வெளியானது அதிரடி அறிவிப்பு... இனிமேல் கொஞ்சம் கூட பயமே இல்லாமல் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாம்!
இனிமேல் எலெக்ட்ரிக் வாகனங்களை பயமே இல்லாமல் வாங்கலாம். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் 2030ம் ஆண்டிற்குள் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஷெல் (Shell) நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷனை ஷெல் நிறுவனம் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் திறந்துள்ளது.

அப்போதுதான் இந்த அதிரடி திட்டம் குறித்த தகவல்களை ஷெல் நிறுவனம் வெளியிட்டது. உலகம் முழுவதும் 5 லட்சம் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவுவதற்கு ஷெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகதான் இந்தியாவில் வரும் 2030ம் ஆண்டிற்குள் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன்களை நிரப்புவதற்கு ஷெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஷெல் நிறுவனம் 100kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர்களை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளது. நான்கு சக்கர எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமல்லாது, இரு சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் இந்த சார்ஜிங் பாயிண்ட்கள் பொருந்த கூடிய வகையில் இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். சரி, இந்த சார்ஜிங் ஸ்டேஷன்கள் எங்கு நிறுவப்படும்? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.

இந்தியாவில் உள்ள ஷெல் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்குகள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிகமாக புழங்க கூடிய இடங்கள் ஆகிய பகுதிகளில் இந்த சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவுவதற்கு ஷெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுதவிர இந்தியாவில் மேலும் பல்வேறு இடங்களை கண்டறியவும் ஷெல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஷெல் ரீசார்ஜ் செயலியை பயன்படுத்தி, எலெக்ட்ரிக் வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். ஷெல் நிறுவனம் தனது திட்டத்தின் முதல் பகுதியாக, பெங்களூர் நகரில் உள்ள தனது பெட்ரோல் பங்க்குகளில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை கட்டமைப்பதற்கு முடிவு செய்துள்ளது.

இதன்படி பழைய மெட்ராஸ் ரோடு, கனகபுரா மற்றும் யஷ்வந்த்ப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஷெல் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்குகளில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படவுள்ளன. இந்தியாவில் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன்கள் என்பது ஷெல் நிறுவனத்தின் முதற்கட்ட திட்டம் மட்டுமே.

இந்த இலக்கை ஷெல் நிறுவனம் மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. சுற்றுச்சூழலுக்கு நட்பான எலெக்ட்ரிக் வாகன தொழிலை விரிவுபடுத்துவதற்கு திட்டமிட்டுள்ள அதே நேரத்தில், இந்தியாவில் தனது ஆயில் தொழிலை மென்மேலும் விரிவுபடுத்துவதற்கும் ஷெல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் தற்போதைய நிலையில் ஷெல் நிறுவனத்திற்கு 334 பெட்ரோல் பங்க்குகள் மட்டுமே உள்ளன. இதனை 1,200 ஆக உயர்த்துவதற்கு ஷெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலையில் இந்தியாவில் ஷெல் பெட்ரோல் பங்க்குகளை காண்பது என்பது உண்மையிலேயே அரிதான ஒரு விஷயம். ஆனால் வரும் காலங்களில் நம்மால் இன்னும் நிறைய இடங்களில் ஷெல் பெட்ரோல் பங்க்குகளை காண முடியும் என்பது இதன் மூலம் புலனாகிறது.

அதே நேரத்தில் எதிர்காலத்திற்கு ஏற்ற வகையிலும் ஷெல் நிறுவனம் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாகதான் இந்தியாவின் பல்வேறு இடங்களில் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பதற்கு ஷெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன.

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையை பொறுத்தவரையில் தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் 'டான்' ஆக உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான் எலெக்ட்ரிக் மற்றும் டிகோர் எலெக்ட்ரிக் கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. இதுதவிர இன்னும் பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் கூடிய விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. இதனை தொடர்ந்து அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார், பன்ச் எலெக்ட்ரிக் கார், ஹாரியர் எலெக்ட்ரிக் கார் ஆகிய மாடல்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் கார்கள் எல்லாம் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

இதற்கிடையே இந்தியாவில் தற்போது பலரும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு தயங்கி கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், அது சார்ஜிங் ஸ்டேஷன் பற்றாக்குறைதான். ஆனால் ஷெல் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பின் மூலம் இந்தியாவில் பலரும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு தைரியமாக முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








