ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு எதிராக டேக்ஸி டிரைவர்களின் புதிய கார் புக்கிங் ஆப்!
ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு போட்டியாக டெல்லி கார் ஓட்டுநர்களே சொந்தமாக மொபைல் ஆப் ஒன்றை வெளியிட உள்ளனர். அது குறித்த தகவல்களை காணலாம்.
முன்பெல்லாம் வாடகைக்கு கார் தேவை என்றால் கார் ஸ்டாண்டுக்கு சென்று காரை வாடகைக்கு எடுத்துச் செல்லும் நிலைமையே இருந்தது, பின்னர் போன் செய்தால் வீட்டுக்கு வந்து பிக்-அப் செய்துகொள்ளும் அளவிற்கு நிலைமைக்கு மாறியது. ஆனால் இன்றைய நவீன தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக பன்னாட்டு நிறுவனங்களான ஓலா, ஊபர் போன்ற மொபைல் ஆப் மூலமாக ஒரு சில நொடிகளில் கூட நாம் இருக்கும் இடத்திற்கே கார்களை வரவழைக்கலாம்.

சொந்தமாக அல்லது வாடகை கார் வைத்திருப்பவர்கள் பலரும் இந்த நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகின்றனர். சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி என நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் இந்த நிறுவனங்கள் தான் ராஜ்ஜியம் நடத்தி வருகின்றன.

சமீபகாலமாக இந்த பன்னாட்டு நிறுவனங்கள் ஓட்டுநர்களுக்கு முறையான ஊதியம் அளிக்கவில்லை என்றும், ரைடுகளுக்காக அதிக பங்கை பெருகின்றனர் என்றும் மேலும் பல குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இந்நிறுவனங்களுக்கு எதிராக டேக்ஸி டிரைவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த பிரச்சனைகளுக்கு தாங்களே தீர்வு தேடிக்கொள்ளும் வகையில் தற்போது டெல்லி கார் ஒட்டுநர்கள் இணைந்து புதிய மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளனர். வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி முதல் இது செயல்பாட்டிற்கு வரவுள்ளது.

‘சேவா ஆப்' என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆப் மூலம் மாதம் 700 ரூபாய் என்ற கட்டணத்தில் டிரைவர்கள் இந்த ஆப் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். முன்னதாக ஓலா, ஊபர் நிறுவனங்கள் ஒரு டிரிப்பில் 27 % கமிஷனான பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய சேவா ஆப் செயல்படும் முறை பற்றி ஊடகத்தினருக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்பினை பதிவிறக்கம் செய்யும் வாடிக்கையாளர்கள் கார் புக் செய்யும் போது அருகில் உள்ள கார் ஓட்டுநருக்கு தகவல் அளிக்கப்படும், டிரைவரையும் இந்த ஆப் முலமாகவே தொடர்பு கொள்ளலாம்.

வாடிக்கையாளரின் முகவரிக்கு வரும் கார் டிரைவரின் மொபைல் ஆப்பில் வாடிக்கையாளரின் கைப்பேசி எண் பதிவு செய்யப்படும், பின்னர் மீட்டர் இயங்கத்தொடங்கும்.

துவக்க நிலையில் ரைடுகளுக்கான கட்டணம் ரொக்கமாகவே பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிது நாட்களில் டிஜிட்டல் வாலட்டுகள் இதில் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த மொபைல் ஆப்பில், குறிப்பிட்ட அளவிலான ஓட்டுநர்கள் இணைந்துள்ளனர். இதுவரையிலும் ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்களே இத்தொழிலில் 80% அதிகமான பங்களிப்பை அளித்துவரும் சூழலில் இந்த புதிய ஆப் அவர்களுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது.

இதன் வெற்றியை பொறுத்து மற்ற நகரங்களிலும் இதே போன்ற சுய மொபைல் ஆப்-பை ஓட்டுநர்கள் உருவாக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த புதிய ஆப் துவங்கப்பட்டுள்ளது ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறப்படுகிறது. மக்களின் ஆதரவு அதிகரிக்கும்பட்சத்தில் நிச்சயம் இந்த ஆப் வெற்றியடையும் என்றும் கூறப்படுகிறது.
வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

இந்திய கார் சந்தையில் புதிதாக களமிறங்கும் பிரெஞ்சு நிறுவனம்!

'மேக் இன் இந்தியா' திட்டத்தில் தயாரான முதல் மின்சார ரயில்!

கப்பல்களுக்கான உலகின் முதல் சுரங்க வழிப்பாதை...!!
டொயோட்டாவின் புதிய எட்டியோஸ் பிளாட்டினம் காரின் படங்களை காணலாம்...


Click it and Unblock the Notifications








