விரைவில் இந்தியாவின் முதல் நீர் விமானம்... இந்த விமானம் பற்றி வெளிவராத தகவல்கள் உங்கள் பார்வைக்காக!!
இந்தியாவில் விரைவில் முதல் முறையாக சீ-பிளேன் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இந்த விமானம் பற்றிய சுவாரஷ்ய தகவல்களைத் தொடர்ந்து பார்க்கலாம்.

விரைவில் இந்தியாவில் சீ-பிளேன்கள் பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றன. பிரதமர் மோடி வரும் 31ம் தேதி இதனை நாட்டிலேயே முதல் முறையாக தொடங்கி வைக்க இருக்கின்றனர். இந்த நிலையில், சீ பிளேன்களின் சோதனையோட்டம் மிக தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றது. சபர்மதி ஆற்றில் இருந்து நர்மதாவில் அமைந்திருக்கும் ஒற்றுமையின் சிலை வரையில் இந்த சேவை இயக்கப்பட இருக்கின்றது.

இதற்காக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் 19 இருக்கைகள் கொண்ட சீ-பிளேன்கள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த விமானங்களே வருகின்ற 31ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளன. இந்த சேவைக்காக வரவழைக்கப்பட்ட விமானம் ஒன்றே கடந்த ஞாயிறன்று கொச்சியின் வெண்டுருத்தியில் உள்ள நீர் நிலையில் தரையிறக்கப்பட்டது. இங்கு ஏரிபொருள் நிரப்ப மற்றும் தொழில்நுட்ப பரிசோதனை ஆகியவை மேற்கொள்ளப்பட்டன. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கில் இந்த சீ-பிளேனை இந்திய அரசாங்கம் பயன்பாட்டிற்கு கொண்டு வர இருக்கின்றது.

இந்த நிலையில் இந்த சேவைப் பற்றியும், சீ-பிளேன் பற்றியும் நாம் அறிந்துக்கொள்வது கட்டாயமாகியுள்ளது. ஆகையால், சீ-பிளேன் பற்றிய முக்கிய விஷயங்களைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். படகுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே இந்த சீ-பிளேன்கள். இது இரு வகையில் பயன்பாட்டில் உள்ளன. ஒன்று தன் உடலையே மிதவையமைப்பில் கொண்டிருக்கும். மற்றொன்று, மிதக்கும் படகு போன்ற அமைப்பை தனியாக இறக்கைகளுடன் இணைத்தவாறு இருக்கும்.

இவையே இரண்டிற்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம். இதுதவிர வேறெந்த வித்தியாசத்தையும் இவற்றில் காண முடியாது. சீ-பிளேன்கள் தண்ணீரை மட்டுமே தரையாகப் பயன்படுத்தி வானில் பறக்கும். இதுவே பிற விமானங்களுக்கும் இவற்றிற்கும் இடையே உள்ள வித்தியாசமாக இருக்கின்றது.

இதுபோன்ற விமானங்களின் பயன்பாடு உலகின் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே காணப்படுகின்றது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் சீ-பிளேன் சேவைப் பயன்பாட்டில் உள்ளது. இதேபோன்று நாம் கடல் எல்லையைப் பகிர்ந்துக் கொள்ள இலங்கை மற்றும் மாலத்தீவுகளில் சீ-பிளேன் சேவை இயக்கப்பட்டு வருகின்றது.

இந்தியாவில், அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் வர்த்தக ரீதியாக ஜல் ஹன்ஸ் நிறுவனம் சீ-பிளேன் சேவையை இயக்கி வருகின்றது. இந்த நிலையிலேயே நாட்டிற்குள் முதல் முறையாக மத்திய போக்குவரத்து அமைச்சகத்தின்கீழ் சீ-பிளேன் சேவைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட இருக்கின்றது.

இந்த சேவையை பிரெஞ்ச் நாட்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து மேற்கொள்ள இருப்பதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இதற்கான விமானங்களை ஜப்பானில் இருந்து வாங்கியிருப்பதாகவும் அது கூறியுள்ளது. இந்த விமானத்தில் 19 இருக்கைகள் காணப்பட்டாலும், 14 பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு முனையில் மற்றொரு முனைக்கு ஒரு நாளைக்கு எட்டு முறை சீ-பிளேன்கள் பறக்க இருக்கின்றன. அதாவது, 4 முறை வருகையும், 4 முறை புறப்பாடும் இருக்கும். இவ்வாறே சபர்மதி ஆற்றில் இருந்து நர்மதாவில் அமைந்திருக்கும் ஒற்றுமையின் சிலை வரை சீ-பிளேன்கள் பறக்க இருக்கின்றன.

ஒரு முறை ஒரு நபர் பயணிக்க ரூ. 4,800 கட்டணமாக நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிட்டர்ன் பயணிக்க வேண்டுமானால் மீண்டும் தனியாக புக் செய்து கொள்ள வேண்டுமாம். விமானத்தில் பயணிக்கும் நேரம் 1 மணி நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின்போது ஆகாயத்தில் பறந்தவாறு பல்வேறு இடங்கள் சுற்றிக் காண்பிக்கப்படும்.

குறிப்பாக, நர்மதா ஆற்றின் தென்மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் சூல்பனேஷ்வர் சரணாலயம், கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள வன விலங்குகளின் காப்பகம், முதலைகளுக்கு பெயர்போன இடமான பாறைகள் நிறைந்த மகர் தலவை உள்ளிட்ட பல்வேறு இடங்கள் சுற்றிக் காண்பிக்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








