சென்னை ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கோட்டயத்திற்கு சிறப்பு வந்தே பாரத் ரயில் அறிவிப்பு!
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னையிலிருந்து கோட்டயம் வரை செல்லும் சிறப்பு வந்தே பாரத் ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி சபரிமலை செல்லும் பக்தர்கள் இந்த ரயிலை பயன்படுத்தி தங்கள் ஆன்மீக பயணத்தை மேற்கொள்ள முடியும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கார்த்திகை மார்கழி மாதங்களில் கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலைக்கு தென்னிந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் எல்லாம் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை சென்று வழிபாடு நடத்துவார்கள். இதனால் இந்த இரு மாதங்களிலும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்.

இந்த நேரத்தில் சென்னையிலிருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே நிர்வாகம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோட்டயம் வரை வந்தே பாரத் ரயில்களை வாரம் இருமுறை சிறப்பு ரயிலாக இயக்க முடிவு செய்து அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வரும் 15,17,22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கோட்டயத்திற்கு வந்தே பாரத் ரயில் செல்கிறது.
சென்னையிலிருந்து சரியாக அதிகாலை 4:30 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் மாலை4:15மணிக்கு கோட்டயத்தை சென்றடைகிறது. சென்னையில் இருந்து கிளம்பும் இந்த ரயில் காட்பாடி, சேலம், பாலக்காடு அலுவா ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் இன்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே ஐஆர்சிடிசி தளத்தில் துவங்கிவிட்டது.

இந்த ரயிலில் பயணிக்க டிக்கெட் விலை விபரங்களை பொருத்தவரை சென்னையில் இருந்து கோட்டயம் வரை செல்ல வந்தே பாரத் ரயிலில் முன்பதிவு செய்யும் போது ஏசி சேர் கார் பெட்டியில் பயணிக்க ஒரு பயணிக்கு ரூபாய் 1640 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
அதே எக்ஸிகியூடிவ் சேர் கார் பெட்டியில் பயணிக்க ஒரு பயணிக்கு ரூபாய் 3300 டிக்கெட் கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது.இந்த ரயிலில் வரும் டிசம்பர் 17ம் தேதிக்கான ரயில் டிக்கெட் மட்டுமே தற்போது இருக்கிறது. மற்ற நாட்களுக்கான டிக்கெட்டுகள் எல்லாம் விற்றுதீர்த்து தற்போது காத்திருப்பு பட்டியலில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

கோட்டயத்தில் இருந்து சபரிமலைக்கு செல்ல சுமார் 100 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும் அதற்காக பஸ் வசதிகள் எல்லாம் செய்யப்பட்டுள்ளன. கோட்டையத்திலிருந்து ஏராளமான பஸ்கள் சபரிமலைக்கு நிலக்கல் வரை செல்கிறது. அதன் மூலம் பக்தர்கள் சபரிமலைக்கு தங்கள் ஆன்மீக யாத்திரையை செய்ய முடியும். நிலக்கடலில் இருந்து பம்பை வரை செல்ல கோவில் நிர்வாகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தற்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோட்டயம் வரை இயக்கப்படும் இந்த வந்தே பாரத் சிறப்பு ரயில் சென்னை ஐயப்ப பக்தர்கள் மட்டுமல்லாமல் சேலம், காட்பாடி ஆகிய பகுதிகளில் இருந்தும் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இது மேலும் அடுத்தடுத்த வாரங்களுக்கு வரும் தை மாதம் வரை நீட்டிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
தை மாதம் சபரிமலையில் ஜோதி தரிசனத்துடன் நடை அடைக்கப்படும் அதன் பின்பு சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் எல்லாம் திரும்பி வந்து விடுவார்கள். கார்த்திகை மாதம் துவங்கி மார்கழி மாதம் இறுதி வரை இந்த ஐயப்ப சீசனில் லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தில் இருந்து சபரிமலை நோக்கி படையெடுப்பார்கள். கடந்த சில நாட்களாக சபரிமலையில் வரலாறு காணாத கூட்டம் இருந்ததாக செய்திகள் வெளியானது.
இதனால் ஐயப்ப பக்தர்கள் பலர் தங்கள் பயணத்திட்டங்களை எப்படி சுலபமாக சென்று வரும் வகையில் திட்டமிடலாம் என யோசனை செய்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நிச்சயம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என நாம் நம்பலாம். ஏற்கனவே பல்வேறு ஐயப்ப பக்தர்கள் இந்த வந்தே பாரத் ரயிலை தங்கள் பயணத் திட்டத்திற்காக சேர்த்து டிக்கெட் விலை புக் செய்து விட்டனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தெற்கு ரயில்வே நிர்வாகம் இது போன்ற சீசன் நேரங்களில் சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்வது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியதுதான். குறிப்பாக ஐயப்ப சீசனில் ஏராளமான பக்தர்கள், சபரிமலைக்கு பயணம் செய்வார்கள். இதை குறி வைத்து சென்னையில் இருந்து கோட்டயம் வரை வந்தே பாரத் ரயிலை இயக்க திட்டமிட்டது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்.


Click it and Unblock the Notifications









