கம்பத்தில் மோதி சுக்குநூறான நிசான் ஜிடி- ஆர்... சட்டையை உதறிக்கொண்டு வெளியே வந்த ஓட்டுனர்
ரஷ்யாவில், அதிவேகத்தில் சென்ற நிசான் ஜிடி- ஆர் ஸ்போர்ட்ஸ் கார் சாலையோர மின்கம்பத்தில் மோதி பயங்கரமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
இந்த விபத்தின் நேரடி காட்சிகளை வீடியோவில் பார்க்கும்போது, அந்த கார் அப்படியொரு வேகத்தில் செல்கிறது என்பதோடு, மோதிய வேகத்தை பார்த்தால் ஓட்டியவர் உயிர் பிழைத்திருக்க முடியாது என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால், அந்த காரை ஓட்டி வந்தவர் உயிர் பிழைத்ததோடு, விசாரணையில் அவர் அந்நாட்டின் பிரபல விளையாட்டு வீரர் என்றும் தெரியவந்துள்ளது.

புயல் வேகம்
ரஷ்யாவின் கிராஷ்நோடார் நகரில் இந்த விபத்து நடந்தது. விபத்தில் சிக்குவதற்கு முன் அந்த கார் மணிக்கு 170 கிமீ வேகத்தில் பறந்தது. அந்த வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்ததும், சாலையோர சிமென்ட் கம்பபத்தில் மோதி சுக்குநூறாக உடைந்தது.

வீடியோ காட்சிகள்
அந்த விபத்து அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. அப்போது அந்த கார் சீறிச்செல்வதையும், அது கண் இமைக்கும் நேரத்தில் கம்பத்தில் மோதி சிதறுவதையும் பார்க்க முடிகிறது. அத்துடன், கார் மோதிய வேகத்தில் அந்த கம்பமும் முறிந்து விழுகிறது.

அதிசயம்
அந்த காரை ஓட்டி வந்த பிரகஸ்பதி, சாவகாசமாக அந்த காரிலிருந்து வெளியேறுகிறார். அது இடது பக்க டிரைவிங் கொண்ட மாடல். விபத்தில் காரின் வலது பக்கம்தான் அதிக சேதம் ஏற்பட்டிருக்கிறது. அதுவே, அவரை மரண விளிம்பிலிருந்து காப்பாற்றியுள்ளது.

பாதுகாப்பான கார்
விபத்தில் மோதிய விதம் மற்றும் காரின் பாதுகாப்பு சாதனங்கள், கட்டுமானம் ஆகியவை அந்த ஓட்டுனரை காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விளையாட்டு வீரர்
அந்த காரை ஓட்டி வந்தவர் ரஷ்யாவின் பிரபல காலபந்து விளையாட்டு வீரர் ஆந்த்ரே யசேன்கோ[31] என்று தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்ய அணியில் இவரும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடிபோதை
விபத்து நடந்ததை நேரில் பார்த்தவர்கள் காரை ஓட்டி வந்த ஆந்த்ரே குடிபோதையில் இருந்ததாக தெரிவித்தனர். குடிபோதையில் நிதானமின்றி, அந்த காரை அதிவேகத்தில் செலுத்தி வந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளார். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பை ஏற்படவில்லை என்பதே பெரிய விஷயம்.

விசாரணை
இந்த கார் விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், ஆந்த்ரே குடிபோதையில் காரை ஓட்டினாரா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








