நல்ல மனுஷன்யா... அப்பா பரிசாக கொடுத்த காரை மகன் என்ன செய்தார் தெரியுமா? பாராட்டாம இருக்க முடியல...
அப்பா பரிசாக கொடுத்த காரை வைத்து மகன் செய்து வரும் நல்ல காரியத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருவதால், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தற்போது ஆம்புலன்ஸ்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே அவசரமாக மருத்துவமனைக்கு சென்றாக வேண்டிய நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை எல்லாம் கடவுள் போல் வந்து காப்பாற்றி வருகிறார் ஹாங்னோ கோன்யாக் (Hongnao Konyak). 39 வயதாகும் இந்த சமூக சேவகர், நாகலாந்து மாநிலத்தில் உள்ள மோன் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் தனது காரை, ஆம்புலன்ஸாக மாற்றி அவசர உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவி செய்து கொண்டுள்ளார்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இவர் தற்போது வரை 48 கர்ப்பிணி பெண்களை சரியான நேரத்தில், மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்துள்ளார். இதன் மூலம் அவர்களின் உயிரை மட்டுமல்லாது, அவர்களது குழந்தைகளின் உயிரையும், ஹாங்னோ கோன்யாக் காப்பாற்றியுள்ளார். இதுதவிர மேலும் 100க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கும், ஹாங்னோ கோன்யாக் உதவி செய்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியரின் மகன் ஆவார்.

இந்த சேவை தொடர்பாக ஹாங்னோ கோன்யாக் கூறுகையில், ''ஒரு நாள் எனது இருப்பிடத்திற்கு அருகே ஒரு நோயாளி போராடி கொண்டிருந்தார். ஆம்புலன்ஸ் வருவது மிகவும் கடினமாக இருந்தது. அப்போது எனது காரை பயன்படுத்தி, அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். இன்னும் நிறைய பேருக்கு உதவி செய்ய வேண்டும் என இந்த செயல்பாடுதான் என்னை தூண்டியது.

எனது காரை பயன்படுத்தி நோயாளிகளின் உயிரை காப்பாற்ற முடியும் என்று நான் நினைத்தேன். இந்த பணிகளின்போது நிறைய நாள் இரவில் நான் தூங்காமல் இருந்துள்ளேன். முதல் நோயாளிக்கு உதவி செய்தவுடன், நான் இந்த சேவையை தொடர வேண்டும் என்று நினைத்தேன். இதற்காக நான் மாவட்ட நிர்வாகத்தை அணுகியபோது, எனக்கு அனுமதி கிடைத்தது.

அத்துடன் எனது சேவை தொடர்பாக விளம்பரமும் செய்யப்பட்டது. இதன் மூலம் என்னை பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்ள தொடங்கினார்கள். அதன்பின் எனக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள் வர தொடங்கி விட்டன. ஆம்புலன்ஸாக மாற்றப்பட்டுள்ள எனது காரில், நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக, எரிபொருளுக்கு நிறைய செலவிட்டுள்ளேன்.

மோன் பகுதியில் செயல்படும் ஒரு எரிபொருள் நிலையத்தில் இருந்து மட்டும்தான் எனக்கு ஒரே ஒரு உதவி கிடைத்தது. அவர்கள் எனக்கு 50 லிட்டர் எரிபொருளை வழங்கினார்கள். இந்த காரை என் தந்தை எனக்கு பரிசாக வழங்கியிருந்தார். அந்த கார் மக்களின் உயிரை காப்பாற்ற பயன்படுவதை பார்த்து அவர் மகிழ்ச்சியடைந்தார்'' என்றார்.

வாகனங்களை பலர் பல வழிகளில் மாடிஃபிகேஷன் செய்து வருகின்றனர். ராட்சத டயர்களை பொருத்துவது போன்ற மாடிஃபிகேஷன்கள் மூலம் அவர்கள் விதிகளை மீறுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில், காரை ஆம்புலன்ஸாக மாற்றி, நோயாளிகளின் உயிரை காப்பாற்றி வரும் ஹாங்னோ கோன்யாக் பாராட்டப்பட வேண்டியவர்தான்.

மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ காரை, அவர் ஆம்புலன்ஸாக மாற்றி நோயாளிகளுக்கு உதவி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹாங்னோ கோன்யாக்கின் சேவையை மோன் மாவட்ட நிர்வாகம் பாராட்டியுள்ளது. அத்துடன் சமூக வலை தளங்களிலும் அவருக்கு பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








