தடையை மீறி சுற்றித் திரியும் வாகனங்களுக்கு அடையாளம்... கிடுக்கிப்பிடி போட்ட சேலம் போலீசார்!
தடையை மீறி சுற்றித் திரியும் வாகனங்களை எளிதில் அடையாளம் காணும் திட்டத்தை கையில் எடுத்துள்ளனர் சேலம் போலீசார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கின்றது. இதனால், அனைத்து மாநிலங்களின் வாசக் கதவும் (எல்லையும்) மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. உயிர் கொல்லி கொரோனா வைரசிடம் இருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக அரசு இந்த கசப்பான உத்தரவை தேசம் முழுவதிலும் அமல்படுத்தியுள்ளது. ஆனால், அரசின் இந்த நோக்கத்தை சீர் குலைக்கும் விதமாக ஒரு சிலர் வெளியே தற்போதும் சுற்றி திரிந்த வண்ணம் இருக்கின்றனர்.

கொரோனா வைரசின் தீவிரத்தைப் பற்றி உணராமல் தங்களுக்கு விடுமுறை அளித்திருப்பதாக எண்ணி அவர்கள் ஜாலி ரைடில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்று பொறுப்பற்று சுற்றியதன் காரணத்தினாலயே இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவின் கோர பிடியில் சிக்கி பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றன.

இந்த நாடுகள் மருத்துவத்துறையில் பல மடங்கு வளர்ச்சியடைந்த நாடுகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும் வைரசுக்கு எதிரான போரில் செய்வதறியாமல் திக்கி திணறி வருகின்றது.
வைரசுக்கான மாற்று மருந்து கண்டுபிடிக்காததே இத்தகைய நிலைக்கு காரணம்.

ஆனால், இந்தியாவில் இதைப்பற்றி சற்றும் கவலைக் கொள்ளாமல் பலர் சாலைகளில் சுற்றித் திரிந்த வண்ணம் இருக்கின்றனர். இதனால் அரசின் நோக்கம் சீர்குலைவதுடன் கொரோனா தொற்று தீவிரமடைவதற்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளது.

ஆகையால், மக்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒடுக்குவதற்கான முயற்சியில் போலீஸார் களமிறங்கியிருக்கின்றனர். இதற்காக பல அதிரடி நடவடிக்கைகளை அவர்கள் எடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, லத்தி சார்ஜ் செய்வது, வழக்கு பதிவு செய்வது மற்றும் அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கையில் அவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதுதவிர, சில விநோதமான தண்டனைகளையும் அவர்கள் வழங்கி வருகின்றனர். அதாவது, பச்சை மிளகாயை திண்ண வைப்பது, சைட் லாக் செய்யப்பட்ட வாகனத்தில் எட்டு போட சொல்வது, தோப்பு கரணம் போடச் சொல்வது என பல புதுமையான யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர்.

இந்நிலையில், வீணாக சாலையில் சுற்றி திரியும் வாகன ஓட்டிகளைத் தண்டிக்க தமிழக போலீஸார் புதுமையான யுக்தியை ஒன்றை கையாண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றி திரியும் இளைஞர்களின் வாகனங்களில் முன் மற்றும் பின் பக்கங்களில் பெயிண்ட் பூசும் சில்மிஷ வேலையில் இறங்கியிருக்கின்றனர்.

இந்த தரமான சம்பவத்தை சேலம் மாவட்ட காவல்துறையினர் கையிலெடுத்துள்ளனர். இவர்கள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான நிறங்களைப் பயன்படுத்தி வாகனங்கள் மீது தெளித்து வருகின்றனர். இதற்காக இரு சக்கர வாகனங்களின் முன் மற்றும் பின் பக்க ஃபென்டர்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

அதாவது, ஓர் இளைஞர் தேவையற்ற நிலையில் சுற்றித் திரிவது கண்டறியப்பட்டால் அந்த இளைஞரின் வாகனத்தில் ஒரு கோடு இடப்படும். இவ்வாறு, ஐந்து முறைகள் வரை பெயிண்டால் கோடு போடப்பட உள்ளது. தற்போது மஞ்சள் நிற பெயிண்டைப் பயன்படுத்தி அவர்கள் கோடு போட்டு வருகின்றனர்.

இவ்வாறு, ஐந்து முறைக்கு மேல் அதாவது ஐந்திற்கும் அதிகமான நிறங்களில் கோடு போட்டிருந்தால் அந்த வாகனத்தை பறிமுதல் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கையை போலீஸார் மேற்கொள்ள இருப்பதாக எச்சரித்துள்ளனர். தேசிய ஊரடங்கு உத்தரவு முழுமையாக அமல்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கையில் சேலம் போலீஸார் இறங்கியுள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளில் போலீஸார் இதைவிட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, கண் மூடித் தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இம்மாதிரியான நடவடிக்கைகளுக்கு மத்தியில் சேலம் போலீஸாரின் விநோதமான தண்டனை வரவேற்பளிக்கும் வகையில் உள்ளது. இருப்பினும், இந்த விநோதமான நடவடிக்கையில் அத்தியாவசிய தேவைக்காக வெளிவரும் யாரும் தவறுதலாக சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications








