பதுங்கு குழிக்குள் தஞ்சமைடந்த மெர்சிடைஸ் எஸ்யூவி கார்... காரணம் என்ன?
சரித்திரத்தை சற்று உற்று நோக்கிப் பார்த்தால் ஓர் உண்மை நமக்குப் புலப்படும். மாவீரர்களானாலும், சர்வாதிகாரிகளானாலும் ஒரு கட்டத்தில் கடுமையான தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்திருப்பார்கள் என்பதை வரலாற்றுப் பக்கங்களின் மூலம் நாம் உணரலாம்.
அப்படி ஒரு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்ததை படித்திருப்போம். சமீபத்தில் சதாம் உசேன் வரை நிலைமை அப்படித்தான். ஒரு சில மன்னர்கள் தங்களது குதிரைகளுடன் பதுங்கு குழிக்குள் மறைந்து இருந்ததாகவும் கூட கதைகள் இருக்கின்றன. அந்த மாதிரியான சோதனைகளை அனுபவித்துப் பார்க்க நினைத்த ரஷியக் கலைஞர் ஒருவர், தனது மெர்சிடைஸ் ஜி - கிளாஸ் எஸ்யூவி காரை பதுங்கு குழிக்குள் இறக்கியிருக்கிறார். ஏன், எதற்காக என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

வலேரி லிஸுநோவா என்பது அவரது பெயர். ரஷியாவின் கலூகா பகுதியில் நடைபெறும் கலை மற்றும் கலாசாரக் கண்காட்சியின் ஒரு பகுதியாக இந்த பதுங்கு குழு ஐடியாவை செய்து முடித்திருக்கிறார் லிஸுநோவா.

ஜி - வேகன் (ஜி-500) என்ற ஆஃப் ரோட் எஸ்யூவி ஜீப்தான் அந்த முயற்சிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ சார்ஜுடு வி8 ரக எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. சமதளப் பரப்பிலும், கரடு முரடான சாலைகளிலும் லாவதமாகப் பயணிக்கக் கூடிய திறன் கொண்டவை இந்த ஜி - வேகன் கார்கள். 415 பிஎச்பி முறுக்கு விசையையும், 610 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் இந்த எஞ்சினில் உள்ளது.

கிட்டத்தட்ட 2.5 டன் எடை கொண்ட இந்த காரானது, முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 5.9 விநாடிகளில் எட்டக் கூடிய ஆற்றல் கொண்டது. ஜி - வேகன் காரின் அதிகபட்ச வேக அளவு மணிக்கு 210 கிலோ மீட்டராகும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம்... இத்தனை சிறப்பம்சம் மிகுந்த காரை பதுங்கு குழிக்குள் நிறுத்த ஆசைப்பட்ட லிஸுநோவா, அதற்காக பெரிய பள்ளத்தைத் தோண்டியிருக்கிறார்.

அதற்குள் ஜி - வேகன் காரை நிறுத்தி, அதைச் சுற்றிலும் மரக் கட்டைகளால் மூடியிருக்கிறார். கிட்டத்தட்ட சவப் பெட்டி மாதிரித்தான் இந்த ஏற்பாடும். அதைத் தொடர்ந்து, மிச்சமிருந்த இடங்கள் மண்ணும், புதர்களும் கொண்டு நிரப்பப்பட்டன. காரின் மேற்கூரையானது காய்ந்த சருகுகள் மற்றும், இழை, தளைகளால் மூடப்பட்டது. காரின் பக்கவாட்டில் நீளமாக பைப் ஒன்று பொருத்தப்பட்டது.

காரை ஆன் செய்தால், பதுங்கு குழியிலும் ஏசி போட்டுக் கொண்டு ஜம்மென்று இருக்கலாம். அதற்காகத்தான் இந்த பைப் ஐடியா. மொத்தத்தில் மேலிருந்து பார்த்தால், அங்கு பதுங்கு குழி இருப்பதாகத் தோன்றாது. மாறாக, சாதாரண மணல் திட்டுகள் போன்றே அது காட்சியளிக்கும். ஆனால், உள்ளே சௌகரியாமாக ஏசி போட்டுத் தூங்கலாம்.

லிஸுநோவாவின் இந்த ஏற்பாடு பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தது. இந்த முயற்சி, சோதனை அளவோடு நின்று விட்டால் சரி... பதுங்கு குழிகளைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துவிட்டால், நாட்டில் சட்டம் - ஒழுங்கு இருக்காது என்று வேடிக்கையாகக் கூறி கலைந்து சென்றனர் மக்கள்.


Click it and Unblock the Notifications