காரில் இருந்த அனைவரும் உயிரோட இருக்காங்க!! லாரி மோதியும் சேதாரம் இவ்வளவு தானா? காரை புகழ்ந்து தள்ளும் ஓனர்!
சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஸ்கோடா குஷாக் கார் ஒன்றின் மீது அந்த வழியாக சென்ற லாரி எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. இருப்பினும் காருக்கும், உள்ளே இருந்தவர்களுக்கும் பெரியதாக எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும், இதற்கு காரின் வலிமையான கட்டமைப்பே காரணம் என்றும் காரின் உரிமையாளர் ஸ்கோடாவை புகழ்ந்து தள்ளியுள்ளார். இந்த சம்பவம் குறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
மைலேஜை மட்டுமே பார்த்து கார் வாங்கியது எல்லாம் அந்த காலம். இன்றோ காரில் இவ்வளவு ஆற்றல்மிக்க என்ஜின் உள்ளதா, இந்தெந்த அட்வான்ஸான தொழிற்நுட்ப வசதிகள் உள்ளனவா என்று பார்த்தே கஸ்டமர்ஸ் காரை வாங்குகின்றனர். இதனால் காரை தயாரிக்கும் நிறுவனங்களும் அதற்கேற்ப முடிந்தவரையில் எல்லா தொழிற்நுட்பங்களையும் வழங்க முயற்சிக்கின்றன.

ஆடம்பரத்திற்காகவும், சொகுசான பயணத்திற்காகவும் மட்டுமின்றி, புது புது தொழிற்நுட்பங்கள் வாகனம் மற்றும் அதனுள் இருக்கும் பயணிகளை விபத்தின்போது காக்கக்கூடியதாகவும் கண்டுப்பிடிக்கப் படுகின்றன. 360-கோண பார்க்கிங் கேமரா, ADAS உள்ளிட்டவற்றை அவற்றில் முக்கியமானவைகளாக சொல்லலாம். இவ்வாறு கண்டுப்பிடிக்கப்படும் கார் தொழிற்நுட்பங்கள் பல்வேறு விதமான சோதனைகளில் உட்படுத்தப்படும்.
இவ்வாறு தொழிற்நுட்பங்களை பெறும் கார்கள் அதன்பின் தனியாக க்ளோபல் என்சிஏபி, ஆசியன் என்சிஏபி போன்ற மோதல் சோதனைகளில் உட்படுத்தப்பட்டு மதிப்பெண்களை பெறும். இத்தகைய சோதனைகளில் சிறப்பாக செயல்பட்டு சில டாடா, மஹிந்திரா கார்கள் முழு 5 நட்சத்திர மதிப்பெண்களை பெற்றுள்ளன. ஸ்கோடா ஆட்டோவின் குஷாக் எஸ்யூவி காரும் 5 ஸ்டார்களை பெற்றுள்ளது.

முழு 5 ஸ்டார்களை பெற வேண்டுமெனில், காரில் அதிகளவில் பாதுகாப்பு தொழிற்நுட்ப வசதிகள் இருப்பது மட்டுமின்றி, காரின் உடலும் வலிமையானதாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, எந்தவொரு வாகனத்திற்கும் அடிப்படையான சேசிஸ் மிக வலிமையானதாக இருக்க வேண்டும். அவ்வாறு உருவாக்கினால் மட்டுமே, விபத்தில் சிக்கியுள்ள இந்த ஸ்கோடா குஷாக் காரை போல் லாரி மோதினாலும் சிறிய சேதாரங்களுடன் பயணிகளை காக்க முடியும்.
இத்தனைக்கும் இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ள லாரியில் சுமைகள் அதிகளவில் இருந்ததாக கூறப்படுகிறது. மும்பையின் கிழக்கு விரைவு சாலையில் கடந்த 2023 ஜூன் 8ஆம் தேதி காலை 6:45 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இந்த ஸ்கோடா குஷாக் கார் ஓட்டுனர் சிக்னலில் பச்சை நிற சிக்னலுக்காக காத்துக் நின்றுக் கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில், நிரம்ப நிரம்ப பொருட்களை ஏற்றிக் கொண்டுவந்த லாரி காரின் பின்பக்கத்தில் மோதியுள்ளது.

அதாவது சம்பவத்தின்போது, கார் சிக்னலில் நின்றிருந்துள்ளது, ஆனால்பின்னால் வந்த லாரி டிரைவர் சிக்னலில் நிற்கவில்லை. தான் லாரியை கண்ட பின்பும் அதனை நிறுத்துவதற்குள் காரின் மீது மோதிவிட்டதாக குஷாக் கார் டிரைவர் கூறுகிறார். இந்த மோதலில், குஷாக் காரின் பின்பகுதி சேதமடைந்துள்ளது. குறிப்பாக, காரின் பின்பகுதியின் இடதுப்பக்கம் அதிகளவில் சேதமடைந்துள்ளது.
அதேபோல், லாரியின் உலோக பம்பர் சேதமடைந்து இருப்பதையும் வீடியோவில் காணலாம். அப்படியென்றால் மோதல் எந்த அளவிற்கு பலமானதாக இருந்துள்ளது என்பதை யோசித்து பாருங்கள். இருப்பினும், மோதலில் ஏற்பட்ட அதிர்வுகளை கேபினுக்குள் உணர முடியவில்லை என்றும், உள்ளே இருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருந்ததாகவும், இதற்கு குஷாக் கார்களை தயாரிக்கும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்துக்கு தான் நன்றி சொல்லியாக வேண்டும் எனவும் குஷாக் கார் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சம்பவத்தை கேட்டதில், இந்த விபத்து எந்த அளவிற்கு இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது. இவ்வாறான விபத்துகள் நம் நாட்டில் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஸ்கோடா குஷாக் போன்ற வலிமையாக உருவாக்கப்படும் காராக இருந்ததினால் பிரச்சனையில்லை. அதுவே, விலை குறைவான காராக இருந்திருந்தால், பயணிகள் வெளியே தூக்கி வீசப்பட்டு இருப்பதற்கு கூட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









