உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய போர்க்கப்பல் ஐஎன்எஸ் கொச்சி - சிறப்புகள்!
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது மிகப்பெரிய போர்க்கப்பலான ஐஎன்எஸ் கொச்சி நேற்று கடற்படை சேவையில் இணைக்கப்பட்டது. மும்பை கடற்படை தளத்தில் இதற்கான நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கலந்து கொண்டு, இந்த புதிய போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டிருக்கும் புதிய ஐஎன்எஸ் கொச்சி போர்க்கப்பலின் சிறப்புகளை ஸ்லைடரில் காணலாம்.

மும்பையில் கட்டுமானம்
மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டுமானத் தளத்தில் இந்த புதிய ஐஎன்எஸ் கொச்சி போர்க்கப்பல் கட்டமைக்கப்பட்டது. இந்த போர்க்கப்பல் 164 மீட்டர் நீளமும், 7,500 டன் எடையும் கொண்டது.

உள்நாட்டு தயாரிப்பு
புராஜெக்ட் 15ஏ திட்டத்தின்கீழ், கடந்த ஆண்டு கடற்படையில் இணைக்கப்பட்ட ஐஎன்எஸ் கொல்கத்தாவுக்கு அடுத்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டாவது மிகப்பெரிய போர்க்கப்பல். இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு இந்த வரிசையில் ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் கடற்படையில் இணைக்கப்பட உள்ளது.

மதிப்பு
ரூ.4,000 கோடி மதிப்பில் இந்த புதிய போர்க்கப்பல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து, ரூ.30,000 கோடி திட்ட மதிப்பில் மேலும் 4 ஏவுகணை அழிப்பு போர்க்கப்பல்கள் மலேகான் கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட உள்ளது. இது இந்திய கடற்படையின் 10வது போர்க்கப்பலாக இணைந்துள்ளது.
Recommended Video


வடிவமைப்பு
இந்திய கடற்படை இயக்குனரகத்தின் கடற்படை வடிவமைப்பு பிரிவு இந்த கப்பலை வடிவமைத்து கொடுத்துள்ளது. இந்த போர்க்கப்பலில் அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் மற்றும் ஆயுதங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

எஞ்சின்
இந்த போர்க்கப்பலில் 4 எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. 7,500 டன் எடை கொண்ட இந்த கப்பலை இவை 30 நாட்டிக்கல் மைல் வேகம் வரை செலுத்தும் திறன் படைத்தவை. வெளிநாட்டு போர்க்கப்பல்களைவிட கூடுதல் வேகத்தில் பயணிக்கும் என்று ஒப்பீடு கூறுகின்றனர். தொடர்ந்து, 3,300 நாட்டிக்கல் மைல் தூரம் வரை இயக்க முடியும்.

முக்கிய சிறப்பு
விண்ணில் ஏவுகணைகளை செங்குத்தாக செலுத்துவதற்கான வசதி, நீண்ட தூரத்திற்கான கடற்கரை மற்றும் கடல் பகுதி இலக்குகளை குறிவைத்து தாக்கி அழிக்கும் ஆயுதங்கள் மற்றும் அதனை துல்லியமாக ஏவுவதற்கான ரேடார்கள், ஏவுதளம், ஏவுகணைகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

கண்காணிப்பு வசதி
இந்த போர்க்கப்பலில் எதிரிகளின் நடமாட்டம் மற்றும் ஏவுகணைகளை கண்டறிந்து எச்சரிக்கும் வசதி மற்றும் அதனை முறியடிப்பதற்கான ஒருங்கிணைந்து செயல்படும் கருவிகளை இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடேட் மற்றும் நம் நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகமும் இணைந்து உருவாக்கியுள்ளன.

ஆயுதங்கள்
வான் வழி மற்றும் தரைவழி மூலமாக வரும் தாக்குதல்களை முறியடிப்பதற்காக இந்த போர்க்கப்பலில் 76 மிமீ விட்டம் கொண்ட சூப்பர் ரேபிட் கன் மவுண்ட் மற்றும் ஏகே630 ஆகிய பீரங்கிகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ராக்கெட் லாஞ்சர்கள், பிரம்மோஸ் ஏவுகணைகள் போன்றவற்றுடன் எதிரிகளுக்கு அச்சமூட்டும் விஷயங்கள் பல உள்ளன.

கடற்படை வீரர்கள்
இந்த கப்பலில் 40 கடற்படை அதிகாரிகளும், 350 கடற்படை வீரர்களும் பணியாற்றுவர். இந்த கப்பலில் இருந்து இரண்டு சீ கிங் அல்லது சேட்டக் ஹெலிகாப்டர்களை இயக்க முடியும். மும்பையை தலைமையிடமாக கொண்ட மேற்கு மண்டல கடற்படையின் தலைமை தளபதியின் கட்டுப்பாட்டில் இந்த போர்க்கப்பல் இயங்கும்.


Click it and Unblock the Notifications