பென்ஷனில் சாலைகளை செப்பனிடும் முன்னாள் ரயில்வே ஊழியர்!!
சாலைகளில் இருக்கும் சிறு பள்ளங்களை செப்பனிடுவதயே, ஓய்வு நேர பணியாக கருதி செய்து வரும் முன்னாள் ரயில்வே ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ஓய்வு பெற்றபின், பிரபல மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தும், அதனை விட்டுவிட்டு சாலையை செப்பனிட்டு பல உயிர்களை காக்கும் புண்ணியவானாக விளங்குகிறார் கங்காதர திலக் கத்னம்.

ரயில்வேயில் பணி
ரயில்வே துறையில் 35 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் கத்னம். ஓய்வு பெற்ற பிறகு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் டிசைன் கன்சல்ட்டன்ட்டாக பணியமர்த்தப்பட்டார்.

முதல் நாள்...
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்து முதல் வேலைக்கு தனது ஃபியட் காரில் சென்றுள்ளார். அப்போது, அவரது வீட்டிற்கு அருகே மிக மோசமாக இருந்த சாலையில் மழை நீர் தேங்கி கிடந்தது. அப்போது, அந்த வழியாக பள்ளிக்கு சென்ற சிறுமி மீது அவரது காரிலிருந்து தெளித்த மழை நீர் பட்டு, அந்த சிறுமியின் ஆடைகள் அழுக்கடைந்தது. இதனால், அந்த சிறுமியும், அவரது தாயும் மிகுந்த சிரமத்துக்குள்ளானதை பார்த்து மனம் வருந்தியுள்ளார்.

சாலையை சீரமைத்த கத்னம்
முதல்நாள் தனது காரிலிருந்து தெளித்த மழை நீரால் பள்ளிக்கு சென்ற சிறுமி சிரமத்திற்குள்ளானதை எண்ணி, மறுநாளே அந்த சாலையை தனது சொந்த செலவில் சீரமைத்தார். ரூ.4,500ஐ கொடுத்து 4 லாரிகளில் மண்ணை கொண்டு வந்து கொட்டி அந்த சாலைகளில் இருந்த பள்ளங்களை மூடினாராம்.

தொடர் விபத்துக்கள்...
இருப்பினும், அந்த சாலையில் தொடர் விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. அவர் வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது நடந்த விபத்து ஒன்றில், இளைஞர் ஒருவரின் கை விரல்கள் துண்டிக்கப்பட்டது அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது.

ராஜினாமா
ஒன்றரை ஆண்டுகள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில், அவர் சாலைகளில் இருக்கும் பள்ளங்களால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதை எண்ணி பார்த்து பணியை ராஜினாமா செய்தார். அத்துடன், இதுபோன்று சாலைகளில் இருக்கும் பள்ளங்களை மூடுவதையே தனது ஓய்வு நேர பணியாக மாற்றிக் கொண்டார்.

சொந்த காசில் பொது சேவை
தனக்கு கிடைக்கும் ஓய்வூதியத்தை கொண்டு இந்த பணிகளை செய்து வருகிறார். பிறரிடம் நன்கொடை வாங்குவதில்லையாம். அதேநேரத்தில், அந்தந்த பகுதியிலுள்ள ஆர்வமுள்ள இளைஞர்களின் உதவியுடன் தனது சேவையை இப்போது தொடர்ந்து வருகிறார். இதனால், பலரின் வாழ்க்கையும், உயிர்களும் காப்பாற்றப்படுவதாக அவர் மனநிறைவுடன் தெரிவிக்கிறார்

தவறு யாரிடம்...
விபத்துக்களுக்கு வாகன ஓட்டிகள் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. சீரான சாலைகள் இல்லாததுமே விபத்துக்களுக்கு காரணம் என்று அவர் ஆணித்தரமாக நம்புகிறார். சிரமதான் என்ற பெயரில் கடந்த சில ஆண்டுகளாக இந்த சேவையை அவர் தொடர்ந்து செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications