ஸ்மார்ட்-ஆக மாறிய குஜராத் பஸ்கள்... பயணிகளுக்கு அதிநவீன வசதிகள் அறிமுகம்... என்னென்ன தெரியுமா?
வதோதரா பேருந்துகள் ஸ்மார்ட்-ஆக மாறியுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், அரசாங்க பேருந்துகளின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. எனவே சொகுசு வசதிகளுடன் இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்யவே மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

ஆனால் சமீப காலமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அரசு பேருந்துகளின் தரம் மேம்பட்டு வருகிறது. சொகுசான இருக்கைகள், பெண்களின் பாதுகாப்பிற்கு சிசிடிவி கேமரா என பல்வேறு விதங்களிலும் அரசு பேருந்துகள் அசத்த தொடங்கி விட்டன. குறிப்பாக நாட்டின் முக்கியமான நகரங்களில் அதிநவீன வசதிகளுடன் கூடிய அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் குஜராத் மாநிலத்தின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றான வதோதரா, ஸ்மார்ட் சிட்டி பஸ் சேவையை தற்போது பெற்றுள்ளது. வதோதரா நகரில், ஐடிஎம்எஸ் எனப்படும் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை அமைப்பு (ITMS - Integrated Transport Management System) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் வதோதரா நகர பேருந்து பயனர்கள், தங்கள் பஸ்களின் இயக்கம் பற்றிய தகவல்களை தற்போது பெற முடியும். அத்துடன் வதோதரா நகர பேருந்து சேவையில் இன்னும் பல மேம்பாடுகளுக்கு, ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை அமைப்பு ஒரு காரணமாக அமைந்துள்ளது. வதோதரா நகரில், ஐடிஎம்எஸ் கடந்த புதன்கிழமை (ஜூலை 1ம் தேதி) அறிமுகம் செய்யப்பட்டது.

மொத்தம் 75 பஸ்களில், ஐடிஎம்எஸ்ஸை வதோதரா மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஐடிஎம்எஸ் அமைப்பின் ஒரு பகுதியாக வதோதரா பேருந்துகளில், பல்வேறு அதிநவீன வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதில், சிசிடிவி கேமராக்கள், பயணிகளுக்கான அறிவிப்புகளை வெளியிடும் டிஸ்ப்ளேக்கள், பேனிக் பட்டன், டிரைவர் டிஸ்ப்ளே யூனிட்கள் மற்றும் ஜிபிஎஸ் டிராக்கிங் ஆகியவை முக்கியமானவை. சிசிடிவி கேமராக்கள் மற்றும் பேனிக் பட்டன்கள், பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில், வதோதரா மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ செல்போன் அப்ளிகேஷன் மற்றும் வெப்சைட்டில், பேருந்துகளை லைவ் டிராக் செய்து கொள்ளலாம். அதே சமயம் பஸ்கள் எப்போது வரும்? என்ற எதிர்பார்க்கப்படும் தகவலை, பஸ் ஸ்டாண்டுகளில் உள்ள டிஸ்ப்ளேக்களில் காட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வசதி வெகு விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''பஸ் தனது ரூட்டில் இருந்து விலகி சென்றாலோ அல்லது பஸ் ஸ்டாப்பை தவிர்த்தாலோ, அதனை மானிட்டர் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அலர்ட் வரும். அத்துடன் பஸ் டிரைவர்கள் அதிவேகத்தில் பயணிப்பதை தடுப்பதற்கான வசதிகளும் உள்ளன.

இதன் மூலமாக பஸ் டிரைவர்கள் பாதுகாப்பாக ஓட்டுவார்கள்'' என்றனர். கொரோனா வைரஸ் ஊரடங்கில் மத்திய, மாநில அரசுகள் தற்போது படிப்படியாக பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகின்றன. இதனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தற்போது பொதுமக்களுக்கு பேருந்து சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இப்படிப்பட்ட சூழலில் வதோதரா நகரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி பேருந்து சேவைக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பஸ் சேவைகளை போன்று, நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது ஆட்டோ, டாக்ஸி சேவைகளும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








