Ambulance Exam: ஆம்புலன்ஸில் வைத்து 10ம் வகுப்பு பொது தேர்வை எழுதிய மாணவி!
தற்போது நாடு முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்தந்த மாநில அரசுகள் அதற்கான தேர்வுகளை நடத்தி வருகின்றன. இதில் மும்பையைச் சேர்ந்த ஒரு சிறுமி வாகன விபத்தில் சிக்கிப் படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில் தனது 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஆம்புலன்ஸில் வைத்தே எழுதியுள்ளார். இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.
மும்பையைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் சிறுமி முபஸ்ஸிரா சையிதா, 15 வயதாகும் இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கினார். கார் இவரது இடது பக்க காலில் ஏறியது. இதையடுத்து இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு இவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சையின் போதே இவருக்கு அடுத்த தேர்வுக்கான நேரம் வந்தது. ஆனால் இவரை டாக்டர்கள் 2 வாரம் பெட் ரெஸ்ட் எடுக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் இவரது பரிட்சையை எழுதினால் தான் இவர் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற முடியும். இந்நிலையில் இவரது பள்ளி நிர்வாகத்திற்குத் தெரியவந்தது. அவர்கள் இந்த சிறுமியின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தி இவர் தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
இந்த சிறுமிக்கு நடந்த விபத்து குறித்துத் தேர்வு ஆணையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு இந்த சிறுமி தனியாகத் தேர்வு எழுதத் தேர்வு ஆணையம் வழிகாட்டுதல்களை அனுப்பியது அதன்படி இந்த சிறுமி தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. இவர் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் தேர்வு மையத்திற்கு அழைத்துவரப்பட்டார்.
தேர்வு மையத்தில் இவர் ஆம்புலன்ஸிலிருந்து இறங்கிச் செல்ல முடியாததால் இவருக்கு வினாத்தாள் ஆம்புலன்ஸிலேயே வழங்கப்பட்டது. மேலும் இந்த மாணவி தற்போது தேர்வு தானாக எழுதும் நிலையில் இல்லாததால் அதே பள்ளியில் பயிலும் 9 வயது சிறுமியாக நூர்சாபா அன்சாரி என்ற பெண் இவருக்காக எழுதும் பணியைச் செய்தார். அதாவது முபஸ்ஸிரா சையிதா வினாத்தாளைப் படித்து விடைகளைச் சொல்லச் சொல்ல நூர்சாபா தேர்வை எழுதினர்.
இதை கண்ணகாளிக்க அந்த பள்ளியின் தலைமையாசிரியர் ஆரேக்கியம்மாள் ஆண்டனி என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் முன்னிலையில் ஒரு போலீசார் மற்றும் பள்ளியின் ப்யூன் ஆம்புலன்ஸிற்கு வெளியே காவலுக்கு நிற்க மாணவி தேர்வை ஆம்புலன்ஸில் வைத்தே தேர்வை எழுதினார். ஒரு விபத்து என்பது ஒருவரது வாழ்க்கை தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடும் என்பதற்கு இந்த சம்பவமே உதாரணம்.
அந்த விபத்து மட்டும் நிகழவில்லை என்றால் வழக்கமாக மற்ற மாணவிகளைப் போல முபஸ்ஸிரா சையிதாவும் தேர்வை எழுதியிருக்கலாம். ஒரு சில நொடிகள் செய்த தவற்றின் காரணமாக இன்று மிகப்பெரிய பிரச்சனையை இவர் எதிர்கொண்டு வருகிறார். இந்த தவறு இவருடையதா அல்லது அந்த காரை ஓட்டி வந்தவருடையதா என்பது தெரியவில்லை என்றாலும் பாதிப்பு என்னவோ பெரியது தான்.
இதே போலக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்படியாக டிராஃபிக் ஜாம் ஏற்பட்ட நிலையில் மாணவிகள் பரிச்சைக்கு நேரமானதால் இறங்கித் தேர்வு மையத்திற்கு ஓடியுள்ளனர். இந்த வீடியோ அப்பொழுது வெளியாகி வைரலாக பரவியது. தற்போது தமிழகத்திலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான தேர்வு காலமாக இது இருக்கிறது. என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது : தினமும் ஆயிரக்கணக்கான விபத்துக்கள் இந்தியாவில் நிகழ்ந்தாலும் ஒவ்வொரு விபத்தும் தனி நபரை மட்டுமல்லாமல் அவர் சார்ந்திருக்கும் குடும்பம் உள்ளிட்ட பலரைப் பாதிக்கிறது. இதனால் சாலைகளில் விபத்தைத் தடுக்க சாலை விதிகளை நாம் நிச்சயம் பின்பற்ற வேண்டும்.
தற்போது தேர்வு காலம் என்பதால் தேர்வு எழுதப்போகும் மாணவ மாணவிகள் சாலையில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். முடிந்தளவிற்குப் பெரியவர்களைத் துணைக்கு அழைத்துச் சென்று வர வேண்டும். தேர்வு மையத்திற்குச் சென்று வரும் போதும் கவனமாக இருக்க வேண்டும். இதில் தான் உங்களது எதிர்காலமே அடங்கியிருக்கிறது.


Click it and Unblock the Notifications