கடல் கடவுளுக்கு கோபம் வரும்... இந்த வினோத சடங்கை செய்யாமல் கப்பலின் பெயரை மாத்த மாட்டாங்க... என்னனு தெரியுமா?
கப்பலின் பெயரை மாற்றுவதில் இன்றளவும் இருந்து வரும் ஒரு வினோத மூட நம்பிக்கை குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மீன் பிடிக்கவும், சரக்கு போக்குவரத்திற்காகவும், ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் கடல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்று கடல் பயணம் அதிநவீனமாகவும், பாதுகாப்பானதாகவும் மாறி விட்டது. ஆனால் பண்டைய காலத்தில் தொழில்நுட்பங்கள் எதுவும் இல்லை. எனவே கடல் பயணங்களை மேற்கொள்ளக்கூடிய மாலுமிகள் பத்திரமாக வீடு திரும்புவதற்காக சில மூட நம்பிக்கைகளை வைத்திருந்தனர்.

அந்த காலத்தில் கடல் பயணங்கள் நிச்சயமற்றதாக இருந்தது. எனவே மாலுமிகளுக்கு இந்த மூட நம்பிக்கைகள் ஒருவிதமான தைரியத்தை கொடுத்தன. ஆனால் நாங்கள் ஏற்கனவே கூறியபடி இன்றைய அதிநவீன காலகட்டத்தில் கடல் பயணங்கள் மிகவும் பாதுகாப்பானதாக மாறி விட்டது. எனினும் கடல் பயணங்களை மேற்கொள்ள கூடியவர்கள் இன்னமும் பல்வேறு மூட நம்பிக்கைகளை பின்பற்றுகின்றனர்.

அதில் ஒரு மூட நம்பிக்கை குறித்துதான் இந்த செய்தியில் நாம் பார்க்க போகிறோம். கப்பலுக்கு ஒரு முறை பெயர் வைத்து விட்டால், எக்காரணத்தை கொண்டும் அந்த பெயரை மாற்றக்கூடாது என்ற மூட நம்பிக்கை அந்த கால கட்டத்தில் இருந்து வந்தது. தற்போதும் கூட ஒரு சிலர் அந்த மூட நம்பிக்கையை பின்பற்றுகின்றனர்.

ஒரு கப்பலுக்கு ஒரு முறை பெயர் வைத்து விட்டு, அதனை மாற்றினால் அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் என சிலர் நம்புகின்றனர். கப்பலின் பெயரை மாற்றுவது என்பது, கடல் கடவுளை ஏமாற்றும் செயல் என இதற்கு அவர்கள் விளக்கம் கொடுக்கின்றனர். புராண கதைகளின்படி, ஒவ்வொரு கப்பலுக்கும் முதல் முறை பெயர் சூட்டும்போது, அந்த பெயரை கடல் கடவுள் பதிவு செய்து கொள்வார் என்பது நம்பிக்கை.

அந்த பெயரை மாற்றினால், அவரது கோபத்திற்கு ஆளாக நேரிடும் என நம்பப்படுகிறது. எனினும் ஒரு கப்பலின் பெயரை நிச்சயமாக மாற்றியே ஆக வேண்டும் என்றால், அதற்கு சில சடங்குகளை செய்கின்றனர். இந்த வினோத சடங்கின்படி, கப்பலின் உண்மையான பெயரை ஒரு காகிதத்தில் எழுதி, அதனை ஒரு பெட்டியில் வைத்து கொள்கின்றனர்.

இதன்பின்னர் அந்த பெட்டி எரிக்கப்பட வேண்டும். அதற்கு பிறகு அலை வந்து விட்டு செல்லும்போது, கடலில் அந்த சாம்பலை கரைக்கின்றனர். ஒருவேளை இந்த சடங்கை கடற்கரையில் செய்ய முடியாவிட்டால், ஆறு அல்லது ஏரியில் சாம்பலை கரைக்கலாம். ஆனால் அப்போது முழு நிலவு தென்பட வேண்டும் என நம்பப்படுகிறது.

இந்த சடங்கை செய்து முடித்தவுடன், கப்பலுக்கு புதிய பெயரை சூட்டி கொள்ளலாம் என்பது நம்பிக்கை. இது மூட நம்பிக்கையாக இருந்தாலும், கப்பலின் பெயரை மாற்ற தயங்குவதற்கு சில நடைமுறை காரணங்களை தெரிவிக்கின்றனர். அந்த கால கட்டங்களில் வர்த்தக கப்பல்களுக்கு, அவற்றின் பெயரின் அடிப்படையில் துறைமுகங்களில் நற்பெயர் கிடைத்து வந்தது.

எனவே அவற்றின் பெயரை மாற்றினால், பயணம் மற்றும் வர்த்தகத்தின்போது, கப்பலின் கேப்டன் மற்றும் பணியாளர்களுக்கு பிரச்னைகள் ஏற்படலாம் எனக்கருதி பெயர் மாற்றத்தை பலர் தவிர்த்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. கப்பல் போக்குவரத்து துறையில் இன்றளவும் இதுபோல் இன்னும் பல்வேறு மூட நம்பிக்கைகள் பின்பற்றப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








