அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது.

அதில், நோ பார்க்கிங்கில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அதிகபட்சமாக ரூ, 10 ஆயிரம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டமானது, வருகின்ற ஜீலை மாதம் 7ம் தேதி முதல் அமலுக்கு வரவிருப்பதாக மும்பை நகரத்தின் ஆணையாளர் பிரவீன் பர்தேசி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, "மும்பை நகரத்தின் சாலைகளை போக்குவரத்து நெரிசல் அல்லாத சாலைகளாக மாற்றும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. அதேபோன்று, தற்போது அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும் இந்த அதிகபட்ச அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதைத்தொடர்ந்து, அந்த நகரத்தின் இணை காவல் ஆணையர் மதுகர் பாண்டே (போக்குவரத்துத்துறை) கூறியதாவது, "நகரத்தின் முறையான சாலை போக்குவரத்திற்காக எடுக்கப்பட்ட இந்த முடிவை செயல்படுத்தும் விதமாக, ஏழு மண்டலங்களின் துணை ஆணையர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆகையால், இதுகுறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் பணியையும், அதனை செயல்படுத்தும் பணியையும் அவர்கள் மேற்கொள்ள உள்ளனர்" என்றார்.

பொதுவாக, நோ பார்க்கிங்கில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு 100 முதல் 200 ரூபாய் வரையே பல மாநிலங்களில் வசூலிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், மும்பையில் தற்போது ரூ. 200 மட்டுமே வசூலிக்கப்படுகின்றது. இதனை, பல மடங்கு உயர்த்தும் விதமாக, அந்நகராட்சி முடிவு செய்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், போக்குவரத்து நெரிசலில் மணி கணக்கில் காத்திருக்கும் வானக ஓட்டிகள் பலர், இதற்கு வரவேற்பு அளித்துள்ளனர்.

முன்னதாக மத்திய அரசு சார்பிலும், இதேபோன்றதொரு முயற்சி போக்குவரத்து விதிமீறிலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் எதிராக எடுக்கவிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியது. அதன்படி, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்டு வரும் தற்போதைய அபராதத் தொகையைக் காட்டிலும், பத்து மடங்கு அதிகமாக அபராதம் வசூலிக்க அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகின்றது.

அந்தவகையில், காலாவதியான ஓட்டுநர் உரிமத்தை வைத்து வாகனத்தை இயக்குபவர்களுக்கு, முன்னதாக வசூலிக்கப்பட்டு வந்த ரூ. 500 அபராதம், தற்போது ரூ. 5 ஆயிரமாகவும், மது அருந்திவிட்டு பைக்கை இயக்கினால் ரூ. 2 ஆயிரத்திற்கு பதிலாக பத்தாயிரம் ரூபாயும் அபராதமாகவும் வசூலிக்கப்பட உள்ளது. இதேபோன்று, மற்ற போக்குவரத்து விதிமீறல்களின் அபராதத் தொகையும் பத்து மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications