அதிர வைக்கும் மோசடி அம்பலம்... கஸ்டமர்களின் கையெழுத்தை போலியாக போட்ட டீலர்கள்... எதற்காக தெரியுமா?
வாடிக்கையாளர்களின் கையெழுத்தை போலியாக போட்டு டீலர்கள் அதிர வைக்கும் மோசடியில் ஈடுபட்டது தற்போது அம்பலமாகியுள்ளது.

கார் மற்றும் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் தலையில் டீலர்கள் மிளகாய் அரைப்பதாக இந்தியாவில் நீண்ட காலமாக பல்வேறு புகார்கள் உள்ளன. இதனை நிரூபிக்கும் வகையில், 2 சம்பவங்கள் தற்போது அரங்கேறியுள்ளன. இந்த இரண்டு டீலர்களும் வாடிக்கையாளர்களிடம் மிகவும் நூதனமான முறையில் மோசடியில் ஈடுபட்டதோடு, விதிமுறைகளையும் மீறியுள்ளனர்.

எனவே அந்த 2 டீலர்களின் மீதும் ஆர்டிஓ அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். மஹாராஷ்டிர மாநிலம் கோலப்பூர் நகரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அவை இரண்டுமே டூவீலர் டீலர்ஷிப்கள்தான். இதில், ஒரு டீலர்ஷிப் செய்த மோசடி அதிர வைக்கும் வகையில் உள்ளது. இந்தியாவை பொறுத்த வரையில் சாலை விபத்துக்களால் அதிகம் பாதிக்கப்படுவது இரு சக்கர வாகன ஓட்டிகள்தான்.

எனவே டூவீலர்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலானோர் ஹெல்மெட் அணிவதில்லை. எனவே இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் அனைவரையும் ஹெல்மெட் அணிய வைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக புதிய டூவீலர்களை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் டீலர்கள் இரண்டு ஹெல்மெட்களை கட்டாயமாக வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பெரும்பாலான டீலர்ஷிப்களில் இந்த விதிமுறை பின்பற்றப்படுவதில்லை. இந்த விதிமுறை குறித்து வாடிக்கையாளர்களுக்கும் பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லை.

எனவே வாடிக்கையாளர்கள் மிகவும் எளிதாகவே ஏமாற்றப்படுகின்றனர். இந்த சூழலில், இந்த விதிமுறையை வைத்துதான் கோலாப்பூர் நகரில் உள்ள ஒரு டீலர்ஷிப்பில் மோசடி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ''இரு சக்கர வாகனம் வாங்கிய வாடிக்கையாளர் ஒருவரின் உறுதி சான்றிதழை (Affidavit) டீலர் ஒருவர் ஆர்டிஓ-விடம் சமர்ப்பித்திருந்தார்.

இதில், தன்னிடம் ஏற்கனவே இரண்டு ஹெல்மெட்கள் இருப்பதாகவும், அதனால் புதிய மோட்டார்சைக்கிளை ஓட்டும்போது அந்த ஹெல்மெட்களை பயன்படுத்தி கொள்வதாகவும் அந்த வாடிக்கையாளர் கூறியிருந்தார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரிடம் நாங்கள் விசாரணை நடத்தினோம். அப்போது அவர் எந்தவிதமான உறுதி சான்றிதழையும் நான் சமர்ப்பிக்கவில்லை என எங்களிடம் கூறினார்.

அத்துடன் உறுதி சான்றிதழில் இருந்த அவரது கையெழுத்திலும் முரண்பாடுகள் உள்ளன. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட டீலருக்கு நாங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அத்துடன் அந்த டீலர்ஷிப்பின் வர்த்தக சான்றிதழும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மற்றொரு டீலர்ஷிப் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில், இரு சக்கர வாகன உரிமையாளர் ஒருவரிடம் இருந்து எங்களுக்கு புகார் ஒன்று வந்தது. இந்த புகாரில், டூவீலரை வாங்கிய பின் அனைத்து ஆவணங்களையும் டீலர் தன்னிடம் வழங்கி விட்டதாக சம்பந்தப்பட்ட உரிமையாளர் கூறியிருந்தார். ஆனால் ஆர்டிஓ அலுவலகத்தில் வாகனத்தை பதிவு செய்யவில்லை என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக நாங்கள் விசாரணை நடத்தியதில், சம்பந்தப்பட்ட வாகனத்தை பதிவு செய்வதற்கு டீலர் விண்ணப்பிக்கவே இல்லை என்பது தெரியவந்தது. எங்கள் விதிகளின்படி இது விதிமுறை மீறல். எனவே சம்பந்தப்பட்ட டீலரின் வர்த்தக சான்றிதழை சஸ்பெண்ட் செய்துள்ளோம். டீலர்கள் விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும்'' என்றனர்.

விதிமுறைகளை மீறியதற்காக, கோலாப்பூர் நகரில் 2 டூவீலர் டீலர்கள் மீது ஆர்டிஓ அதிகாரிகள் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ள சம்பவம் பாராட்டுக்குரியது. ஆனால் ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்யாமல் இன்னும் பல டீலர்கள் வாகனங்களை விற்பனை செய்வதாக புகார்கள் உள்ளன. அதேபோல் ஹெல்மெட் வழங்காமல் டூவீலர்களை பல டீலர்கள் விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.

எனவே அத்தகைய டீலர்கள் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இது தொடர்பாக ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ''விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என டீலர்களுக்கு தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகிறோம். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளோம்'' என்றனர்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








