உயிரை பறித்த ஸ்கோடா காரின் க்ரூஸ் கன்ட்ரோல்?
லண்டனில் நடந்த சாலை விபத்து ஒன்றில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். அவரது காரின் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அந்த கார் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.
மும்பையை சேர்ந்தவர் குஷால் காந்தி. வயது 32. லண்டனில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 2ந் தேதி தனது ஸ்கோடா ஆக்டாவியா காரில் லண்டன் அருகே உள்ள எம்40 விரைவு சாலையில் சென்றுள்ளார்.
அந்த விரைவு சாலையில் செல்லும்போது, காரின் ஆக்சிலரேட்டர் பெடலை மிதிக்காமலேயே காரை குறிப்பிட்ட வேகத்தில் செலுத்தும் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தை ஆன் செய்துள்ளார். அப்போது அந்த க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தில் பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால், கார் தாறுமாறான வேகத்தில் செல்லத் துவங்கியிருக்கிறது. இதையடுத்து, அதிர்ந்து போன குஷால் காந்தி, உடனடியாக 999 என்ற அவசர கால உதவி மையத்துக்கு போன் செய்து நிலையை சொல்லியிருக்கிறார்.

பலன் இல்லை
அங்கிருந்த அதிகாரியும் அவரது காரை நிறுத்துவதற்கான வழிமுறைகளை சொல்லியிருக்கிறார். புஷ் பட்டன் ஸ்டார்ட் மூலமாக கார் எஞ்சினை ஆஃப் செய்ய முயற்சித்தும் பலனில்லை. எஞ்சின் பிரேக் செய்தும் கார் நிற்கவில்லை என தெரிகிறது.

திணறல்
கிட்டத்தட்ட 8 நிமிடங்களுக்கு மேல் 999 அவசர கால உதவி மைய அதிகாரியுடன் இணைப்பில் இருந்துள்ளார். ஆனால், அந்த காரை நிறுத்த முடியாமல் திணறியிருக்கிறார் குஷால் காந்தி. இறுதியில், சாலையோரத்தில் லே-பை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த டிரக் ஒன்றின் மீது அந்த கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

கோர விபத்து
இந்த கோர விபத்தில் குஷால் காந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது, அந்த கார் மிக மோசமான நிலையில் உருக்குலைந்து கிடந்ததுடன், அதில் இருந்த குஷால் காந்தி உடலையும் போராடி வெளியில் எடுத்தனர்.

ஆய்வு
இந்த விபத்து குறித்து ஸ்கோடா ஆட்டோவின் தாய் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் அதிகாரிகளும் அந்த காரை ஆய்வு செய்தனர். அதில், அந்த காரில் பெரிய அளவிலான தொழில்நுட்பக் கோளாறுகள் இருந்ததற்கான வாய்ப்புகள் தெரியவில்லை என்று முடிவுக்கு வந்தனர்.

குழப்பம்
மேலும், கார் விபத்துக்குள்ளான விதத்தை வைத்தும் ஆய்வு செய்ததில் அவரது காரில் தொழில்நுட்பப் பிரச்னை இருந்ததற்கான விஷயங்கள் தெரியவில்லை என்றும் போலீசார் கூறியுள்ளனர். மேலும், குடிபோதையில் காரை செலுத்தினாரா என்ற கோணத்திலும் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், அவர் கார் ஓட்டியபோது மது அருந்தவில்லை என்று உடல்கூறு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

தற்கொலை எண்ணம்?
இந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடன் காரை செலுத்தினாரா என்ற சந்தேகமும் நீடிக்கிறது. ஏனெனில், காரை அவர் நிறுத்துவதற்கு முயற்சித்ததாக கூறினாலும், கார் விபத்தில் சிக்குவதற்கு 5 வினாடிகள் முன் வரை பிரேக் பெடலை இயக்கவில்லை என்றும், ஆக்சிலரேட்டர் பெடலை மிதித்து இருந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

அதிகாரி திட்டவட்டம்
அதேநேரத்தில், குஷால் காந்தியுடன் போனில் பேசிய அவசர மையத்தின் அதிகாரி, அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை முற்றிலும் மறுத்துள்ளார். அவர் நிச்சயம் தற்கொலை செய்து கொண்டிருக்கும் வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மர்மம்
எனவே, இந்த விபத்தில் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முடியாமல் போலீசார் குழம்பி இருக்கின்றனர். கார் விபத்துக்குள்ளானபோது மணிக்கு 152 கிமீ வேகத்தில் சென்று டிரக்கில் மோதியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதிர்ச்சி
மேலும், காரில் இருந்த கருப்புப் பெட்டி போன்ற வாய்ஸ் ரெக்கார்டர் சாதனமும், விபத்தில் சிக்கி முற்றிலும் சேதமடைந்துவிட்டதாம். இந்த சம்பவத்தால், க்ரூஸ் கன்ட்ரோல் பயன்படுத்துவோர் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications