கை காட்டி நிறுத்த முயன்ற போலீஸ்காரர் மீது டூவீலரை ஏற்றிய இளைஞர்... தெரிந்தே செய்த வீடியோ வைரல்...
கை காட்டி நிறுத்த முயன்ற போலீஸ்காரர் மீது இளைஞர் ஒருவர் ஸ்கூட்டரை ஏற்றிய அதிர்ச்சிகரமான சிசிடிவி வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.

போக்குவரத்து விதிமுறைகளை மதிக்காத வாகன ஓட்டிகளால், இந்தியாவில் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்திய சாலைகள் ஒரு ஆண்டிற்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் உயிர்களை விபத்துக்களில் காவு வாங்குகின்றன.

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்டறிந்து தண்டிப்பதற்காக போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர். அப்போது போலீசார் அத்துமீறி நடந்து கொள்வதாக வாகன ஓட்டிகள் தரப்பில் இருந்து பல்வேறு புகார்கள் முன்வைக்கப்படுகின்றன.

குறிப்பாக போலீசார் கை காட்டியும் நிறுத்தாமல் பயணிக்கும் வாகன ஓட்டிகள் லத்தியால் தாக்கப்படுவதாக புகார்கள் உள்ளன. கடந்த காலங்களில் இதுபோன்ற சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஆனால் மும்பையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் அதிகாரிகள் இரண்டு பேர் சமீபத்தில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களது ரோந்து கார் அருகே நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது ஸ்கூட்டர் ரைடர் ஒருவர் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தார். அவர் பின்னால் பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இரண்டு பேரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் அவர்கள் இருவருமே ஹெல்மெட் அணியவில்லை. இதனை கவனித்த போலீஸ் அதிகாரி ஒருவர், கை காட்டி அந்த ஸ்கூட்டரை நிறுத்த முயன்றார். ஆனால் அந்த ரைடர் 'ஸ்லோ' செய்து நிறுத்துவதற்கு பதிலாக, அந்த போலீஸ் அதிகாரி மீது அப்படியே ஸ்கூட்டரை மோதினார்.

இதனால் போலீஸ் அதிகாரி நிலை தடுமாறி கீழே விழுந்தார். அத்துடன் ஸ்கூட்டரில் வந்த இரண்டு பேரும் கீழே விழுந்தனர். அந்த பெண் உடனடியாக எழுந்து விட்டாலும் கூட, போலீஸ் அதிகாரி மற்றும் ஸ்கூட்டரை ஓட்டி வந்த ரைடர் ஆகியோரால் எழ முடியவில்லை.

உடனே இதர வாகன ஓட்டிகள் ஓடி வந்து போலீஸ் அதிகாரியை மீட்டனர். ஆனால் அப்போதும் கூட அவரால் இயல்பாக நிற்க முடியவில்லை. அந்த அளவிற்கு அவர் காயம் அடைந்திருந்தார். அதிர்ச்சிகரமான இந்த சம்பவம் முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

அத்துமீறும் வாகன ஓட்டிகளால், போலீஸ் அதிகாரிகள் சந்தித்து வரும் கஷ்டங்களை இந்த வீடியோ நமக்கு விளக்குகிறது. suraj pandit772 என்பவர் இந்த வீடியோவை யூ-டியூப்பில் வெளியிட்டுள்ளார். அதனை நீங்கள் கீழே காணலாம்.
வாகன ஓட்டிகள் அதிவேகமாகவும், ஹெல்மெட் அணியாமலும் பயணிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. நேரமின்மையை இதற்கு முக்கியமான காரணமாக கூறலாம். எனவே எங்கு செல்வதாக இருந்தாலும் முன்கூட்டியே கிளம்புங்கள்.

இதன்மூலம் வீண் அவசரத்தை தவிர்க்கலாம். மற்றொரு காரணம் குடிபோதை. ஆல்கஹால் உள்ளே சென்று விட்டால், மூளை மழுங்கி விடுகிறது. சிந்திக்கும் திறன் குறைந்து விடுவதால், மது அருந்திய வாகன ஓட்டிகள் கண்மூடித்தனமான வேகத்தில் வாகனங்களை இயக்குகின்றனர்.

எனவே மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்த்து விடுங்கள். அதிவேகமாக சென்றால், வாகனத்தின் கட்டுப்பாட்டை இழக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாகனத்தை நிறுத்துவதற்கான கால அவகாசமும் இருக்காது.

எனவே மிதமான வேகத்தில் பயணிப்பதே நல்லது. அதே சமயம் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்களை கூறுகின்றனர். கொஞ்ச தூரம்தான் செல்ல போகிறேன். அதனால் ஹெல்மெட் தேவையில்லை என சிலர் தெரிவிக்கின்றனர்.

இன்னும் சிலரோ, புதிய ஹேர் ஸ்டைலுக்காக அதிகம் செலவு செய்துள்ளேன். நான் செல்ல வேண்டிய இடத்தை அடையும் போது, தலை வியர்த்து ஹேர் ஸ்டைல் அலங்கோலமாக இருப்பதை நான் விரும்பவில்லை என கூறுகின்றனர். ஆனால் இதுபோன்ற காரணங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ஹெல்மெட் அணிவதே நல்லது.
Source: News 18


Click it and Unblock the Notifications