மாஸ்டர் ஸ்ட்ரோக்... இனி இந்த ரூல்ஸ் தெரியாம யாரும் கார்ல ஏற முடியாது... வளைச்சு வளைச்சு பிடிக்க போறாங்க!
காரில் பயணம் செய்பவர்களுக்கு அதிரடியான புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் போக்குவரத்து விதிமுறைகள் தற்போது நாளுக்கு நாள் கடுமையாக்கப்பட்டு வருகிறது. சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே போக்குவரத்து விதிமுறைகள் விஷயத்தில் மத்திய அரசும், மாநில அரசுகளும் கெடுபிடி காட்ட தொடங்கியுள்ளன.

சென்னையில் கூட இன்று முதல் (அக்டோபர் 20) புதிய விதிமுறை ஒன்று அமலுக்கு வந்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். முன்பு குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் இனிமேல் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணம் செய்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும்.

அவர்கள் குடித்திருந்தாலும் சரி அல்லது குடிக்காமல் இருந்தாலும் சரி, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் உடன் பயணம் செய்தால், அபராதம் கட்டிதான் ஆக வேண்டும். அத்துடன் காவல் துறை பதிவு செய்யும் வழக்கையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். இதன் மூலம் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறையலாம் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வரிசையில் கர்நாடக மாநிலத்தில் தற்போது அதிரடியான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவின்படி, கர்நாடக மாநிலத்தில் இனி கார்களில் பயணம் செய்யும் அனைவரும் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும். தவறினால் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இது ஒரு நபருக்கான அபராதம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு காரில் சீட் பெல்ட் அணியாத ஒவ்வொரு நபருக்கும் தலா 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். கர்நாடக மாநில அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அம்மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் இது முதல் முறை தவறு செய்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையாகும்.

சீட் பெல்ட் அணியாத குற்றத்திற்காக இரண்டாவது முறையாக சிக்கினால் 2 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கும் மேல் அபராதம் விதிக்கப்படலாம் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த புதிய விதிமுறை தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகள் விளக்கமும் அளித்துள்ளனர். இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியது பின்வருமாறு:

முன்பு போலீஸ் கமிஷனர் அலுவலகங்கள் உள்ள நகரங்களில், டிரைவர் மற்றும் முன் பகுதியில் உள்ள பயணி ஆகியோர் மட்டுமே சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. ஆனால் இனிமேல் கர்நாடக மாநிலம் முழுவதும், காரில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே இனிமேல் கார்களின் பின் பகுதியில் அமர்ந்து பயணம் செய்பவர்களும் கட்டாயமாக சீட் பெல்ட்டை அணிய வேண்டும். இவ்வாறு காவல் துறை அதிகாரிகள் கூறினர். பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டுதான் இந்த விதிமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதற்கு அனைவரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

சீட் பெல்ட் மிகவும் முக்கியமான பாதுகாப்பு அம்சம் ஆகும். ஆனால் சீட் பெல்ட்களின் முக்கியத்துவத்தை கார்களில் பயணம் செய்யும் பலர் உணர்வதில்லை. ஒருவேளை திடீரென சாலை விபத்து நிகழ்ந்தால், பயணிகள் படுகாயம் அடைவதை சீட் பெல்ட்கள் தடுக்கின்றன. எனவே அனைத்து பயணிகளும் சீட் பெல்ட்களை முறையாக அணிந்தால் உயிரிழப்புகளை தடுக்கலாம்.

அத்துடன் சீட் பெல்ட் அணிந்திருந்தால் மட்டுமே ஏர்பேக் விரிவடையும் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும். சீட் பெல்ட் அணியாமல் இருந்தால், ஏர்பேக் விரிவடையாது. எனவே ஏர்பேக் உள்ள கார்களில் பயணம் செய்தாலும், சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் முழுமையான பாதுகாப்பு கிடைக்காது என்பதை அனைத்து பயணிகளும் உணர வேண்டும்.

இந்த புதிய விதிமுறையின் மூலம் கர்நாடக மாநிலத்தில் இனிமேல் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்கள் மற்றும் காயமடைபவர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்ப்பதாக போக்குவரத்து காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் காலங்களில் கர்நாடகா உள்பட இந்தியா முழுவதும் இன்னும் போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications








