ஸ்மார்ட் ரயில் பெட்டிகளில் நம் ஆவலைத் தூண்டும் 10 முக்கிய விஷயங்கள்!
வரும் 25ந் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கும் மத்திய ரயில்வே பட்ஜெட்டில் நவீன வசதிகள் கொண்ட ஸ்மார்ட் ரயில் பெட்டிகளை அறிமுகம் செய்வது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச தரத்திற்கு இணையான இந்த புதிய ரயில் பெட்டிகள் பயணிகளுக்கு மிக சொகுசான பயணத்தையும், கூடுதல் வசதிகள் மற்றும் பாதுகாப்பையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் ரயில் பெட்டிகளில் இடம்பெற இருக்கும் 10 முக்கிய விஷயங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

முன் அறிவிப்பு வசதி
தற்போது இரவு நேரங்களில் ரயில் எந்த ரயில் நிலையத்தில் நிற்கிறது என்பது தெரியாமல் பலர் தவிக்கின்றனர். இந்த குறையை போக்கும் விதத்தில், ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துடன் இயங்கும் சாதனத்தின் மூலமாக அடுத்து வரும் ரயில் நிலையம் குறித்த வாய்மொழி முன் அறிவிப்பு வசதி இடம்பெற இருக்கிறது. குறிப்பாக, புதிய இடங்களுக்கு செல்வோர்க்கும், வயோதிகர்களுக்கும் இது மிகச்சிறந்த வசதியாக அமையும்.

அவசர உதவி
அவசர சமயங்களில் ரயில் நடத்துனரை இன்டர்காம் மூலமாக தொடர்பு கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டிருக்கும். அவசர சமயத்தில் ரயிலை நிறுத்துவதற்கும், அடுத்த ரயில் நிலையத்தில் முன்கூட்டியே அவசர உதவியை பெறுவதற்கான முயற்சிகளை ரயில் நடத்துனர் மேற்கொள்வதற்கும் இது உதவிகரமாக இருக்கும்.

எல்இடி சார்ட்
எல்இடி விளக்குகள் மூலமாக பயணிகள் தெளிவாக பார்க்க உதவும் பெர்த் இண்டிகேட்டர்கள் மற்றும் பயணிகள் விபரங்களை தெரிந்துகொள்வதற்கான சார்ட்டுகள் முன் பதிவு ரயில் பெட்டிகளில் பொருத்தப்படும்.
Photo Credit: Christopher Doyle/Flickr

வைஃபை வசதி
ஸ்மார்ட் ரயில் பெட்டிகளில் வைஃபை இணைய தொடர்பு வசதியும் கொடுக்கப்பட்டிருக்கும். ஸ்மார்ட்போன் யுகத்தில் இது மிகவும் சிறப்பான வசதியாக அமையும்.
Photo Credit: Big Dubya/Flickr

காபி மெஷின்
நீண்ட தூர ரயில்களில் ஒவ்வொரு ஸ்மார்ட் பெட்டிக்கும் தனித்தனியாக காபி மற்றும் தண்ணீர் வழங்கும் மெஷின் பொருத்தப்படும். இதனால், வேண்டும் நேரத்தில் பணத்தை செலுத்தி காபி, டீ.,யை பெற்றுக் கொள்ளலாம். ரயில் விற்பனையாளருக்காக காத்திருக்கும் அவசியம் தவிர்க்கப்படும்.
Photo Source: Facebook

மொபைல்போன் சார்ஜர்
ஸ்மார்ட் ரயில் பெட்டிகளில் ஒவ்வொரு பயணிக்கும் தனித்தனியாக மொபைல்போன் சார்ஜர் கொடுக்கப்பட்டிருக்கும். இது மிகவும் சவுகரியமான வசதிகளில் ஒன்றாக இருக்கும்.
Photo Credit: Elliott Scott/Flickr

ஆட்டோமேட்டிக் கதவுகள்
மெட்ரோ ரயில் பெட்டிகளை போன்று தானியங்கி முறையில் கதவுகள் மூடி, திறக்கும் வசதி கொடுக்கப்பட்டிருக்கும். இவை சென்சார் மற்றும் மைக்ரோபிராசசர் மூலமாக கட்டுப்படுத்தப்படும். இதனால், ரயில் பெட்டிகளில் வெளியாட்கள் நுழைவது தடுக்க முடியும் என்பதோடு, படிக்கட்டுகளில் பயணம் செய்து விபத்தில் சிக்கும் அவலமும் முடிவுக்கு வரும்.
Photo Credit:Flickr

பயோ டாய்லெட்
ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் பயோ-டாய்லெட் எனப்படும் நவீன கழிப்பறை வசதி இருக்கும். இந்த கழிவறைகள் சென்சார் மூலமாக போதிய தண்ணீரை பீய்ச்சியடித்து, கழிவறையை சுத்தப்படுத்தும். அத்துடன், கழிவறைகளில் கைகழுவுவதற்கான சோப் மற்றும் ஹேண்ட் ட்ரையர் எந்திரம் ஆகியவையும் பொருத்தப்பட்டிருக்கும். இதன்மூலமாக, சுகாதாரம் பேணிக்காக்கப்படும்.

சிசிடிவி கேமரா
ஒவ்வொரு ஸ்மார்ட் ரயில் பெட்டியிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருக்கும். இதன்மூலமாக, உச்சபட்ச பாதுகாப்பு உறுதி செய்யப்படும். அத்துடன், புகை மற்றும் தீப்பற்றுவதை கண்டறிந்து எச்சரிக்கும் அலாரமும் இருக்கும்.
Photo Credit: Wikimedia

சர்வதேச தரம்
ஸ்மார்ட் ரயில் பெட்டிகள் மிக சொகுசான இருக்கைகள் மற்றும் வசதிகளை கொண்டதாக இருக்கும். இது பயணிகளுக்கு புதியதொரு பயண அனுபவத்தை வழங்கும். வரும் 25ந் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கும் ரயில்வே பட்ஜெட்டில் இந்த ஸ்மார்ட் ரயில் பெட்டிகளும் அறிமுகம் செய்யப்படுவதாக வெளியாகியிருக்கும் தகவல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications








