சைஸ் மேட்டர் இல்ல மச்சி... போயிங் ட்ரீம்லைனரிடம் வீழ்ந்த ஏர்பஸ் ஏ380 விமானம்!
கார் வாங்கப் போகும் பெரும்பாலானவர்கள் முதலில் கேட்கும் கேள்வி, "எவ்ளோ கொடுக்கும்" என்பதாகத்தான் இருக்கும். அதாவது, மைலேஜ் எவ்வளவு என்பதே முதல் கேள்வியாக அமைந்துவிடுகிறது. எது இருக்கிறதோ இல்லையோ, மைலேஜில் சிறந்த பல கார்கள் சந்தையில் வெற்றிகரமான மாடலாக கருதப்படுகிறது.
இது கார்களுக்கு மட்டுமில்லை, விமானங்களுக்கும் பொருந்தும். ஆம், உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் என்ற பெருமைக்குரிய ஏர்பஸ் ஏ380 விமானத்தின் விற்பனை நிலைமை மிக மோசமாக இருந்து வருகிறதாம். இதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா?

இந்த விமானத்தை வாங்க வரும் நிறுவனங்கள் கேட்கும் முதல் கேள்வி, எவ்ளோ கொடுக்கும் என்பதே ஏர்பஸ் நிறுவனத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. பெரும் வரவேற்பை பெறும் என்று ஏர்பஸ் நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏ380 பொய்க்கச் செய்துவிட்டது.

ஆசியாவிலிருந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு அதிக பயணிகளை ஏற்றிக் கொண்டு பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் இடைநில்லாமல் செல்வதற்கு ஏற்ற விமானமாக ஏ380 விமானத்தை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஏர்பஸ் உருவாக்கியது.

கிட்டத்தட்ட 600 பயணிகள் ஒரே நேரத்தில் செல்வதற்கு ஏதுவான இந்த இரண்டடுக்கு விமானமாக தயாரிக்கப்பட்டது. உலக அளவில் விமான நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக, லண்டனிலிருந்து நியூயார்க் செல்வதற்கான பரபரப்பு மிகுந்த நீண்ட தூர தடங்களில் இந்த விமானத்திற்க பெரிய அளவில் வரவேற்பு பெறும் என்று கருதியது. ஆனால், எதிர்பார்ப்பை ஏ380 விமானம் அந்த எதிர்பார்ப்புகளை தூள் தூளாக்கிவிட்டது.

அதிக இயக்குதல் கட்டணம், பராமரிப்பு செலவு, நீண்ட ஓடுபாதை மற்றும் இந்த விமானத்தை கையாள்வதற்கான வசதிகளுடன் கூடிய விமான நிலையங்களில் மட்டுமே தரை இறக்கும் வசதி என பல நடைமுறை சிக்கல்களை ஏர்பஸ் ஏ380 பெற்றுவிட்டது.

இதனால், பல முக்கிய நகரங்களின் விமான நிலையங்களுக்கு இந்த விமானத்தை வாங்கிய உடனே இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. எல்லாவற்றையும் விட, ஏர்பஸ் ஏ380 விமானத்தின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் மைலேஜ்தானாம். வசதிகள் பல இருந்தாலும், மைலேஜ் பெரும் குறையாக போய்விட்டது.

ஆம், ஏர்பஸ் ஏ380 விமானத்தின் மார்க்கெட்டை உடைப்பதற்காக 300 பேர் செல்வதற்கு ஏதுவாக அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனம் அறிமுகம் செய்த போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், அதிக எரிபொருள் சிக்கனம் என்பது மிக முக்கிய காரணம்.

விமான போக்குவரத்து கணக்கீட்டின்படி போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தில் ஒரு கேலன் பெட்ரோலில் ஒருவர் 102 மைல் பயணிக்க முடியும். ஆனால், ஏர்பஸ் ஏ380 விமானமானது ஒரு கேலனில் ஒரு பயணி 74 மைல் தூரம்தான் பயணிக்க முடியும் என்ற விகிதாச்சாரத்தை கொண்டுள்ளது.

இது ஏர்பஸ் ஏ380 விமானத்திற்கு மிகப்பெரிய குறையாக மாறிவிட்டது. சைஸ் எவ்வளவு பெரிசு என்பது முக்கியமல்ல. எரிபொருள் சிக்கனம்தான் இங்கே முக்கியம் என்று விமானப் போக்குவரத்து துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதனால், ஏர்பஸ் ஏ380 விமானத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. மாதத்திற்கு ஒரு விமானம் மட்டுமே தயாராகிறதாம். புதிய ஆர்டர்களும் அவ்வளவாக இல்லையாம்.

அதேநேரத்தில், போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்திற்கு 1,000க்கும் மேற்பட்ட புக்கிங் கிடைத்திருக்கிறதாம். ஏர்பஸ் ஏ380 விமானத்தை உருவாக்கி சூடுபட்டுக் கொண்டுள்ளது ஏர்பஸ் நிறுவனம். இதனால், எதிர்காலத்தில் பெரிய விமானங்களை உருவாக்கும் முயற்சிகள் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








