அரசு பஸ்களின் நிறம் மாற்றம்! திடீர் முடிவை எடுத்த தமிழக அரசு! காரணம் என்ன?
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தனது பேருந்துகளை புனரமைக்கவும், புதிய வண்ணங்களை தீட்டவும் முடிவு செய்துள்ளது. இது மட்டுமல்லாமல் புதிதாக பஸ்களை வாங்கவும் முடிவு செய்துள்ளது. தனியாருக்கு நிகராக அரசு பேருந்துகளை கொண்டு வரும் முயற்சி இது. இதுகுறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழக அரசு நடத்தி வரும் விரைவு போக்குவரத்து கழகம், தமிழக மற்றும் தமிழகத்தை சுற்றியுள்ள மாநிலங்களுக்கான நீண்ட தூர பேருந்து போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகிறது. இப்படியாக நீண்ட தூர பேருந்து போக்குவரத்தை தனியார் நிறுவனங்களும் நடத்தி வருகின்றன. தனியார் நிறுவனங்கள் அதிகமான எண்ணிக்கையில் நடத்தி வருகின்றன.

நீண்ட தூர பேருந்து போக்குவரத்தில் அரசு பேருந்துகளை விட மக்கள் தனியார் பேருந்துகளை அதிகம் விரும்புகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. முதல் காரணம் போதுமான அளவு பேருந்து வசதி இல்லாதது, இருக்கும் பேருந்துகளிலும் போதுமான அளவு சுத்தம் உள்ளிட்ட விஷயங்கள் இல்லாதது, பேருந்துகளின் பராமரிப்பு ஆகியவற்றை சொல்லலாம்
தமிழகத்தை பொறுத்தவரை தனியார் நிறுவனங்கள் தான் இந்த நீண்ட தூர பேருந்து பயணத்தில் சிறப்பான சேவைகளை வழங்கி வருவதாக மக்கள் கருதுகின்றனர். அரசு பேருந்துகளில் போதுமான அளவு வசதிகளும் சுத்தமும் இல்லை என்றும் பேருந்துகள் மிக மெதுவாக செல்கின்றன என்றும் பொதுமக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் உள்ள பேருந்துகளை புனரமைத்து, தனியார் பேருந்துகளுக்கு இணையான அளவில் சேவைகளை வழங்கவும், புதிய பேருந்துகளை வாங்கி செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் முடிவு செய்துள்ளது. இதற்கான தொடர் நடவடிக்கையிலும் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் இறங்கியுள்ளது.
இது போக தனியாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் தனது பேருந்துகளை புனரமைக்க டெண்டர் விடுக்கப்பட்டது. இந்த டெண்டரின் படி பேருந்துகள் புதுப்பிக்கப்படும் போது அதற்கு புதிதாக மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சில்வர் மற்றும் நீல நிறத்தில் இருக்கும் பேருந்துகள் எல்லாம் தற்போது வெளீர் மஞ்சள்- மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
பேருந்துகளின் புகைப்படங்களை டிஎன்எஸ்டிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அரசு வரைவு போக்குவரத்து கழகத்தின் பழைய பேருந்துகளும் புணரமைப்பு செய்யப்பட்டுள்ளன. இதன் விவரங்கள்:
1. பேருந்துகளில் தலையணையுடனான படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.
2. பேருந்துகளில் ஏற்கனவே இருந்த யூஎஸ்பி சார்ஜருக்கு பதிலாக சார்ஜிங் பயன்கள் அமைக்கப்பட்டுள்ளது.
3. எளிதில் அழுக்கடையும் துணிகளுக்கு பதிலாக ரெக்ஸீர்களை கொண்டு சீட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
4. இருக்கைகள் ஜன்னல்கள் மற்றும் ரீடிங் லைட்டுகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இது போக பேருந்துகளின் பராமரிப்பிலும் சில மாற்றங்களை கொண்டு வர தமிழக போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இதன்படி பேருந்தை ஒவ்வொரு ட்ரிப்பிலும் சுத்தம் செய்தல் மற்றும் ஜன்னல் திரைகளை சுத்தம் செய்தல் ஆகியவை கட்டாயமாக செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போக பேருந்துகளின் வேகத்தை அதிகரிக்கவும் மாநிலம் முழுவதும் கால அட்டவணைகளை முறையாக பின்பற்றவும், ஏசி பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மக்களை கவரவும் திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகளை நோக்கி செல்லும் மக்களின் கவனத்தை ஈர்க்க முடிவு
மேலும் தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் 200 புதிய பேருந்துகளை வாங்க ஆர்டர்களையும் வெளியிட தயாராகி வருகிறது. இது போக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 450 டவுண் பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த பஸ்களும் புதிய வண்ணத்தில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
தமிழகத்தை பொறுத்தவரை அரசு பேருந்துகளின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. தனியார் பேருந்து ஓனர்களே மிகப்பெரிய அளவில் லாபம் ஈட்டி வருகின்றனர். ஆனால் அண்டை மாநிலங்களில் அரசு பேருந்துகள் தனியாருக்கு போட்டியாக தரமான பேருந்துகளை இயக்கி வருகிறது. அதிக அளவில் லாபத்தையும் ஈட்டி வருகிறது.
குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் உள்ள ஐராவத் எனப்படும் பேருந்துகள் எல்லாம் தனியார் பேருந்துகளை விட சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் இதுபோல அதிரடி மாற்றங்களை செய்து கர்நாடக மாநிலத்தை விட சிறப்பான பேருந்துகளை தமிழகத்தில் இயக்க ஏற்பாடு செய்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழகத்தில் மக்கள் அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகளை விரும்புவதற்கான காரணம் அதன் சுத்தம் மற்றும் பயண நேரம் ஆகியவைதான். அரசு பேருந்துகள் தமிழகத்தில் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன. ஆனால் தனியார் பேருந்துகள் சிட்டுக்குருவியாக பறக்கிறது. பாதுகாப்பான அதே நேரத்தில் முடிந்த அளவு குறைவான பயண நேரத்தை தமிழக அரசு பேருந்துகள் இயக்கினால் மக்கள் அரசு பேருந்துகளை நோக்கி திரும்பி வருவார்கள்.


Click it and Unblock the Notifications