நேரில் பார்த்த ஜாலியில் பங்க் ஊழியர் செய்த எக்குதப்பான காரியம்! பென்ஸ் காரை இழந்து அப்செட் ஆன நடிகர்
பிரபல நடிகரை நேரில் பார்த்த சந்தோஷத்தில், எரிபொருள் நிலைய ஊழியர் செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரைப்பட நடிகர்கள் என்றாலே அனைவருக்கும் ஒரு வித ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. திரையில் பார்த்த நடிகர்களை நேரில் பார்த்து விட்டால், அவர்களது ரசிகர்களை கையில் பிடிக்கவே முடியாது. தங்களுக்கு பிடித்த நடிகருடன் செல்பி எடுக்கவும், அவர்களிடம் ஆட்டோகிராஃப் வாங்கவும் ரசிகர்கள் முயற்சி செய்கின்றனர்.

ஆனால் கர்நாடகாவில் எரிபொருள் நிலைய ஊழியர் ஒருவர், பிரபல நடிகர் ஒருவரை பார்த்த உற்சாகத்தில் செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் ராகவேந்திரா. கர்நாடக மாநிலம் ஷிவமோகா நகரின் சாகர் சாலையில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்திற்கு தனது பென்ஸ் காரில் விஜய் ராகவேந்திரா சமீபத்தில் சென்றார்.

விஜய் ராகவேந்திரா பயணம் செய்த பென்ஸ் கார், பெட்ரோலில் இயங்க கூடியது ஆகும். ஆனால் எரிபொருள் நிலைய ஊழியர் தவறுதலாக டீசலை நிரப்பி விட்டார். இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி மாலை (திங்கள் கிழமை) நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக நடிகர் விஜய் ராகவேந்திரா அதிர்ச்சியடைந்து விட்டார்.

கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம் சாகர் தாலுகாவில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஜோக் நீர் வீழ்ச்சியில் இருந்து நடிகர் விஜய் ராகவேந்திரா திரும்பி கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வழியில் பெட்ரோல் நிரப்புவதற்காக ஷிவமோகா பகுதியில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்தில் காரை நிறுத்தியபோதுதான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

காரில் நடிகர் விஜய் ராகவேந்திராவை பார்த்த உடனே எரிபொருள் நிலைய ஊழியர் அளவு கடந்த உற்சாகம் அடைந்ததாகவும், அதன் காரணமாகவே தவறுதலாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும் தெரிகிறது. பெட்ரோல் நிரப்புவதற்கு பதிலாக, 37 லிட்டர் டீசலை அவர் காரில் நிரப்பியுள்ளார். ஆனால் தவறான எரிபொருள் நிரப்பப்பட்டதை எரிபொருள் நிலையத்திலேயே நடிகர் விஜய் ராகவேந்திரா பார்த்து விட்டார்.

எனவே காரை விட்டு கீழே இறங்கி வந்த நடிகர் விஜய் ராகவேந்திரா, இது பெட்ரோல் கார் எனவும், டீசல் கார் கிடையாது எனவும், எரிபொருள் நிலைய ஊழியரிடம் கூறியுள்ளார். இதன்பின் எரிபொருள் நிலையத்தின் உரிமையாளர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, பிரச்னையை தீர்ப்பதற்காக நடிகர் விஜய் ராகவேந்திராவிடம் பேசியுள்ளார்.

அத்துடன் தவறான எரிபொருள் நிரப்பப்பட்ட காரை டோ (Tow) செய்து பெங்களூரில் உள்ள ஷோரூமிற்கு உடனடியாக கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளையும் அவர் எடுத்தார். அதே சமயம் நடிகர் விஜய் ராகவேந்திரா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றொரு காரில் பெங்களூர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் நடிகர் விஜய் ராகவேந்திரா வருத்தம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு இடையே நடிகர் விஜய் ராகவேந்திராவின் காரை பெங்களூரில் உள்ள ஷோரூமில் கடந்த செவ்வாய் கிழமை காலை (ஆகஸ்ட் 11ம் தேதி) விட்டதாக டோ சர்வீஸ் ஊழியர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஷிவமோகாவில் இருந்து திங்கள் கிழமை இரவு 10 மணிக்கு புறப்பட்டோம்.

மறுநாளான செவ்வாய் கிழமை காலை 6 மணியளவில் பெங்களூர் சென்று விட்டோம்'' என்றார். நடிகர் விஜய் ராகவேந்திராவின் ஓட்டுனரும், டோ சர்வீஸ் ஊழியருடன் ஷிவமோகாவில் இருந்து பெங்களூர் சென்றுள்ளார். பெட்ரோல் காரில் டீசலும், டீசல் காரில் பெட்ரோலும் நிரப்பும் சம்பவங்கள் அவ்வப்போது தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் உள்ளன.

இப்படி தவறான எரிபொருளை நிரப்புவது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். தவறான எரிபொருள் நிரப்பப்பட்டதை உடனடியாக கண்டுபிடித்து விட்டால், ஓரளவிற்கு பிரச்னைகளை குறைத்து கொள்ள முடியும். உடனடியாக சர்வீஸ் மையத்தை அழைத்து, காரை சரி செய்து விடலாம். ஆனால் தவறான எரிபொருள் நிரப்பப்பட்டது தெரியாமல், காரை ஓட்டி விட்டால் அதிக செலவு ஆகலாம்.

எனவே காருக்கு எரிபொருள் நிரப்பும்போது உரிமையாளர்களும் மற்றும் ஓட்டுனர்களும் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. இல்லாவிட்டால் உங்கள் பணம் தேவையில்லாமல் செலவு ஆவதுடன், மன உளைச்சலும் ஏற்படும். கன்னட நடிகர் விஜய் ராகவேந்திராவின் காரில் தவறான எரிபொருள் நிரப்பப்பட்ட சம்பவம் தொடர்பாக டெக்கான் ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








