நடுரோட்டில் போலீஸ்காரரின் கையை பதம் பார்த்த இளைஞர்!! போலீஸுக்கே பாதுகாப்பு இல்லையா... வைரல் வீடியோ!
பெங்களூர் (Bengaluru)-இல் வாகன சோதனையில் ஈடுப்பட்டு கொண்டிருந்த போலீஸ்காரரின் கையை ஸ்கூட்டரில் வந்த இளைஞர் கடித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி உள்ளது. இதுகுறித்து இணையத்தில் வெளியாகி உள்ள வீடியோவையும், போலீசாரின் கையை கடிக்கும் அளவிற்கு இந்த இளைஞருக்கு என்ன ஆனது? என்பதை பற்றியும் விரிவாக இனி பார்க்கலாம்.
சாலை விபத்துகளில் நம் இந்தியா உலகளவில் முன்னிலையில் இருப்பதை பற்றி நான் கூற வேண்டியது இல்லை. மது போதையில் வாகனம் ஓட்டுவதும், ஆக்ரோஷமாக மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டும் பழக்கமும் நம் மக்களிடையே பரவலாக காணப்படுகிறது. இதன் காரணமாகவே, சாலை விபத்துகளை பற்றிய செய்திகளை நாள்தோறும் செய்திகளில் பார்க்க முடிகிறது.

சாலை விதிமீறல்களை குறைக்கவும், குற்ற செயல்களை தடுக்கவும் முக்கியமான சாலைகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்படுவது வழக்கம். முக்கியமாக, ஹெல்மெட் அணியாமல் 2-வீலர் ஓட்டுபவர்களை பிடிப்பதற்காகவே சமீப காலமாக அதிகளவில் போலீசார் வாகன சோதனைகளில் ஈடுப்படுகின்றனர். குறிப்பாக, கர்நாடகா தலைநகர் பெங்களூரில் ஹெல்மெட் அணியாமல் 2-வீலர் ஓட்டுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது என்று கூட சொல்லலாம்.
இந்த நிலையில், ஹெல்மெட் அணியாமல் 2-வீலர் ஓட்டியவரை தடுத்து நிறுத்திய பெங்களூர் போலீஸ்காரர் மீது விசித்திரமான முறையில் தாக்குதல் நடந்துள்ளது. பெங்களூர், வில்சன் கார்டன் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டு கொண்டிருந்த போது, அந்த வழியாக ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணியாமல் இளைஞர் ஒருவர் வந்துள்ளார்.

இதனால், வழக்கம்போல் அந்த இளைஞரை தடுத்தி நிறுத்திய போலீசார், ஹெல்மெட் அணியாமல் 2-வீலர் ஓட்டியதற்காக அந்த நபருக்கு அபராதம் விதித்தனர். மேலும், ஹெல்மெட் அணியாமல் 2-வீலர் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகளையும் அந்த இளைஞருக்கு போலீசார் எடுத்துக் கூறினர். இருப்பினும், அந்த அறிவுரைகளை கேட்கும் மனநிலையில் அந்த இளைஞர் இல்லை.
போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்படவே அந்த இளைஞர் முற்பட்டதாக கூறப்படுகிறது. பதிலுக்கு போலீசாரும் வாக்குவாதத்தில் ஈடுபட, இதில் டென்ஷனாகிய அந்த இளைஞர் ஒரு கட்டத்தில் அருகே நின்றிருந்த போலீசாரின் கையை பிடித்து கடித்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தையும் மொபைல் போனில் காட்சிப்படுத்திய ஜெயதீர்தா என்பவர் அதனை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஜெயதீர்தாவின் இதுகுறித்த எக்ஸ் பதிவில், "தான் ஹெல்மெட் அணியாமல் இருந்ததை படம் பிடித்ததற்காக, வீடியோ எடுத்த நபரது போனை அடித்து நொறுக்குமாறு மிரட்டிய பைக் ஓட்டுநர், போலீஸ்காரரின் கையை கடித்தார். தயவுசெய்து காவல்துறையை பலப்படுத்துங்கள்" என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரையில் மட்டும் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.
போலீஸ்காரரின் கையை கடிந்த இளைஞரை பற்றி உடனடியாக அருகில் உள்ள ஹோய்சாலா சட்டம் & ஒழுங்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ஹோய்சாலா போலீசார் அந்த இளைஞரை தங்களது கட்டுப்பாட்டில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அரசாங்க ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவின் கீழ் இந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹெல்மெட் அணியாமல் 2-வீலர் ஓட்டுபவரை போலீஸார் தடுத்து நிறுத்துவதும், அதற்கு சில வாகன ஓட்டிகள் தங்களது எதிர்வினையை காட்டுவதும் அவ்வப்போது நடக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால், இந்த இளைஞர் என்ன நினைத்தாரோ என தெரியவில்லை, போலீசாரின் கையை கடித்துள்ளார். இதன்மூலம் இந்த நபர் இணையத்தில் வைரலாகி உள்ளார் என்றாலும், போலீசாரின் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் இனி என்ன மாதிரியானதாக இருந்தாலும் அதனை இந்த நபர் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.


Click it and Unblock the Notifications









