7 இளைஞர்களின் உயிர் கொத்தாய் பறிபோன பரிதாபம்... உயிர்களை குடித்த ஓவர்ஸ்பீடு!!
அதிவேகத்தில் வாகனத்தை இயக்குவதால், கொத்து கொத்தாய் இளைஞர்கள் உயிர் பறிபோகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
அதிவேகத்தில் காரை ஓட்டிச் செல்லும் இளைஞர்களால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து வருகிறது. சமீபத்தில் லூதியானா அருகே கல்லூரி மாணவர்கள் சென்ற ஹோண்டா சிட்டி கார் விபத்தில் சிக்கி 4 பேர் பலியானது குறித்து எழுதி இருந்தோம். குடிபோதையில் அந்த காரை ஓட்டிச் சென்றதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

இதேபோன்று, 14 வயதுடைய மாணவர் தனது நண்பர்களுடன் ஸ்கார்ப்பியோ காரில் சென்று விபத்தில் சிக்கிய சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அதிவேகமே இந்த ஸ்கார்ப்பியோ கார் விபத்துக்கும் காரணமாக கூறப்பட்டது.

இந்த நிலையில், அதிவேகத்தில் சென்ற கார் ஒன்று சாலை ஓர மரத்தில் மோதியதில் 7 இளைஞர்கள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். மும்பையிலிருந்து கோவாவுக்கு சுற்றுலாபோது அவர்களது மஹிந்திரா ஸைலோ கார் ரத்னகிரி என்ற இடத்திற்கு அருகே விபத்தில் சிக்கியது.

காரை ஓட்டிய இளைஞர் அதிவேகத்தில் செலுத்தியதாலேயே கட்டுப்பாட்டை இழுந்து விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்த அந்த கார் அங்கிருந்த மரத்தில் மோதி பயங்கர விபத்தில் சிக்கியுள்ளது.

இந்த விபத்தில் மும்பை அந்தேரி பகுதியிலுள்ள சிவாஜி நகரை சேர்ந்தவர்கள். மேலும், இந்த விபத்தில் சத்தின் சவந்த், பிரசாந்த் குரவ், அக்ஷய் கெர்கர், நிஹல் கோடியன், கேதர் தோடங்கர், வைபவ் மான்வே மற்றும் மயூர் பெலகர் ஆகியோர் உயிரிழந்துவிட்டனர். அபிஷேக் காம்பிளி என்ற இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்தில் மரணமடைந்த அக்ஷய் கெர்கர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர்தான் இந்த மஹிந்திரா ஸைலோ காரை செகண்ட் ஹேண்ட் கார் மார்க்கெட்டில் வாங்கி இருக்கிறார். மேலும், இந்த பயணத்துக்கும் அவர் வர விருப்பமில்லை என்று கூறி இருக்கிறார். ஆனால், நண்பர்களின் வற்புறத்தலின்பேரில் சம்மதித்துள்ளார்.

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். அதிவேகமாக சென்றதால், அந்த குறுகலான நெடுஞ்சாலைப் பகுதியில் கட்டுப்படுத்த முடியாமல் விபத்தில் சிக்கிவிட்டாதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்திரா ஸைலோ போன்ற எம்பிவி ரக கார்கள் மற்றும் எஸ்யூவி ரக கார்கள் அதிக தரை இடைவெளி கொண்டவை. இவற்றை நெடுஞ்சாலையில் கையாளும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். வேகத்தை விட விவேகமாக இந்த கார்களை செலுத்துவது அவசியம். ஆனால், இளைஞர்கள் இதுபோன்ற கார்களில் இருக்கும் செயல்திறன் மிக்க எஞ்சினை கண்டு அதிவேகத்தில் ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கிவிடுகின்றனர்.

மேலும், மும்பை- கோவா இடையிலான தேசிய நெடுஞ்சாலையானது இந்தியாவின் கில்லர் ஹைவே, அதாவது, ஆட்கொல்லி நெடுஞ்சாலையாக வர்ணிக்கப்படுகிறது. விபத்து நடந்தப் பகுதி குறுகலாக இருந்ததும் விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த நெடுஞ்சாலையில் விபத்துப் பகுதிகளை பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களும் செயல்படுத்தப்படாமல், கிடப்பில் கிடப்பதாக அந்தப் பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனிடையே, கடந்த வாரம் வெளியான ஆய்வறிக்கையும் இளைஞர்கள் வாகனம் ஓட்டும் முறை மீதும், சாலையின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் கவலை கொள்ள செய்கிறது. அந்த புள்ளிவிபரத்தின்படி, கடந்த 2015ம் ஆண்டில் சாலை விபத்துக்களில் 15-24 வயதுடைய இளைஞர்கள் 48,420 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, சாலை விபத்தில் உயிரிழந்த மூன்று பேரில் ஒருவர் இளைஞர்.

மேலும், 42 சதவீத விபத்துக்களுக்கு அதிவேகமாக வாகனத்தை இயக்கியதே காரணமாக அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், இதுபோன்ற விபத்துக்கள் தொடர்கதையாகி உள்ள நிலையில், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை பள்ளி, கல்லூரிகள் மூலமாக ஏற்படுத்துவது அவசியமாகிறது.
Photo Credit: Prashant Waydande-HT/Mumbai Mirror And TOI
புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் படங்கள்!
விரைவில் இந்தியா வரும் புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.


Click it and Unblock the Notifications








