மனதை ரிலாக்ஸ் செய்ய கார் கழுவுவேன்.. மனம் திறந்த சச்சின்!
"கிரிக்கெட் போட்டிகள் இல்லாத நேரங்களில் மனதை ரிலாக்ஸ் செய்ய எனது கார்களை நானே ஷாம்பூ போட்டு கழுவுவேன்," என்று சச்சின் டெண்டுல்கர் மனம் திறந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கர் கார்கள் தீராத மோகம் கொண்டவர் என்பது அறிந்த விஷயம். பிஎம்டபிள்யூ முதல் ஃபெராரி வரை ஓட்டி பார்த்துவிட்ட சச்சின் கடைசியாக நிசான் ஜிடி-ஆர் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியது குறித்து ஏற்கனவே செய்தி வெளியிட்டிருக்கிறோம்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற சச்சின் சிறிய ஓய்வுக்குப் பின் மும்பையில் நடந்த ஆட்டோமொபைல் விருது வழங்கும் விழா ஒன்றில் நேற்று கலந்து கொண்டார். அப்போது கார்கள் மீது தனக்கு இருக்கும் காதல் குறித்து சச்சின் மிகவும் நெகிழ்ச்சியாக கூறினார். அவர் விழாவில் பேசியதாவது,"
"எனக்கு 8 வயது முதலே கார்கள் மீது தீராத காதல் இருந்து வருகிறது. பந்த்ரா பகுதியில் எனது வீட்டுக்கு பின்புறம் பெரிய டிரைவ் இன் தியேட்டர் இருந்தது. அந்த தியேட்டர் வளாகத்துக்குள் அப்போது பிரபலமாக இருந்த ஃபியட், அம்பாசடர் கார்கள் ஏராளமாக நிற்கும். சில சயமங்களில் கான்டெஸா, ஸ்டான்டர்டு 2000 கார்களையும் பார்க்க முடியும். எனது வீட்டின்பால்கனியில் நின்றுகொண்டு அந்த கார்களை பார்க்கும்போது எதிர்காலத்தில் நானும் ஒரு காரை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற உந்துதல் எழுந்தது," என்றார்.
மேலும், அவர் கார் வாங்கும்போது பல சமயங்களில் மனைவியிடம் பொய் சொல்லி இருப்பதாக தெரிவித்தார். அவர் கூறுகையில், எனது மனைவியிடம் கார் வாங்குவது குறித்து அடிக்கடி பொய் சொல்லி இருக்கிறேன். காரின் சஸ்பென்ஷன் சிறப்பாக இருக்கும், பின் இருக்கையில் குழந்தைகள் அமர்ந்து பார்ப்பதற்கு திரைகள் இருக்கும் என்று அனைத்தையும் சொல்லிவிட்டு காரின் பவர் குறித்து மட்டும் கடைசி வரை வாய் திறக்க மாட்டேன். நான் சொல்லிக் கொண்டிருப்பது 500 பிஎச்பி திறன் கொண்ட கார் என்பது ஷோரூமுக்கு சென்றபின்தான் என் மனைவிக்கு தெரிய வரும்.
மேலும், எனக்கு பார்முலா-1 பந்தயங்கள் என்றால் அலாதி பிரியம். பார்முலா-1 பந்தயங்கள் பற்றிய செய்திகளை பத்திரிக்கைகளில் படித்து தெரிந்து கொள்வதோடு, நேரம் கிடைத்தால் டிவி நேரலையில் பந்தயத்தையும் பார்ப்பேன். பார்முலா-1 துவங்குவதற்கு முன் சில நாட்கள் எனக்கு தூக்கம் வராது. ஏனெனில், எனக்கு கார்களின் ஆக்சிலரேசன் மிகவும் பிடிக்கும்.
இவற்றை விட அவர் கூறிய சுவாரஸ்யமான விஷயம்," கிரிக்கெட் போட்டிகள் இல்லாத சமயங்களில் மனதை ரிலாக்ஸ் செய்ய எனது கார்களை நானே ஷாம்பூ போட்டு கழுவுவேன். கார்களை பராமரிப்பது ஒரு கலை. மேலும், நன்கு அறிந்த நண்பர்களுடன் கார்களை பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொள்வதோடு, அதிகம் தெரிந்து கொள்ள ஆசைப்படுவேன்.
எனக்கு இன்னொரு ஆசையும் இருக்கிறது. எனது இதயத்துடன் கார்கள் பேச வேண்டும் என்பதுதான் அது. கார்கள் உங்களுடன் பேசும்போது ஏற்படும் அனுபவம் அலாதியானது. அப்போது உங்கள் நீங்கள் காரை பரிவுடனும், பாசமுடனும் பராமரிக்க துவங்குவீர்கள்," என்ற சச்சின் கடைசியில் அதெல்லாம் சரி, உங்கள் காரை எப்போது ஷாம்பூ போட்டு கழுவப் போகிறீர்கள்," என்று அவர் கேட்டவுடன் சிரிப்பலைகளும், கைதட்டல்களுமாக அந்த அரங்கை கிடுகிடுக்க வைத்தன.

நிசான் ஜிடி ஆர்

பிஎம்டபிள்யூ எம்5

ஃபெராரி 390 மடோனா

நிசான் ஜிடி ஆர்

பென்ஸ் இ கிளாஸ்

மாருதி 800

பிஎம்டபிள்யூ 5 சீரிஸ்



Click it and Unblock the Notifications








