பைக் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவரை காப்பாற்றாமல் வீடீயோ எடுத்த ‘மனிதநேயமற்ற’ அரக்கர்கள்..!
வாகன விபத்தினால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவரை மீட்காமல் அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாகன விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்த பைக் ஓட்டி ஒருவரை அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயற்சி செய்யாமல் மொபைலில் வீடீயோ எடுத்த சம்பவம் மனிதநேயத்தை கேள்விக்குரியாக்கியுள்ளது.

உதவி கிடைக்காமல் பைக் ஓட்டி வந்த வாலிபர் தீயில் கருகி இறந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் எதிரெதிரே வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் அதிவேகத்தில் வந்து ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தினால் இரண்டு வாகனங்களில் ஒன்றில் தீப்பிடித்து எரியத்துவங்கியது. விபத்துக்குள்ளான பைக்கை ஓட்டிவந்த வாலிபர் ஒருவரும் அந்த தீயில் கருகிக் கொண்டிருந்தார்.

விபத்து நடந்த உடன் அருகில் இருந்தவர்களும், அந்த வழியாக கடந்து சென்றவர்களும் நின்று கூட்டமாக வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்.

விபத்தில் காயமடைந்து தீயில் கருகிக்கொண்டிருந்த வாலிபரை காப்பாற்ற யாரும் முன்வராமல் தங்களின் மொபைல் கேமராவில் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்துகொண்டிருந்தனர்.

நெஞ்சை பதறவைக்கும் இந்த சம்பவத்தை விட விபத்தில் சிக்கி கருகிக்கொண்டிருந்த வாலிபரை காப்பாற்ற யாரும் முன்வராமல் மக்கள் கூட்டமாகக் கூடி வீடியோ எடுத்துக்கொண்டிருந்தது மனிதநேயத்தை சிதைப்பதாகவே இருந்தது.

இந்த கோர விபத்தில் தீயில் கருகி அந்த வாலிபர் பரிதாபமாக இறந்து போனார். பைக் விபத்தில் சிக்கியதில் தலையில் அடிபட்டதில் அந்த வாலிபர் மயக்க நிலையில் இருந்துள்ளார்.

தலையில் அடிபட்டு சுயநிலையை இழந்த வாலிபர் தீயில் எரிந்து கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த மற்றொரு பைக் ஓட்டி வந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனலிக்காமல் உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீயில் கருகிய வாலிபர் அடையாளம் தெரியாத அளவுக்கு கரிக்கட்டையாக காட்சியளித்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் காவல்துறையினர் விபத்தில் சிக்கிய வாகனங்களில் ஒன்றில் எரியக் கூடிய பொருள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

மாறிவரும் சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களிடையே, ஆபத்துக் காலத்தில் கூட உதவ முன்வராமல் வீடியோ, செல்ஃபி எடுத்து வரும் கலாச்சாரம் அதிகரித்து வருவது மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது.

யாரேனும் ஒருவரின் உதவி கிடைத்திருந்தால் கூட அந்த வாலிபர் நிச்சயம் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

என்றாலும் ஹெல்மெட் அணிந்து செல்வது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதும் இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

ஹெல்மெட் அணிந்திருந்தால் நிச்சயம் அந்த வாலிபருக்கு தலையில் அடிபட்டிருக்க வாய்ப்பில்லை என்பதும் இங்கு நினைவுகூறத்தக்கதாகும்..

உதவி கிடைக்காமல் எரிந்து இறந்தது அந்த வாலிபர் மட்டுமல்ல ஒட்டுமொத்த மனிதநேயமும் தான்..!
via NDTV


Click it and Unblock the Notifications








