8 ஆயிரம் உயிர்களை காவு கொடுத்து விட்டு சேலம்-சென்னை 8 வழி சாலையா? அதிர்ச்சியளிக்கும் புள்ளி விபரம்
சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்தியாவில் உள்ள பிற மோசமான சாலைகளினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன.
சேலம்-சென்னை இடையே பொது மக்களின் எதிர்ப்பையும் மீறி 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்தியாவில் உள்ள பிற மோசமான சாலைகளினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த மிகவும் அதிர்ச்சிகரமான புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவை விட பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய உலகின் ஒரு சில நாடுகளில் கூட தரமான சாலைகள் அமைக்கப்படுகின்றன. ஆனால் இந்திய மக்களுக்கு மட்டும் ஏனோ தரமான சாலைகளில் பயணிக்கும் அதிர்ஷ்டம் இன்று வரை வாய்க்கவில்லை.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான சாலைகள் மோசமான நிலையில்தான் காணப்படுகின்றன. இந்திய சாலைகளில் பயணிப்பதும், குதிரை சவாரி மேற்கொள்வதும் ஒன்றுதான். இங்குள்ள குண்டும், குழியுமான சாலைகளில், எந்த ஒரு வாகனமாக இருந்தாலும் குலுங்கி குலுங்கிதான் செல்ல வேண்டியுள்ளது.

குண்டும், குழியுமான நிலையில் உள்ள மோசமான சாலைகள்தான், விபத்துக்களுக்கு மிக முக்கிய காரணங்களாக விளங்குகின்றன. சாலைகளை தரமாக அமைக்க வேண்டிய அரசு, கையை கட்டி கொண்டு வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டிருக்கிறது.

இந்தியாவில் உள்ள குண்டும், குழியுமான சாலைகள், கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் 3,597 உயிர்களை காவு வாங்கியுள்ளது. குண்டும், குழியுமான சாலைகளின் காரணமாக ஏற்பட்ட விபத்துக்களில் அதிக அளவிலான மக்கள் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் உலகிலேயே இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் குண்டும், குழியுமான சாலைகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2017ம் ஆண்டில் 50 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது கவலை கொள்ள வேண்டிய விஷயம்.

தற்போது நடைபெற்று வரும் 2018ம் ஆண்டில் உயிர் பலி இன்னும் அதிகரிக்குமோ? என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்தியாவில் பருவ மழைக்காலங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக மாறி விடுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால் அவ்வாறு உடனடியாக குண்டும், குழியுமாக மாறாத வகையிலும், மிக நீண்ட நாட்கள் தாக்கு பிடிக்கும் வகையிலுமான சாலைகளை அமைக்க அரசு தவறிவிடுகிறது. ஒரு வேளை பருவ மழை காலங்களில் சாலைகள் மோசமாக மாறினாலும், அதை சரி செய்ய அதிகாரிகள் மறந்து விடுகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் இரு சக்கர வாகன ஓட்டிகள்தான் தாங்களாகவே சுதாரித்து கொள்ள வேண்டும். ஆனால் அவர்களும் சில சமயங்களில் ஹெல்மெட் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொள்ள தவறி விடுகின்றனர். இது நிலைமையை இன்னும் மோசமாக்கி விடுகிறது.

குண்டும், குழியுமான சாலைகள் காரணமாக ஒரே ஆண்டில் 3,597 உயிர்களை இந்தியா பலி கொடுத்ததற்கு அதிகாரிகளின் அலட்சியம், சாலை அமைப்பதற்கான டெண்டர் விடுவதில் ஊழல் என பல்வேறு காரணங்களை வரிசையாக அடுக்கி கொண்டே செல்லலாம்.

சாலைகளில் உள்ள குழிகளின் காரணமாக, இந்தியாவிலேயே அதிக உயிர்களை இழந்த மாநிலம் உத்தரபிரதேசம். இங்கு 2017ம் ஆண்டில் 987 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பட்டியலில் 2வது இடத்தில் உள்ள மாநிலம் ஹரியானா. இங்கு 522 பேர் பலியாகியுள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க இந்தியாவில் தொடங்கப்படும் சாலை பணிகளும் விரைவாக முடிக்கப்படுவது இல்லை. ஏதேனும் ஒரு காரணத்தை கூறி, சில சாலை பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விடுகின்றன. இதன் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

கட்டுமானத்தின் கீழ் உள்ள சாலைகளில் ஏற்பட்ட விபத்துக்களின் காரணமாக இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டில் 3,878 பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த 2017ம் ஆண்டில் 4,250ஆக அதிகரித்துள்ளது மக்களை கவலையடைய செய்துள்ளது.

இப்படி குண்டும், குழியுமான சாலைகளும், கட்டுமானத்தின் கீழ் உள்ள சாலைகளில் ஏற்பட்ட விபத்துக்களும் ஒட்டுமொத்தமாக 7,847 உயிர்களை ஒரே ஆண்டில் காவு வாங்கியுள்ளன. எனவே மோசமான சாலைகளை முதலில் சீரமைக்க வேண்டும் என்பதே பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில்தான், சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில், பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, 8 வழி பசுமை சாலை அமைக்க நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான மாநில அரசும் தீவிரம் காட்டி வருகின்றன என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.


Click it and Unblock the Notifications








