மாருதி 800 காலத்தில் விற்கப்பட்ட அரிதான கார்!! எத்தனை பேருக்கு ஞாபகமிருக்கு? கேரளாவில் இப்போதும் ரன்னிங்கில்!
இன்று இந்தியாவில் மாருதி சுஸுகி தான் முன்னணி கார் நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிலையை இந்த இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனம் ஒன்றும் அவ்வளவு எளிதாக அடைந்துவிடவில்லை. மாருதி சுஸுகியின் வெற்றிக்கு பல்வேறு கார் மாடல்களை காரணங்களாக சொல்லலாம். குறிப்பாக, 800 காரை பற்றி தெரியாதவர்களே இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
இந்தியாவின் முதல் காம்பெக்ட் ஹேட்ச்பேக் காராக விளங்கிய 800 கார் தான் பின்னர் காலத்தில் ஆல்டோவாக மாறியது. '800' என்பது இந்த காரில் பொருத்தப்பட்ட 800சிசி என்ஜினை குறிக்கிறது. மாருதி சுஸுகி 800 காரின் ஆதிக்கத்தை முறியடிக்க பல்வேறு கார் நிறுவனங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டன. இந்த வரிசையில் பழமையான ஆட்டோமொபைல் நிறுவனமான சிபானி (Sipani) அறிமுகப்படுத்திய கார் தான் டால்பின் (Dolphin) ஆகும்.

டாடா மோட்டார்ஸ் போன்ற இன்றைய கால முன்னணி கார் நிறுவனங்களுக்கு முன்பே மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு போட்டியாக விளங்கிய சிபானியின் டால்பின் காரை மக்கள் அவ்வளவாக கண்டுக்கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆதலால் தற்போதைய காலத்தில் சிபானி டால்பின் காரை சாலையில் காண்பது மிக மிக அரிதான விஷயமாகும். பலர் இந்த சிபானி ஹேட்ச்பேக் காரை இதுவரையில் ஒருமுறை கூட நேரில் பார்த்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
ஆனால் கேரளாவில் ஒரு சிபானி டால்பின் கார் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால், இந்த காரை அதன் உரிமையாளர் இப்போதும் முறையாக பராமரித்து, பாதுகாப்பாக பயன்படுத்தக்கூடிய வகையில் வைத்திருப்பதுதான். சிபானி பெயரை கேட்டவுடன் ஏதோ வெளிநாட்டு நிறுவனம் என்று நினைத்துவிட வேண்டாம். இது பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட முழுக்க முழுக்க இந்திய ஆட்டோமொபைல் நிறுவனம் ஆகும்.

கார்களின் உற்பத்தியை சிபானி நிறுவனம் 1973இல் முதன்முதலாக துவங்கியது, அதாவது கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன்னர். முதலாவதாக படால் என்ற கார் சிபானி நிறுவனத்தில் இருந்து வெளிவந்தது. அதன்பின் 1982ஆம் ஆண்டில்தான் டால்பின் ஹேட்ச்பேக் கார் அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவே, மாருதி 800 கார் 1983இல் அறிமுகமானது. அப்படியென்றால், 800 காருக்கு முன்பாகவே சிபானி டால்பின் கார் விற்பனைக்கு வந்துவிட்டது.
மாருதி 800 கார் வட இந்தியாவில் நன்கு பிரபலமானதாக விளங்கியது. தென்னிந்தியாவிலும் நல்ல பிரபலம் தான் என்றாலும், வட இந்தியா அளவிற்கு இல்லை. இதனால் குறிப்பாக, தென்னிந்திய மார்க்கெட்டை டார்க்கெட் செய்து டால்பின் காரை சிபானி நிறுவனம் கொண்டுவந்தது. இருப்பினும் தென்னிந்திய அளவிலும் 800 காரை டால்பினால் முந்த முடியவில்லை என்பதே வரலாறு.

யுகே-இல் விற்பனையில் இருந்த ரெலியண்ட் கிட்டன் காரின் ரீபேட்ஜ்டு வெர்சனாக சிபானி டால்பின் உருவாக்கப்பட்டது. டால்பின் காரை சுற்றிலும் ஃபைபர் கிளாஸ் பாடிவொர்க் வழங்கப்பட்டது. இது அந்த கார் விற்பனையில் இருந்த சமயத்தில் பலரது கவனத்தை ஈர்த்தது. ஆனால் அதன்பின் 1983இல் வெளிவந்த மாருதி 800 உலோகத்திலான உடற்கூடை கொண்டதாக அறிமுகமானது. இதுவே டால்பினை காட்டிலும் 800 கார் பிரபலமானதற்கு முக்கிய காரணமாகும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: சிபானி டால்பின் மொத்தமாகவே வெறும் 5-6 வருடங்கள் மட்டுமே விற்பனையில் இருந்தது. ஆதலால் இதனை மாருதி 800 காரின் போட்டி மாடல் என்று சொல்வது கூட சரியாக இருக்காது. டால்பினில் 4-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டது. ஆனால் மாருதி 800 காரில் 3-சிலிண்டர் என்ஜின் மட்டுமே வழங்கப்பட்டது. இந்த ஒரு விஷயத்தில்தான் சிபானி டால்பின் காரின் கை ஓங்கி இருந்தது.


Click it and Unblock the Notifications









