Skoda கார்களின் வலிமையான தரத்துக்கு இதைவிட ஒரு சிறந்த சாட்சி தேவையில்லை... ஒருத்தருக்கு கூட காயமில்லையாம்!!
டிராக்டர் மற்றும் லாரி உடன் பயங்கரமாக மோதலுக்கு உள்ளான போதும் ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) கார் ஒன்று தொடர்ந்து இயக்கக்கூடிய நிலைமையில் காட்சி தந்துள்ளது. ஸ்கோடா கார்களின் தரத்தை பறைச்சாற்றுவதாக அமைந்துள்ள இந்த நிகழ்வை பற்றிய முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
கார்கள் ஒவ்வொன்றும் பல்வேறு விதமான சோதனைகளுக்கு பிறகே பொது விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. மார்க்கெட்டிற்கு வரும் கார்களை அவற்றின் அறிமுகத்திற்கு முன்னதாக முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டங்களில் பார்த்திருப்பீர்கள். ஏனெனில் இவ்வாறான கார்களின் சோதனை ஓட்ட ஸ்பை படங்களை அவ்வப்போது நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் செய்தி தளத்தில் பார்த்து வருகிறோம்.

இவ்வாறான சோதனை ஓட்டங்கள் கார் ஒன்று முழுவதுமாக தயார் ஆன பிறகே நடத்தப்படும். ஆனால் அதற்கு முன்னதாக, தொழிற்சாலையில் இருக்கும்போதே காரின் ஒவ்வொரு முக்கிய பாகங்களும் சோதிக்கப்படுகின்றன. ஆனால் எங்களை கேட்டால், எந்தவொரு காருக்கும், அதன் பாகங்களுக்கும் உண்மையான சோதனை நிஜ உலக விபத்தின் போதே இருக்கும். விபத்து போன்றதான மோதல் சோதனைகளிலும் விற்பனைக்கு வரும் கார்கள் உட்படுத்தப்படுகின்றன.
என்றாலும், நிஜ உலகில் மணிக்கு 120 -150kmph வேகத்தில் நமக்கு தெரிந்த டிரைவிங் ஸ்டைலில் சென்று கொண்டிருக்கும்போது விபத்து ஏற்பட்டால் அந்த கார் எந்த அளவிற்கு தாக்கு பிடிக்கிறது என்பதே அந்த காரின் உண்மையான தர சோதனை என்போம். அவ்வாறுதான் இந்த செய்தியில் நாம் பார்க்கவுள்ள ஸ்கோடா ஸ்லாவியா காரின் தரத்தையும் நம்மால் நிர்ணயிக்க முடிந்துள்ளது. இந்த ஸ்லாவியா காரின் விபத்து குறித்து இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவை கீழே காணலாம்.
இந்த விபத்தில் குறிப்பிட்ட ஸ்லாவியா கார் பலத்த மோதலுக்கு உள்ளாகியுள்ளது. இருப்பினும், விபத்திற்கு பிறகு காருக்குள் இருந்த பயணிகள் எளிமையாக வெளியே வந்துள்ளனர். இதைவிட முக்கியம், விபத்திற்கு பிறகும் இந்த குறிப்பிட்ட ஸ்லாவியா காரை தொடந்து இயக்க முடிந்துள்ளது. இந்த பயங்கர மோதலில், காரின் முன்பக்கம் தான் பலத்த அடி வாங்கியுள்ளது. காரின் முகப்பு பகுதியில் சக்கரம் இருக்கும் இடம் வரையில், இடது பக்க பேனல்கள் நசுங்கி போய் உள்ளன.
இருப்பினும் இந்த காரை தொடர்ந்து இயக்கலாம் என கூறப்படுவது உண்மையில் ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, உத்திர பிரதேச மாநில நம்பர் பிளேட் உடன் இருக்கும் இந்த குறிப்பிட்ட ஸ்கோடா ஸ்லாவியா கார் சம்பவத்தின்போது அலகாபாத் - கான்பூர் நெடுஞ்சாலையில் மணிக்கு 70கிமீ வேகத்தில் இயக்கப்பட்டு கொண்டிருந்துள்ளது. அந்த சமயத்தில் இந்த காருக்கு அருகில் அளவுக்கு அதிகமான செங்கற்களை ஏற்றி கொண்டு ஒரு டிராக்டர் வந்துள்ளது.

ஸ்லாவியா கார், டிராக்டர் இரண்டும் அருகருகே இயங்கி கொண்டிருந்த நேரத்தில் டிராக்டரின் ஒரு டயர் வெடித்துள்ளது. இதில் நிலை தடுமாறிய டிராக்டர் அருகில் சென்று கொண்டிருந்த, இந்த கதையின் நாயகனான ஸ்லாவியா கார் மீது மோதியுள்ளது. இந்த மோதலில் கண்ட்ரோலை இழந்த ஸ்லாவியா கார் ஓட்டுனர், அருகில் சென்று கொண்டிருந்த மற்றொரு லாரியின் வலது பக்கத்தில் காரை கொண்டுப்போய் சொருகி உள்ளார். இதனால்தான், காரின் இடதுப்பக்கம் வலுவாக சேதமடைந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்த சம்பவத்தின் முடிவில் ஸ்லாவியா காரின் தரத்தை பாராட்டும் அதேவேளையில், இந்த விபத்துக்கு முழுக்க முழுக்க காரணமான டிராக்டரை ஓட்டிவந்த டிரைவர் மீது அதிக கோபம் தான் ஏற்படுகிறது. மேலே பதிவிடப்பட்டுள்ள வீடியோவில் துருப்பிடித்த நிலையில் காட்சித்தரும் அந்த டிராக்டரை காணலாம். ஸ்லாவியா போன்ற தரமான, தொழிற்நுட்ப வசதிகள் மிகுந்த மாடர்ன் கார்கள் இயங்கி கொண்டிருக்கும் சாலைகளில் இவ்வாறான பாழடைந்த வாகனங்களும் இயங்கி கொண்டிருக்கின்றன என எண்ணும்போது டிரைவிங் செய்வதற்கே பயம் ஏற்படுகிறது.


Click it and Unblock the Notifications








