இது தேவையா...!! சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட கேடிஎம் பைக் ஓட்டுனர்!
பொது சாலையில் மிக மோசமாக பைக்கை ஓட்டிய கேடிஎம் ட்யூக் பைக் ஓட்டுனரின் ஓட்டுநர் உரிமத்தை ஆர்டிஒ இடைநீக்கம் செய்துள்ளது. இது தொடர்பாக இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்மார்ட்போன் இல்லாதவர்களே இப்போதெல்லாம் பார்க்கவே முடிவதில்லை. சிலர் இன்னமும் கேமிரா இல்லாத சிறிய ரக மொபைல் போன்களை வைத்திருக்க, பெரும்பான்மையானவர்களின் கைகளில் நல்ல கேமிரா தரத்துடன் ஸ்மார்ட்போன் உள்ளது.

இதனால் குற்ற சம்பவங்களில் ஈடுப்படுவோர்கள் பெரும்பாலும் அவர்களது மொபைல் போன்களினாலேயே சிக்கி கொள்கின்றனர். இதுபோன்று இணையத்தில் வைரலான வீடியோவினால் மாட்டி கொண்டவரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகின்றோம்.
இது தொடர்பாக தி க்ரீன் பங்க்46 என்ற யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் ஒரு குழுவினர் பைக்குகளுடன் கேரளாவிற்கு செல்கின்றனர். இவர்கள் அனைவருமே ஒழுக்கமாக இயங்குவது போல் தான் தெரியும்.

ஆனால் அவர்களில் ஒருவர் மட்டும் தனது கேடிஎம் பைக்கில் மிக அபாயகரமான முறையில் இயங்குகின்றார். சாலையில் எதிர்புறமாக வாகனங்கள் வரும் பாதைக்கு செல்லும் அவர், மீண்டும் தனது குழுவினர் உடன் இணைவது, மீண்டும் சாலையின் மறுபகுதியின் இறுதிக்கு செல்வது என இருக்கிறார்.

மேலும் சில இடங்களில் பைக்கை முழுவதும் சாய்த்து மிகவும் ஆபத்தமான வகையில் அவர் ஓட்டுவதையும் இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. இதில் வாகன ஓட்டிகள் எவருக்கும் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்றாலும், எதிர்புறத்தில் வேறெதாவது வாகனம் அதிக வேகத்தில் வந்திருந்தால் நிச்சயம் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

தாறுமாறாக பைக்கை ஓட்டுபவர் தான் இந்த வீடியோவையும் இணையத்தில் பதிவிட்டுள்ளார். பார்வையாளர்களின் மத்தியில் இந்த வீடியோ வைரலானதை அடுத்து கேரள மோட்டார் வாகன துறை இந்த குறிப்பிட்ட பைக் ஓட்டிக்கு அபாரத தொகையை செலுத்துவதற்கான ஆன்லைன் செல்லானை அனுப்பி வைத்துள்ளது.

அதுமட்டுமின்றி அவரது ஓட்டுநர் உரிமத்தை இடைநீக்கம் செய்ய வேண்டுமென்று பிராந்திய போக்குவரத்து அலுவலர் (ஆர்டிஒ)-வையும் கேட்டு கொண்டது. ஆர்டிஒ-வும் அந்த நபரது ஓட்டுநர் உரிமத்தை இடைநீக்கம் செய்துள்ளார்.

இந்த வீடியோவில் மோட்டார் வாகன துறை அலுவலகத்திற்கு சென்று அந்த ரைடர் அபராதத்தை செலுத்தவதும் காட்டப்பட்டுள்ளது. செலுத்தப்பட்ட அபாரத தொகை குறித்த விபரங்கள் தெரியவரவில்லை.

அச்சுறுத்தக்கூடிய பைக் ரைடர்கள் அவர்களது வீடியோவின் மூலமாகவே சிக்குவது இது முதல்முறை அல்ல. சமீபத்தில் கூட குஜராத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கேடிஎம் பைக்கில் இரு கைகளையும் விட்டப்படி ஓட்டுவது, சட்டையை, தலைமுடியை சரி செய்வது என்ற காரணங்களுக்காக அபராதத்திற்கு உள்ளாகி இருந்தார்.

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சாலை விபத்துகள் பதிவாகும் நாடுகளுள் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இவ்வாறான கடுமையான, விரைவான தண்டனைகள் வழங்கப்பட்டாலும், சாலை விபத்துகளை குறைக்க முடியாமல் அரசாங்கங்கள் குழம்பி வருவதும் உண்மையே.


Click it and Unblock the Notifications








