அடேங்கப்பா சீமான் புதுசா வாங்குன காருல இவ்வளவு விஷயம் இருக்குதா? பழைய காரை ஏன் மாத்தினாரு?-முழு தகவல்கள்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் தற்போது டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை வாங்கியுள்ளார். இது குறித்த முழு விபரங்களை காணலாம்.

தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத அரசியல் கட்சி தலைவராக வளர்ந்து கொண்டிருப்பவர் சீமான். இவர் நாம் தமிழர் என்ற பெயரில் ஒரு கட்சியை துவங்கி அதில் திராவிட சித்தாந்தங்களை எதிர்த்து அரசியல் பிரச்சாரங்களை செய்து தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார். இவருக்கும் சர்ச்சைக்கும் பெரும் பொருத்தம் இருப்பது போல இவர் என்ன செய்தாலும் அது சர்ச்சையாக மாறிவிடுகிறது.

இந்நிலையில் இவர் கடந்த 2014ம் ஆண்டு இசூஸூ நிறுவனத்தின் எம்யூ7 காரை தன் பயன்பாட்டிற்காக வாங்கினார். இந்த கார் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியானது. இந்த காரின் மதிப்பு ரூ26.50 லட்சம் என அவர் தான் தேர்தலில் போட்டியிடும் வேட்புமனுவில் தாக்கல் செய்திருந்தார். இந்த காரை அவர் வாங்கி சுமார் 8 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது புதிதாக ஒரு காரை வாங்கியுள்ளார்.

டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ட்சூனர் காரை அவர் வாங்கியுள்ளார். இந்த காரில் அவர் சமீபத்தில் திருப்போரூர் கந்தசாமி கோவிலுக்கு வந்து காரின் சாவியை சாமியின் முன்பு வைத்து பூஜை செய்து காருக்கும் பூஜை செய்து வணங்கியுள்ளார். இதன் மூலம் இவர் புதிய கார் வாங்கிய செய்தி தற்போது வெளியே தெரிய வந்துள்ளது.

பொதுவாக சீமான் பயன்படுத்தும் கார்களில் ஒரு ஒற்றுமை இருக்கும் அது அவர் பயன்படுத்தும் காரின் எண். சீமான் இதற்கு முன்பு இசூஸூ காரை பயன்படுத்தினார். அந்த காரின் எண் 8, அதே போல அவர் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தும் வேன் ஒன்று உள்ளது, அதன் எண்ணும் 8 தான். அதே போல தற்போது அவர் வாங்கியிருக்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் எண்ணும் 8 என இருக்கும்படி அவர் வாங்கியுள்ளார்.

பொதுவாக வாகனங்களுக்கு 8 என்ற எண் ராசியில்லாத எண் என சொல்லுவார்கள். இதனால் போக்குவரத்து துறையே 8 என்ற எண்ணை வழங்கமாட்டார்கள். ஆனால் யாராவது அந்த எண்ணை விரும்பி கேட்டால் வழங்கிவிடுவார்கள். அதன்படி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த 8 என்ற எண்ணை கேட்டு வாங்கியுள்ளார்.

இது மட்டுமல்ல அவர் தனது வாகனத்தின் எண்ணை எப்பொழுதும் ஆங்கிலத்தில் எழுதாமல் தமிழில் மட்டுமே எழுதும் வழக்கத்தை கொண்டவர். அவர் அதுவும் தமிழ்நாடு என முதல் சொல்லை முழுமையாக குறிப்பிட்டு எழுதப்பட்டிருக்கும் அதே போல தான் தற்போது அவர் வாங்கியுள்ள டொயோட்டா ஃபார்ச்சூனர் காரிலும் எழுதப்பட்டுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை பொருத்தவரை இந்தியாவில் அதிகமாக அரசியல் வாதிகளால் வாங்கப்படும் கார் இது. இது 7 சீட்டர் காராக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் மொத்தம் 9 விதமான வேரியன்ட்களை டொயோட்டா நிறுவனம் வழங்குகிறது. அதில் இரண்டு மட்டுமே பெட்ரோல் வேரியன்ட் மற்றது எல்லாம் டீசல் வேரியன்ட் தான்.

மேலும் இந்த காரில் 4X4 மற்றும் 4X2 ஆகிய தொழிற்நுட்பம் ஆப்ஷனாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோமெட்டிக் மற்றும் மேனுவல் கியர் ஆப்ஷன்களும் உள்ளன. இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை பெட்ரோல் வேரியன்டில் 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜினும், டீசல் வேரியன்டில் 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த இன்ஜின் 2755 சிசி திறன் கொண்டது.

டீசல் இன்ஜினை பொறுத்தவரை 3000 ஆர்பிஎம்மில் 201 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும், மேலும் 1600 ஆர்பிஎம்மில் 500என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். பெட்ரோல் இன்ஜினை பொறுத்தவரை 5200 ஆர்பிஎம்மில் 164 பிஎச்பி பவரையும், 4000 ஆர்பிஎம்மில் 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

அதுமட்டுமல்ல இந்த கார் பாதுகாப்பு அம்சத்தில் 5ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. அதனால்தான் இந்த காரை அரசியல்வாதிகள் பலர் விரும்பி வாங்குகின்றனர். இந்த காரின் மைலேஜ் என்பது மிகவும் குறைவு தான் லிட்டருக்கு 10.3 கி.மீ மைலேஜ் தான் தரும். இருந்தாலும் இதன் டேங்க் கொள்ளளவு அதிகம் முழு டேங்க் டீசல் நிரம்பினால் 824 கி.மீ வரை பயணிக்கலாம். தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இசூஸூ காருக்கு விடை கொடுத்துவிட்டு புதிய ஃபார்ச்சூனர் காரை வாங்கியிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications








