நம்ம ஊரு ரோட்ல எப்போ எது வேணாலும் நடக்கலாம்... சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ...
அதிர்ச்சிகரமான விபத்து ஒன்றின் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய சாலைகளில் தினமும் நூற்றுக்கணக்கான விபத்துக்கள் அரங்கேறி கொண்டுள்ளன. போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற தவறுவதும், அலட்சியமுமே இதற்கு மிகவும் முக்கிய காரணம். இப்படி நடக்கும் விபத்துக்களின் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. இந்த வகையில் தற்போது ஒரு விபத்தின் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

முதியவர் ஒருவர் ஸ்கூட்டரில் சாலையோரமாக நின்று கொண்டிருப்பதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. அப்போது ஹோண்டா அமேஸ் கார் ஒன்று இடது பக்கமாக திரும்பி முக்கிய சாலைக்கு வருகிறது. அதே சமயம் மாருதி வேகன் ஆர் கார் ஒன்று, வலது பக்கமாக திரும்பி முக்கிய சாலைக்கு வர தயாராகி கொண்டுள்ளது.

இந்த சமயத்தில் முன்னால் ஸ்கூட்டரில் நின்று கொண்டிருந்த முதியவரை நோக்கி ஹோண்டா அமேஸ் கார் டிரைவர் ஹாரன் அடித்தார். இதனால் கொஞ்சம் முன்னோக்கி நகர்ந்த அவர், மறுபடியும் அப்படியே நின்று கொண்டார். எனவே அந்த முதியவரை ஓவர்டேக் செய்வதற்கு, ஹோண்டா அமேஸ் காரின் டிரைவர் முயற்சித்தார்.

அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த மற்றொரு ஸ்கூட்டரின் ரைடர் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விட்டார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. அத்துடன் அவர் ஹெல்மெட் அணிந்திருந்தார். இதனால் தலையில் காயம் ஏற்படுவதில் இருந்தும் அவர் தப்பி விட்டார். விபத்தின் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
கீழே விழுந்த ஸ்கூட்டர் ரைடர் அதிவேகத்தில் வந்ததை போல் தெரிகிறது. அதிவேகத்தில் பயணம் செய்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். அத்துடன் சிங்கிள் லேன் சாலையில், டிவைடர்கள் எதுவும் இல்லாத சூழலில், மற்றவர்களை ஓவர்டேக் செய்வதற்காக, வாகனங்கள் மிகவும் எளிதாக எதிர் லேனுக்குள் வரும். அதேதான் இங்கும் நடந்துள்ளது.

கீழே விழுந்த ஸ்கூட்டர் ரைடரால் தனது டைரக்ஸனை மாற்ற முடியவில்லை. ஏனெனில் வேகன் ஆர் கார் பாதி சாலைக்கு வந்து விட்டதால், சாலையில் இடம் குறுகலாக மாறி விட்டது. மேலும் சாலை ஈரப்பதமாக இருந்ததும், நிலைமையை இன்னும் சிக்கலாக மாற்றி விட்டது. இந்த விபத்திற்கு சாலையோரமாக ஸ்கூட்டரில் நின்று கொண்டிருந்த முதியவரும் ஒரு முக்கிய காரணம்.

இதுபோன்ற குறுகலான சாலைகளில் இப்படி நின்று கொண்டிருப்பது, இடத்தை அடைத்து கொள்ளும். இதன் மூலம் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். எனவே சாலையில் வாகனம் ஓட்டும்போது, மற்றவர்களையும் மனதில் வைத்து செயல்படுங்கள். இந்த விபத்து நடைபெற்றவுடன் ஹோண்டா அமேஸ் காரின் டிரைவர் நிற்காமல், அங்கிருந்து தப்பி விட்டதாக கூறப்படுகிறது.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்தான் உடனடியாக ஓடி வந்து, விபத்தில் சிக்கிய ஸ்கூட்டர் ரைடரை மீட்டனர். இந்திய சாலைகளில் எப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு இந்த விபத்து ஒரு உதாரணம். எப்போதும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதுடன், வாகனத்தை நிதானமான வேகத்தில் இயக்குவதும் அவசியம்.


Click it and Unblock the Notifications








