சைலன்சரை மாற்றினால் பைக் ஆர்.சி. ரத்து.
கேரள மாநில போலீசார் கேரள மாநில போக்குவரத்து துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தி சைலன்சர் மாற்றியமைக்கப்பட்ட பைக்குகளின் ஆர்.சி.யை ரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் பைக்கில் உள்ள பாகங்களை மாற்றி வெளி மார்க்கெட்டில் விற்பனையாகும் வேறு பாகங்களை பொருத்தி பயன்படுத்தி வரும் பழக்கம் அதிகமாக இருக்கிறது.

இந்திய மோட்டார் வாகன சட்டப்படி வாகனத்தை பதிவு செய்யும் போது பொருத்தப்பட்ட உதிரி பாகங்களை மட்டுமே பயன்படுத்த அனுமதியுண்டு , அந்த உதிரி பாகங்கள் பழுதானாலும் அதே போன்ற உதிரி பாகத்தை தான் பொருத்த வேண்டும்

இந்தியாவில் பைக்குகளை பொருத்தவரை ராயல் என்பீல்டு, கே.டி.எம்., யமஹா ஆகிய நிறுவனங்களில் உள்ள சில பைக்குளை வாங்கும் சிலர் அதிக சத்தம் வருவதற்காக அதை மாற்றியமைக்கின்றனர்.

அந்த பைக்குகள் எழுப்பும் அதிக சத்தம் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பதற்றத்தையும் கவன சிதறைலையும் ஏற்படுத்துகிறது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன.

இந்நிலையில் பைக்கில் சைலன்சர்களை மாற்றி பயன்படுத்தி வருபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பெங்களூருவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்ட சைலன்சர்களை ரோடுரோலரை ஏற்றி அழித்த சம்பவங்களும் நடந்துள்ளது.

குர்கானில் சைலன்சர் மாற்றியமைத்து பைக் ஓட்டியவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வாறாக ஒவ்வொரு மாநில போலீசாரும் ஒவ்வொரு நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில் கேரள மாநில போலீசாரும் தற்போது தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

கேரள மாநில போலீசார் கேரள மாநில போக்குவரத்து துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தி சைலன்சர் மாற்றியமைக்கப்பட்ட பைக்குகளின் ஆர்.சி.யை ரத்து செய்ய முடிவு செய்துள்ளனர். இனி கேரளாவில் யாராவது மாற்றியமைக்கப்டட சைலன்சர்களுடன் வலம் வந்தால் அவர்கள் பைக்கின் ஆர். சி. ரத்து செய்யப்படும்.

இச்சட்டத்தை வரும் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக தெரிகிறது. தற்போதே போலீசார் ஆர்.சி., ரத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த துவங்கி விட்டனர்.

ஆர்.சி. ரத்து செய்தால் அந்த வாகனத்தை அவர்கள் பயன்படுத்த கூடாது. மேலும் இந்த ரத்து நடவடிக்கை என்பது தற்காலிகமானது தான். குறைந்த பட்சமாக 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும் ரத்து காலம் முடிந்ததும் மாற்றியமைக்கப்பட்ட சைலன்சரை அகற்றிவிட்டு அனுமதிக்கப்பட்ட சைலன்சரை பொருத்தினால் மீண்டும் அனுமதி கிடைக்கும்.

இத்தகவலை போக்குரவத்து துணை கமிஷ்னர் அஜித் குமார் உறுதி செய்துள்ளார். இந்த நடவடிக்கையால் கேரளாவில் சைலன்சர்களை மாற்றியமைக்கும் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என போலீசார் நம்புகின்றனர்.


Click it and Unblock the Notifications