ஏகே47 ரக துப்பாக்கி ஸ்டிக்கரை காரில் ஒட்டியவருக்கு ரூ12 ஆயிரம் அபராதம்! இதுல தப்பு என்ன இருக்குது தெரியுமா?
காரின் பின் கண்ணாடியில் ஏகே47 துப்பாக்கியின் ஸ்டிக்கரை ஒட்டி ஊரின் அமைதியைக் கெடுக்கும்படியான வாசகம் எழுதியவருக்கு ரூ12 ஆயிரம் அபராதம் விதித்து போக்குவரத்துத் துறை உத்தரவிட்டது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் கார்களில் ஸ்டிக்கர்களை ஓட்டுவது பெயர்களை எழுதுவது எல்லாம் சாதாரண ஒரு விஷயமாகிவிட்டது. கார்களின் கண்ணாடியில் தனது பெயர், தனது குழந்தைகளின் பெயர், தனது நிறுவனத்தின் பெயர், கடவுளின் பெயர், புகைப்படங்கள், வடிவங்கள் ஆகியவற்றை ஸ்டிக்கர்களாக ஓட்டி வருகின்றனர். இது மோட்டார் வாகன சட்டப்படி தவறு என்றாலும் தமிழகத்தில் பெரிய அளவில் அதைப் பற்றி அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.

ஆனால் வட இந்தியாவில் இப்படியாக கார்களின் ஸ்டிக்கர் ஓட்டுவது எல்லையை மீறிச் செல்கிறது. மக்கள் தங்கள் ஜாதி பெயர், மத பெயர், மற்றவர்களைத் தூண்டிவிடும்படியான வாசகங்கள், அல்லது அமைதியைக் கெடுக்கும் படியான உருவங்களில் ஸ்டிக்கர்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஜாதி, மத சண்டைகள் சச்சரவுகள் அதிகமாக வட இந்தியாவில் நடந்து வருகிறது. இதனால் அரசு அதிகாரிகள் இப்படியாக அமைதியைக் கெடுக்கும்படியான ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இப்படியாகச் சமீபத்தில் உ.பி மாநிலத்தில் துணை போக்குவரத்து அதிகாரியாக பிலிபித் நகரில் பணியாற்றி வருபவர் விரேந்திர சிங், இவர் சாலையில் அவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சாலையின் ஓரமாக ஒரு ஆங்கில வழிக் கல்வி பள்ளிக்கு அருகே ஒரு கார் ஒன்று பஞ்சாப் மாநில பதிவெண்ணுடன் நின்று கொண்டிருந்தது. அந்த காரின் பின்பக்க கண்ணாடியில் ஏகே47 துப்பாக்கி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.
அந்த துப்பாக்கி ஸ்டிக்கருக்கு கீழே "தி வேர்ல்டு பவர் ஆஃப் கால்சா" என குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் கால்சா என்பது பஞ்சாபில் வாழும் சீக்கியர்களை பாதுகாப்பதாகக் கருதும் ரு குழுவாகும். அவர்கள் ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்தி போராடிய வீரர்கள். இன்று அவர்களின் பெயரில் தீவிரவாதம் நடக்கிறது. இந்த ஸ்டிக்கர் அதற்கு ஆதரவாக இருப்பது போல் இருந்துள்ளது. இதனால் வீரேந்திர சிங் தன் காரை நிறுத்தியுள்ளார்.
பின்னர் தன் காரிலிருந்து இறங்கி துப்பாக்கி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காருக்கு சென்று அந்த காரை சோதனை செய்துள்ளார். குறிப்பிட்ட காரின் ஆவணங்களை வாங்கி பார்த்த போது அந்த கார் கடந்த 2011ம் ஆண்டே பதிவு முடிவு விட்டது அதன் பின்னர் ஃபிட்னஸ் சான்று பெறவில்லை. காருக்குள் வயதான ஒரு பெண்ணும், ஒரு குழந்தையும் வேறு இருந்துள்ளனர். குழந்தையைப் பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்ததாகக் கூறினர்.
மேலும் இந்த காரை ஓட்டி வந்தவரிடம் கார் ஓட்டுநர் உரிமம் கூட இல்லை இந்த 3 குற்றங்களுக்கும் மொத்தமாக விரேந்திர சிங் அபராதம் விதித்தார் மொத்தம் ரூ12 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த அபராத ரசீதை துப்பாக்கி ஸ்டிக்கர் ஒட்டிய காரை ஓட்டி வந்த சந்திரஜீத் சிங் என்பவரிடம் வழங்கினர். இந்த விவகாரம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
காரில் ஜாதி, மதம், மொழி உள்ளிட்டவற்றைத் தூண்டும் வகையில் ஸ்டிக்கர்களை ஒட்டக் கூடாது. இது சட்டப்படி குற்றமாகும், இதற்காக அபராதம் விதிக்கப்படலாம். தமிழ்நாட்டிலும் இதற்கு அபராதம் விதிக்க வழிகள் உள்ளது. அதனால் இவ்வாறான முயற்சியில் யாரும் ஈடுபடாதீர்கள். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








