தீராத துயரம்... கார் விபத்தில் பிரபல சீரியல் நடிகை உயிரிழப்பு!! கண்ணீரில் ரசிகர்கள்...
இமாச்சல பிரதேசத்தில் கார் பள்ளதாக்கில் கவிழ்ந்ததில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் உயிரிழந்துள்ளார். யார் அவர்? எவ்வாறு இந்த விபத்து நடந்து முடிந்தது? என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
சினிமா துறையில் சமீப காலத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலரது மறைவுகள் நம்மை வேதனைக்குள்ளாக்கி உள்ளன. மயில்சாமி, மனோபாலாவை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் சரத் பாபு இயற்கை எய்தினார் என்ற துக்க செய்தி நம்மை கவலையுற செய்தது. சரி தமிழ் சினிமா உலகில் தான் இவ்வாறு என்று பார்த்தால், பாலிவுட் சினிமா உலகிலும் அவ்வாறு தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக, இந்தி சின்னதிரை துறையில் சமீப காலத்தில் இளம் நடிகர், நடிகையர்கள் கூட பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர். கடந்த மே 23ஆம் தேதி இளம் சீரியல் நடிகர் ஆதித்யா சிங் ராஜ்புட் மும்பையில் தனது வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு பிரபல இந்தி சீரியல் நடிகை வைபவி உபத்யாயா கார் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அவரது ரசிகர்களை தீராத துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
சாராபாய் vs சாராபாய் என்ற தொலைக்காட்சி தொடரில் ஜாஸ்மின் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமாகிய நடிகை வைபவி உபத்யாயாவுக்கு வயது 32 மட்டுமே. சமீபத்தில் இமாச்சல பிரதேசத்தில் பஞ்சார் என்ற பகுதிக்கு தனது காதலர் ஜெய் சுரேஷ் உடன் இவர் சிறிய சுற்றுலா சென்றுள்ளார். பஞ்சார் பகுதிக்கு அருகே இருந்த திர்தான் பள்ளதாக்கிற்கு செல்ல இந்த காதல் ஜோடி விரும்பியுள்ளது.
அதற்காக சித்வா என்ற பகுதியில் ஜெய் சுரேஷின் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் சென்று கொண்டிருந்த வேளையில், எதிர்பாராத விதமாக கார் கண்ட்ரோலை இழந்து அருகில் இருந்த 50 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது. இந்த நிகழ்வை கண்ட உள்ளூர்வாசிகள் உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்க, போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். போலீஸார் வந்து பார்த்ததில் வைபவி உபத்யாயா ஏற்கனவே இறந்துவிட்டார்.
உயிருக்கு போராடி கொண்டிருந்த ஜெய் சுரேஷை மீட்டு போலீஸார் பஞ்சார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவங்கள் யாவும் கடந்த மே 22ஆம் தேதி நடந்துள்ளன. ஆனால், உடற்கூராய்வு முடித்து உடல் சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோர்களிடம் வழங்குவதற்கு நேரமாகியதால், வைபவி உடலுக்கு இறுதி அஞ்சலி மும்பையில் உள்ள அவரது வீட்டில் மே 24இல் நடைபெற்றது.
குஜராத்தில் பிறந்தவரான வைபவி உபத்யாய் குறிப்பாக குஜராத்தி சினிமா வட்டாரத்தில் பிரபலமானவராக விளங்குகிறார். சீரியல்களில் மட்டுமின்றி, வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ள இவர் முன்னணி நடிகை தீபிகா படுகோனேவின் சப்பாக் படத்திலும் நடித்துள்ளார். வைபவியின் நடிப்பில் இந்த 2023ஆம் ஆண்டில் கூட ஒரு திரைப்படம் திரைக்கு வந்தது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: கார் விபத்திற்கான காரணம் என்னவென்று உறுதியாக தெரியவில்லை. அதாவது, அதிவேகத்தின்போது கார் கண்ட்ரோலை இழந்ததா அல்லது சரிவான/ சறுக்கலான பாதையில் கண்ட்ரோலை இழந்ததா என்பது உறுதியாக தெரியவில்லை. பொதுவாகவே, டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்கள் ஆஃப்-ரோடு பயணங்களுக்கும் ஏற்றவைகளாக விளங்குகின்றன. ஆகையால் இந்த சம்பவத்தில் அதிவேகம் தான் காரணமாக இருக்கும் என நினைக்கிறோம்.


Click it and Unblock the Notifications








