காப்பாத்துங்க... பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... எதற்காக தெரியுமா?
பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை கிட்டத்தட்ட கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை தற்போது சந்தித்து வருகிறது. அனைத்து முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனையும் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கிறது. ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன.

இதில், இந்தியாவில் தற்போது நிலவும் பொருளாதார மந்த நிலை, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் ஆதரவு, 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள மிக கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள், ஓலா மற்றும் உபேர் போன்ற 'கேப்' நிறுவனங்களின் விஸ்வரூப வளர்ச்சி உள்ளிட்டவை மிகவும் முக்கியமானவை.

விற்பனை சரிவு காரணமாக வாகன நிறுவனங்கள் அனைத்தும் உற்பத்தியை குறைத்து வருகின்றன. மேலும் ஆட்குறைப்பு நடவடிக்கையிலும் இறங்கியுள்ளன. இதுதவிர மார்க்கெட்டில் நிலவி வரும் மந்த நிலையால் ஏராளமான டீலர்ஷிப்களும் இழுத்து மூடப்பட்டு வருகின்றன. எனவே ஆட்டோமொபைல் துறை சார்ந்த ஊழியர்கள் ஏராளமானோரின் வேலை பறிபோயுள்ளது.

இதே நிலை தொடர்ந்தால், இன்னும் பல லட்சக்கணக்கானோர் வேலையிழக்கலாம் என எச்சரிக்கப்பட்டு வருகிறது. நிலைமை தீவிரமடைந்து கொண்டே செல்வதால், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (ஆகஸ்ட் 23) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆட்டோமொபைல் துறையை மீட்டெடுப்பதற்காக பல்வேறு திட்டங்களை அவர் அறிவித்தார்.

ஆட்டோமொபைல் துறையை எடுத்து கொண்டால், இந்தியாவிலேயே தமிழகத்தின் பங்கு மிக முக்கியமானது. இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையின் மிக முக்கியமான மையமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. தமிழக தலைநகர் சென்னை 'ஆசியாவின் டெட்ராய்டு' என வர்ணிக்கப்படுகிறது. அந்த அளவிற்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இங்கு நிரம்பி வழிகின்றன.

இந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்தியில் தமிழகம் 27 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. அதே சமயம் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 35 சதவீதமாக இருந்து வருகிறது. இதுவே ஆட்டோமொபைல் ஏற்றுமதி என எடுத்து கொண்டால், தமிழகம் 45 சதவீத பங்கை கொண்டுள்ளது.

இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆட்டோமொபைல் துறையை சரிவில் இருந்து மீட்கும் நடவடிக்கைகளை அறிவிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக அதாவது நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 22) இந்த கடிதத்தை அவர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளார்.

தடுமாறி கொண்டிருக்கும் ஆட்டோமொபைல் துறையை பிரதமர் நரேந்திர மோடி காப்பாற்ற வேண்டும் என அவர் இந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக தலையிட்டு, ஆட்டோமொபைல் துறைக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டு கொண்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகையில், ''விற்பனையில் நிலவி வரும் மந்த நிலை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது கவலையை தெரிவித்து கொண்டுள்ளார். அத்துடன் டிமாண்ட்டை அதிகரிக்க தேவையான தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்'' என்றனர்.

முன்னதாக ஆட்டோமொபைல் துறையில் வேலையிழப்புகள் தொடர்பாக அமைச்சர் பாண்டியராஜன் ட்விட் ஒன்றை சமீபத்தில் போட்டிருந்தார். அதில், ''இது எச்சரிக்கை மணி. குறிப்பாக இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையின் அதிக செறிவு கொண்ட தமிழகத்திற்கு. சலுகைகள் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து ஊழியர்களின் வேலையை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும்'' என கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications